சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் காங்கிரஸ் மன்மோகன் பிரதமராக இருந்தபோது தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்தது என்று சி.பி.ஐ மன்மோகன் சிங் மீது வழக்கு தொடுத்துள்ளது.

உச்ச நீதிமன்றம் ஒதுக்கீடு செய்யப்பட்ட 214 சுரங்கங்களின் உரிமத்தையும் ரத்து செய்தது. இப்போது மறு ஏலம் நடத்தப்பட்டு புதிதாக ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. எல்லாமே அநியாயமான முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும் சி.பி.ஐ தற்போது ஒரே ஒரு சுரங்க ஒதுக்கீட்டை மட்டுமே வைத்து வழக்கு தொடுத்துள்ளது.

‘கமல் ஸ்பாஞ்ச் ஸ்டீல் அன்ட் பவர்’ எனப்படும் தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒரு சுரங்கத்தின் மீதான விசராணையை மட்டுமே சி.பி.ஐ மேற்கொண்டுள்ளது. மீதி 213 சுரங்கமெல்லாம் என்னய்யா ஆச்சு? என்று யாரும் சி.பி.ஐயிடம் கேட்கவில்லை; ஊழலுக்கு எதிரான சிங்கம் பிரதமர் மோடி உட்பட.

திங்கள் கிழமை டில்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரத் பராஸர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் நிலக்கரித்துறை செயலர் எச்.சி.குப்தாவின் சார்பாக ஆஜராகிய வழக்கறிஞர் பி.எஸ்.மாத்தூர் கூறியபோது “நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு தொடர்பான முடிவுகளை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்தான் எடுத்தார்” என்றார். அரசு வழக்கறிஞர் வி.கே.சர்மா பேசியபோது மன்மோகன் சிங்குக்கு இதுபற்றி எதுவுமே தெரியாது என்று வாதாடினார்.

நீதிபதி பராஸர் எப்படி இப்படிப்பட்ட நேர்மையற்ற நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு நடந்தது என்று கேள்வி கேட்டுவிட்டு விசாரணையை அடுத்த மாதம் 16ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Images: