பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சியை முன்னிறுத்தும் முற்போக்கு பிரதமராக தன்னைக் காட்டிக்கொள்ளும் முயற்சியை தொடர்ந்து செய்து வருகிறார். ஒருபுறும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், சிவசேனா போன்ற இயக்கத் தலைவர்கள் மதவாதம் என்கிற பிற்போக்குத்தனத்தை செய்ய, அவற்றை எதுவுமே காணாதது போல நடந்துகொள்ளும் மோடி, மறுபுறம் இதுபோன்ற தன்னை முற்போக்காய் காட்டும் செயல்களையும் செய்துவருகிறார். அடுத்து அவர் செய்யவிருப்பது ஸ்டண்ட் இளைஞர்கள் இயங்கும் பொதுத் தளமான பேஸ்புக்கில்.

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் இது தொடர்பாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இம்மாத இறுதியில், செப் 27ல், கலிஃபோர்னியாவில் உள்ள ஃபேஸ்புக் தலைமையகத்துக்கு வருகை தந்து, டவுன்ஹால் கேள்வி – பதில் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்தச் சந்திப்பில் தங்கள் இருவரிடமும் கேட்க விரும்பும் கேள்விகளை அனுப்புமாறு ஃபேஸ்புக் பயனாளிகளிடம் மார்க் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சி பிரதமர் நரேந்திர மோடியின் சமூக வலைதள பக்கங்களில் நேரலையாக ஒளிபரப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி 27ம் தேதி இரவு 10 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

இதற்கு நரேந்திர மோடி நன்றி தெரிவித்து பேஸ்புக் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். உலக அளவில் 100 கோடி பேஸ்புக் அக்கௌன்ட்கள் உள்ளன. இதில் இந்தியர்கள் 12 கோடி அக்கௌன்ட்கள் வைத்துள்ளனர். இவர்களை அடைவதன் மூலம் தான் முற்போக்கான பிரதமர் என்று காட்ட மோடி முயல்கிறார்.

முற்போக்கும்,பிற்போக்கும் நாம் நம்மை என்னவாகக் காட்டிக்கொள்கிறோம் என்பதில் இல்லை மாறாக நம் செய்யும் நல்ல, தீய செயல்களில் உருவாகிறது.

Related Images: