1960 களில் சினிமாவில் நுழைந்து இன்று நான்காம் தலைமுறை நடிகர்களோடு நடித்து வரும் நடிகை லக்ஷ்மி தற்போது ‘மூணே மூணு வார்த்தை’  படத்தில் நடித்து வருகிறார். தமிழ் , தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகி வரும் ‘மூணே மூணு வார்த்தை’ பற்றி அவரிடம் பேசியபோது…

“இப்படத்தில் நடித்த அர்ஜுன், வெங்கி, அதிதி போன்ற அனைவருமே எனக்கு பரிச்சயம் இல்லாதவர்கள். இவர்களுடன் நடிப்பது எனக்கு புது அனுபவமாய் இருந்தது. நகைச்சுவை கலந்த காதல் படத்தை முழுக்க முழுக்க வித்தியசமான கதை களத்தில் தந்திருக்கிறார் இயக்குனர் மதுமிதா.  எஸ்.பி. சரண் தயாரித்திருக்கிறார். இது ஒரு காமெடிப் படம்.

முன்பு எஸ்.பி.பி. சாருடன் தெலுங்கில் ‘மிதுனம்’ என்ற படத்தில் நடித்தது பெரிதும் பேசப்பட்டது. அதை தொடர்ந்து தமிழில் நாங்கள் இணையும் முதல் திரைப்படம்’ மூணே மூணு வார்த்தை’. முதலில் எங்களை நாயகனின் அப்பா அம்மாவாகத்தான் நடிக்க சொன்னார் மதுமிதா. நாங்கள் சற்று தயங்கியதை தெரிந்தவுடன்  உடனே சில மாறுதல்களுடன் தாத்தா பாட்டி கதாப்பாத்திரங்களாக மாற்றியமைத்தார் இயக்குனர். ”

“எனக்கு பாட்டியாக நடிப்பதில் எந்த தயக்கமும் இல்லை. உண்மையில் நான் பாட்டிதானே. இன்றைய காலகட்டத்தில் பெண் இயக்குனர்கள் மிகுந்த அனுபவத்தோடும், சினிமாவை பற்றிய ஆழந்த சிந்தனையுடன் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். மதுமிதா தனக்கு என்ன வேண்டுமென்று நன்கு அறிந்தவர். அத்தகைய தெளிவு இல்லாமல் குறுகிய காலத்தில் இரு மொழி படத்தை இயக்குவது சாத்தியமன்று. தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் நிலைமைதான் மிகவும் பரிதாபத்துக்கு உரியவை. அவர்கள்  இன்னும் வியாபாரத்துக்கான  ஒரு பொம்மையாகத்தான் பார்க்கப்படுகிறார்கள்.” என்றார் லட்சுமி.

எல்லா சுதந்திரங்களையும் பெண்கள் பெற்றுவிட்டதாக கூறப்படும் வெளிநாட்டுப் படங்களில் கூட பெண்களை பொம்மையாக கடைவிரிக்கும் வியாபாரம் இன்று கூட இல்லாமலில்லை மேடம். நம்ம ஊர்ல இதெல்லாம் குறைய ரொம்ப நாளாகும்.

Related Images: