சரியாகப் போகாத ‘யான்’ படத்துக்குப் பிறகு ஜீவா தற்போது நடித்து வரும் படம் ‘திருநாள்’. அம்பா சமுத்திரம் அம்பானியை இயக்கிய பி.எஸ்.ராம்நாத் இயக்குகிறார். ஸ்ரீகாந்த் தேவா இசை.

இந்தப் படத்தில் ஜீவா ஒரு ரௌடியாக நடிக்கிறார். ரௌடி கேரக்டருக்காக செம்பட்டை முடியும், கறுத்த முகமுமாக மாற, 60 நாட்கள் வெயிலில் நடந்தும், ஓடியும் உடலை வருத்தி உடற்பயிற்சி செய்து இப்போது வேறொரு தோற்றத்தில் இருக்கிறார்.

படத்தில் ஜீவாவின் ஜோடியாக ‘ஈ’ படத்திற்குப் பிறகு மீண்டும் நயன்தாரா நடித்து வருகிறார். இவர்களுடன் ‘பாண்டியநாடு’ வில்லன் சரத்லோகித்தவா, கருணாஸ், மீனாட்சி, ஜோமல்லூரி, கோபிநாத் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

‘திருநாள்’ படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடைபெற்று வருகிறது. குறுகிய சந்துகளின் வழியாக ஜீவா ரௌடிகளை துரத்தும் சண்டைக் காட்சி படமாக்கப்பட்ட போது, நிஜமாக இரண்டு ரௌடி கோஷ்டிகளுக்குள் அதே பகுதியில் சண்டை நடக்க, படக்காட்சியோடு நிஜ ரௌடிகளின் சண்டையும் சேர்த்து அப்படி ஒரு யதார்த்தத்துடன் படமாக்கியுள்ளார்களாம்.

எந்த ரௌடிகள் யாரை வெட்டிக் கொண்டார்கள் என்கிற மேலதிக தகவல்கள் ஏதும் இல்லை.

Related Images: