nns1

சுமார் மூன்று மாதகால கண்ணாமூச்சி ஆட்டத்துக்குப் பிறகு, படப்பிடிப்புக்கு முகம் காட்ட ஆரம்பித்திருக்கிறார் சமந்தா.

நேற்று ஹைதராபாத்தில் நடந்த ‘ஆட்டோ நகர் சூர்யா’ படப்பிடிப்பில் சித்தார்த்துடன் இணைந்து நடித்த சமந்தா, தான் முற்றிலும் குணமடைந்து விட்டதாகவும், இனி நாலுகால் பாய்ச்சலில் படப்பிடிப்புகளில் கலந்துகொண்டு தன்னால் ஏற்பட்ட தாமதத்தை சரிக்கட்ட முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இடைப்பட்ட காலத்தில் என்ன காரணத்துக்காக சமந்தா சிகிச்சை எடுத்து வருகிறார் என்பது குறித்து அவர் தரப்பில் இருந்து முறையான செய்தி தரப்படாததால் கிளம்பிய வதந்திகள் ஏராளம்.

உச்சக்கட்டமாய் சில தெலுங்கு இணைதளங்கள், ‘அருந்ததி’ திரைக்கதை ஸ்டைலில், ’சமந்தாவின் அபார வளர்ச்சி பிடிக்காத சிலர் அவர் மீது பில்லி சூனியத்தை ஏவி விட்டதாகவும், அதை எடுத்துவிட்டு பரிகாரம் பண்ணுவதற்காக கேரளாவிலிருந்து பிரபல மாந்த்ரீகவாதி வினீத் பட் என்பவர் அழைத்துவரப்பட்டு ,சமந்தாவின் வீட்டில் மூன்றுமணி நேர யாகம் நடத்தி, பக்கத்திலிருந்த சுடுகாட்டில் புதைக்கப்பட்டிருந்த சில எலும்புக்கூடுகளை தோண்டி எடுத்து சதியை முறியடித்ததாகவும் உறியடித்திருந்தன.

இன்று ட்விட்டரில், தனது காரில் அமர்ந்திருக்கும், லேட்டஸ்ட் போட்டோ ஒன்றை வெளியிட்டு, இந்தக் கற்பனைகள் குறித்து கமெண்ட் அடித்த சமந்தா, ‘ உங்கள் கட்டுக்கதைகள் அத்தனையும் சுவாரசியமாகவே இருந்தன. அனைத்தையும் ரசித்தேன். பாவம் அந்தக்கதைகளை இத்தோடு விட்டுவிடுங்கள் அவை கொஞ்சமாவது ரெஸ்ட் எடுக்கட்டும்’ என்றிருக்கிறார்.

பெல்லகொண்டம் சுரேஷ் தயாரிப்பில் நந்தினி ரெட்டி இயக்கும்,’ ஆட்டோ நகர் சூர்யா’ மற்றும் ‘எவுடு’ ஆகிய இரு படங்களின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை முடித்துக்கொடுத்த பிறகுதான் சமந்தா கவுதம் மேனனின் ‘நீதானே என் பொன் வசந்தம்’ படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியும் என்பது கூடுதல் செய்தி.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.