ராதா மோகனின்  அடுத்த படமான ‘உப்பு கருவாடு’  தயாரிப்பு வேலைகள் முடிந்து போஸ்ட் புரொடக்ஷனில் இருக்கிறது.. ராம்ஜி நரசிம்மனின் ‘பர்ஸ்ட் காப்பி பிக்சர்ஸ்’ மற்றும் ராதா மோகனின் ‘நைட் ஷோ பிக்சர்ஸ்’  ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன. படத்தை பற்றி ராதா மோகன் கூறுகையில்..

“இந்த படத்தின் கதை ஒருவருடைய லட்சியத்துக்கும் , அந்த லட்சிய பயணத்தை தொடர விடாமல் சிறு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது நமக்குள்  நாமே மேற்கொள்ளும் சமரசத்துக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை பற்றியது ஆகும். லட்சியம் உள்ளவர்கள் அதில் சமரசம் ஆகி விடக் கூடாது. இந்த சமரசமே நம்மை லட்சிய பயணம் மேற்கொள்ள விடாமல் தடுக்கும். இந்தக் கதையை நகைசுவை கலந்து வழங்குகிறேன்.

நகைச்சுவை படங்கள் மீது எனக்கு எப்பொழுதுமே ஒரு தீரா மோகம் உண்டு. என்னுடைய முந்தைய படங்களில் கூட நகைசுவை பிரதானமாக தெரியும். ‘உப்பு கருவாடு’ படத்தில் எனக்கு அதற்கேற்ப
சரியான கதை களம் அமைந்து இருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. இப்படத்தில் கருணாகரனுடன், நந்திதா இணைந்து நடித்து உள்ளார். எம் எஸ் பாஸ்கர்,மயில் சாமி, குமாரவேல்,சாம்ஸ், குமாரவேல், நாராயணன், புது முகம் ரக்ஷிதா , சரவணன் மற்றும் ‘டவுட்’ செந்தில் ஆகியோர் நடிக்கின்றனர். மகேஷ் முத்துசாமி ஒளிபதிவு செய்கிறார். பிரசித்தி பெற்ற கிட்டார் கலைஞர் ஸ்டீவ் வாட்ஸ் இசை அமைப்பாளராக  இந்த படத்தில் அறிமுகமாகிறார்.மதன் கார்த்தி பாடல்கள் இயற்ற, கதிர்  அரங்கமைக்க,  ஜெய் படத்தொகுப்பு செய்கிறார். பிரபல நடன அமைப்பாளர் சதீஷ் நடனம் அமைக்கும் பணியுடன் இந்த படத்தில் ஒரு முக்கிய கதா பாத்திரத்திலும் நடிக்கிறார். கதை, வசனம்- பார்த்திபன். திரைக் கதை அமைத்து நானே  இயக்குகிறேன். கடல் சார்ந்த பகுதிகளில் முழுவதுமாக படமாக்கப்படும் ‘ உப்பு கருவாடு’ அந்த மனிதர்களின் வாழ்கை முறையை  சித்தரிக்கும் படமாகவும் இருக்கும்” என தெரிவித்தார்.

Related Images: