இது எத்தனையாவது முறை என்று சொல்லமுடியவில்லை. நேற்றும் இணையங்கள் முழுவதும் ‘மனோரமா ஆச்சியின் மரணச்செய்திகளும், அதற்காக இரங்கல் தெரிவிக்கும் கமெண்டுகளுமாக. இது எந்தவிதமான வியாதி என்று சொல்ல?
 தமிழ்த் திரையுலகம் தந்த முதல்வர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ஆர் என ஐவருடன் நடித்த பெருமைக்குரியவர் மனோரமா.
அவர் சுமார் 5000-த்திற்கும் மேற்பட்ட நாடகங்களிலும், 1200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்து உலகப் புகழ்பெற்ற கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். தற்போது மனோரமாவிற்கு 72 வயதாகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மூட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட மனோரமாவுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. இதனால், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைத் தவிர்த்து வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில், திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மனோரமா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. மேலும், அவரது உடல்நிலை மிகவும் அபாயகரமான கட்டத்தில் இருப்பதாகவும், அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த  தகவலை ஒட்டித்தான் இணையத்தில் சிலர் ஆச்சியின் மரணச்செய்தியை வெளியிட்டுள்ளனர்.
ஆனால், இத்தகவல் வெறும் வதந்தி என மனோரமாவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மனோரமாவின் பேரனான டாக்டர் ராஜா கூறுகையில், ‘பாட்டி நலமுடன் இருக்கிறார். வழக்கம் போல் மருந்துகள் எடுத்துக் கொண்டு அவரது பணிகளை தொடர்ந்து வருகிறார். இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்’ எனத் தெரிவித்துள்ளார்.

ஆச்சி குணமாகி விரைவில் வீடு திரும்பனும்னு வேண்டிக்காட்டியும் பரவாயில்லை. எதுக்கெடுத்தாலும் சாவு மேளம் அடிக்கிறதை கொஞ்சம் நிறுத்துங்கப்பா.

Related Images: