வைகை ஆறு பாய்ந்தாலும், ராமநாதபுரம் மாவட்டமும் திண்டுக்கல் மாவட்டமும் வறட்சி மிகுந்தவை. திண்டுக்கல் தொப்பம்பட்டி அருகே வாகரை பஞ்சாயத்து கிராமங்கள், ஆண்டுக்கு வெறும் 5 நாள் 625 மி.மீ. முதல் 690 மி.மீ. மழை மட்டுமே பெய்யக்கூடிய மிகக்குறைவான பகுதிகள்.
இந்த பஞ்சாயத்தில் வாகரை, பூசாரிகவுண்டன்வலசு, கட்டம நாயக்கன்வலசு எனப்படும் குக் கிராமங்கள் உள்ளன. 2010-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரையிலான வறட்சிக் காலத்தில், இந்த பஞ்சாயத்தில் பெரும்பாலான திறந்தவெளிக் கிணறுகள் முற்றிலும் வறண்டு விட்டன. ஆழ்துளைக் கிணறுகளில் 12 மட்டுமே நீர் தந்தன. குடிநீர் பஞ்சத்தால் மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக விவசாயத் தோட்டங்களுக்கு, பல கி.மீ. தூரம் நடந்துசென்று குடங்களில் தண்ணீர் எடுத்து வந்தனர். வறட்சியால் விவசாயமும் சுருங்கியது.
வாகரை பஞ்சாயத்து தலைவர் கே.சின்னான், ஒவ்வொரு கிராமத்திலும் 15 முதல் 20 முன்னோடி விவசாயிகளை ஒருங்கிணைத்து, அவர்கள் மூலம் மண் மற்றும் நீர்வள மேம்பாடு, நிலத்தடி நீர் சேமிப்புத் திட்டத்தில், கடந்த 2 ஆண்டுகளில் அரசு ஒதுக்கிய ரூ. 16.75 லட்சம் நிதியில் மக்கள் பங்களிப்புடன், தகுந்த இடங்களில் 30 பண்ணைக் குட்டைகளும், 15 சிறிய, பெரிய தடுப்பணைகளும், ஒரு கசிவுநீர் குட்டையும் அமைத்தார்.
இந்த ஆண்டு வரை, சரியாக மழை கிடைக்காத நிலையில் இந்த பஞ்சாயத்து கிராமங்களில் சாரல் மழை மட்டுமே மூன்று நாட்கள் பெய்துள்ளது. அதனால், இந்த பஞ்சாயத்தைச் சுற்றிய அனைத்து பஞ்சாயத்துகளும் குடிநீர், விவசாயப் பாசனத்துக்கு தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றன. ஆனால் வாகரை பஞ்சாயத்து மட்டும் செழிப்பு மிகுந்த பகுதியாக திகழ்கிறது. குடிநீர் பிரச்சினை இல்லை. விவசாயத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு இல்லை. தற்போது மக்காச்சோளம், தக்காளி, வெண்டைக்காய், சின்ன வெங்காயம் சாகுபடி செய்து விவ சாயிகள் அதிகளவு விளைச்சல் கண்டுள்ளனர்.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட நீர் வடிப்பகுதி மேம்பாட்டு வேளாண் பொறியாளர் பிரிட்டோராஜ் கூறியது:
‘‘வாகரை பஞ்சாயத்தில், தற்போது 2.5 செ.மீ. மழை பெய்தாலே அவர்கள் அமைத்த 30 பண்ணைக்குட்டைகள் மூலம் சுமார் ஒரு கோடியே 50 லட்சம் லிட்டர் மழை நீரும், ஒரு தடுப்பணை மூலம் சுமார் 15 லட்சம் லிட்டர் மழை நீரும், ஒரு கசிவு நீர் குட்டை மூலம் சுமார் 6 லட்சம் லிட்டர் மழை நீரும் மொத்தம் ஒரு கோடியே 71 லட்சம் லிட்டர் தண்ணீரை சேமிக்கின்றனர். இதே 2.5 செ.மீ. மழை ஆண்டுக்கு 5 முதல் 6 தடவை பெய்தால் 8.5 கோடி லிட்டர் தண்ணீரை இவர்கள் சேமிக்கலாம்.
மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் முதல் விருதுநகர் வரையிலான மேட்டுப்பகுதி மாவட்டங்களில் மண் சரிவும், செம்மண் சரளையும் அதிகம் காணப்படுகிறது. இந்த மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைவு.வெயில் காலங்களில் அதிகமான குடிநீர் தட்டுப்பாடும், பயிருக்குத் தேவையான ஈரப்பதமும் இன்றி விவசாயப் பரப்பு குறைந்து விவசாயிகள் வருந்தும் சூழ்நிலையே இருக்கிறது. இந்த மாவட்டங்களில் பஞ்சாயத்து தலைவர்கள், வாகரை பஞ்சாயத்தை முன்மாதிரியாகக் கொண்டு மழை நீரை சேகரிக்க பண்ணைக்குட்டைகள், தடுப்பணைகள் அமைத்தால் வறட்சிக் காலத்திலும் குடிநீர் பஞ்சத்துக்கு தீர்வுகண்டு விவசாயத்தை தக்க வைக்கலாம்’’ என்றார்.

Related Images: