நேற்று இரவு 12 மணி வரை தல55’ ஆக இருந்து ‘என்னை அறிந்தால்’ ஆக மாறியுள்ள அஜித்- கவுதம் கூட்டணியின் படம் தான் தற்போதைக்கு இணையத்தில் உச்சக்கட்ட பரபரப்பு.

மேற்படி டைட்டிலை ஒரு சில விஜய் ரசிகர்கள் கலாய்க்க, அதற்குஅஜித் ரசிகர்கள் பதிலடிகொடுக்கவுமாய் ஒரு பக்கம் யுத்தம் தொடர, அடுத்த கட்டமாய் கதை என்ன என்று கிளறவேண்டியதுதானே மக்கள் வேலை.

இதோ முன்னத்தி ஆளாய் ‘உன்னை அறிந்தால் படத்தின் கதை இதுதான் என்று அடித்துச்சொல்கிறார். எழுத்தாளரும், எதிர்கால தமிழக முதல்வர் கனவில் இருப்பவருமான யுவகிருஷ்ணா

அவர் என்ன சொல்கிறார். படியுங்கள்.

’உலகின் நெ.1 கார்ப்பரேட் குழுமத்தின் தலைவர் ஒரு தமிழர். வாரிசுகள் இல்லாதவர் என்பதால் குழுமத்தின் அடுத்தக்கட்ட நிலையில் இருப்பவர்களின் சூழ்ச்சியால் கொல்லப்படுகிறார்.

ட்விஸ்ட்… மரணமடைந்தவரின் உயிலில் தன்னுடைய வாரிசு யாரென்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. தன்னுடைய சொந்தக்கார பையன் ஒருவனை வாரிசுதாரராக அவர் நியமித்து பல வருடங்களுக்கு முன்பாகவே கோர்ட்டில் பதிவு செய்திருப்பதை அவரது வக்கீல் உறுதி செய்கிறார்.

அதே நேரத்தில் அந்த வாரிசு இலங்கையில் ஒரு சிறைச்சாலையில் கிரிமினல் குற்றவாளியாக இருக்கிறார். பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை எதிர்காலத்தில் நிர்வகிக்கப் போகிறவனுக்கு உலக நடப்பு தெரியவேண்டும், சவால்களை உணரவேண்டும் என்பதற்காக மிக சாதாரணமானவனாக-அனாதையாக அவனை தன்னுடைய நேரடித் தொடர்பு இல்லாமல் மறைமுகமாக வளர்த்திருந்தார் அந்த தொழில் அதிபர். இவன் தான் படத்தின் நாயகன்.

சிறைக்குள் இருந்த உலகின் புதிய நெ.1 பணக்காரர் தப்பிவந்து குழும நிறுவனங்களின் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார். இவரையும் கொல்ல சதிகாரர்கள் சதி செய்கிறார்கள். கார்ப்பரேட் கொலை விளையாட்டு ஆரம்பம். கூடவே இருக்கும் கண்ணுக்கு தெரியாத எதிரிகளோடு நாயகன் ஆடும் சடுகுடு விளையாட்டும், க்ளைமேக்ஸ் வெற்றியும்தான் இரண்டாம் பாதி.

’லார்கோ வின்ச்’ என்கிற யதார்த்த நாயகனை முன்வைத்து காமிக்ஸ் தொடராக சக்கைப்போடு போடும் இந்த கதையை (ஐரோப்பாவில் படமாகவும் எடுக்கப்பட்டது) கவுதம் மேனன் எடுக்கப் போகிறார் என்று நீண்டகாலமாகவே பேசப்பட்டு வந்தது. விஜயை வைத்து ‘யோஹன் அத்தியாயம் ஒன்று’ என்கிற பெயரில் இதைதான் கவுதம் இயக்குகிறார் என்றும் உறுதியாக சொல்லப்பட்டது. ஏதோ காரணங்களால் கவுதமும் விஜய்யும் இணையவில்லை.

எனவே இதே கதையை சூர்யாவுக்கு கவுதம் சொன்னார் என்கிறார்கள் (சாருநிவேதிதா இந்த படத்துக்குதான் வசனம் எழுதுவதாக இருந்தது). சூர்யாவுக்கு அந்த கதை பிடிக்கவில்லை என்பதால் அடுத்து அஜித்துக்கு வந்து சேர்ந்திருக்கிறது. ‘தல-55’ என்கிற ‘என்னை அறிந்தால்’, கதை இதுவாக இருந்தால் தல ரசிகர்களுக்கு டபுள் மங்காத்தா கன்ஃபார்ம். ஆனால், தலயை விட தளபதிக்குதான் இந்த சப்ஜெக்ட் பக்காவாக செட் ஆகியிருக்கும்.

Related Images: