அத்தனைக்கும் ஆசைப்படு படம் மூலம் இயக்குநராக மாறினார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி!

தமிழ் சினிமாவில் இன்னுமொரு தயாரிப்பாளர் இயக்குநராக அவதாரமெடுக்கிறார். அவர் சுரேஷ் காமாட்சி. அவர் முதலில் இயக்கும் படத்துக்கு ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

அமைதிப் படை 2, கங்காரு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, சினிமாவுக்கு வந்ததே இயக்குநராவதற்குத்தான். பாரதி கண்ணம்மா உள்ளிட்ட வெற்றிப் படங்கள் தந்த பங்கஜ் புரொடக்ஷன்ஸில் பணியாற்றியவர். அமைதிப் படை 2 மூலம் தயாரிப்பாளராக மாறினார்.

கங்காருவுக்குப் பிறகு, அடுத்து தயாரிக்கும் படத்தை தானே இயக்குகிறார்.

இந்தப் படத்தின் நாயகனாக முன்னணி ஹீரோ ஒருவர் நடிக்கிறார்.  நாயகியாக கங்காரு படத்தில் நடித்த ப்ரியங்காவே நடிக்கிறார். முக்கிய வேடத்தில் சுரேஷ் காமாட்சி நடிக்கிறார்.

ராஜரத்னம் ஒளிப்பதிவு செய்ய, சீனிவாஸ் இசையமைக்கிறார்.

திடீரென இயக்குநராக மாறியது ஏன்? என்று கேட்டதற்கு, “நான் சினிமாவுக்கு வந்ததே இயக்குநராவதற்குத்தான். திடீரென ஆகவில்லை. கொஞ்சம் தாமதமாக என் ஆசை நிறைவேறுகிறது.

‘கங்காரு’ படத்தை சிறப்பாக இயக்கித்தருவார் என்று நம்பி சாமியிடம் ஒப்படைத்தேன். ரிசல்ட் படம் பார்த்த உங்களுக்கே தெரியும். இதைவிட பலமடங்கு சிறப்பாக ஒரு படத்தை இயக்கிவிட முடியும் என்ற நம்பிக்கை ‘கங்காரு’ பார்த்தபிறகு எனக்கு வந்துவிட்டது.

இந்தப் படம் முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளது.

இந்தப் படத்தை பாலச்சந்திரன் படைப்பகம் என்ற எனது இன்னொரு நிறுவனத்தின் சார்பில் தயாரித்து இயக்குகிறேன். அடுத்த வாரம் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. ஈரோடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தவிருக்கிறோம்,” என்றார்.

Related Images: