ஒரு வழியாக கோச்சடையான் மே 9ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது என அறிவித்துவிட்டார்கள். அப்பாடா அது ஓடினாலும் சரி ஓடாவிட்டாலும் சரி இனி அடுத்த பட வேலைகளில் இறங்கலாம் என்று முடிவு செய்துவிட்டார் ரஜினி.
பிரியாமணி இரட்டை வேடங்களில் நடித்த சாருலதா என்கிற படத்தை இயக்கிய பொன்.குமரன் கதை, வசனம் எழுத திரைக்கதை எழுதி இயக்க இருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார். அவர் ரஜினியை வைத்து இயக்கவிருந்த ‘ராணா’ ட்ராப் ஆனதாலும், கோச்சடையானை அவர் இயக்குவதாக இருந்து பாதியில் சௌந்தர்யா உள்ளே புகுந்து இயக்க ஆரம்பித்துவிட்டதாலும் தொடர்ந்து அவருக்கு உதவி செய்யவேண்டிய நிலை. இதனால் வேறு படங்களே இயக்காமல் ஓடிவிட்டது. இப்போதாவது ரஜினியின் அடுத்தபடத்தை இயக்க வாய்ப்பு வந்துள்ளது குறித்து மகிழ்ச்சியாக இருக்கிறார்.
படத்தில் ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்க இருக்கிறார். இன்னொரு ஜோடியாக பாலிவுட்டைச் சேர்ந்த நடிகை சோனாக்ஷி சின்ஹாவை நடிக்க வைக்க பேசிவருகிறார்களாம். ரஜினி சார் ! இன்னும் எத்தனை நாளைக்கு ஹீரோயின்களை மரத்தைச் சுற்றி விரட்டும் ஹீரோவாக நடிப்பீர்கள்? உங்களது நிஜ வயதிற்கேற்ற பாத்திரங்களை மறைந்த இயக்குனர் பாலுமகேந்திரா போல வயதான பாத்திரம் கொண்ட கதையமைத்து ஹீரோவாகவே நடிக்கலாமே. உங்களிடமிருந்து நடிப்பு என்பதைப் பார்த்த படமாக கடைசியாக ‘ஆறிலிருந்து அறுபதுவரை’ மட்டுமே ஞாபகம் இருக்கிறது.
மேக்கப்பே போடாமல் நீங்கள் நடித்தாலும் உங்கள் ரசிகர்கள் கண்டிப்பாக அதைப் பார்ப்பார்கள்.