இலங்கையில் போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்படுவதை ஏற்க முடியாது என்றும் பதிலாக சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளக்கூடிய உள்நாட்டு விசாரணை நடத்துவது மட்டுமே தங்களுடைய நிலைப்பாடு என்றும் இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை 16ஆம் தேதி வெளியாயின. அதில் இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் போரில் ஈடுபட்ட இரு தரப்பினராலும் போர்க் குற்றங்களும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களும் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் பிபிசியிடம் பேசிய ராஜித சேனாரத்ன இவ்வாறு பேசியுள்ளார்.

சர்வதேச நிபுணர்களை அழைத்துவருவது தொடர்பாக தங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று கூறியிருக்கும் ராஜித சேனாரத்ன, இலங்கையில் தற்போது நீதித்துறை சுயேச்சையாக இயங்குவதாகவும் தெரிவித்திருக்கிறார். அரசுக்கு எதிராக பல தீர்ப்புகள் வழங்கப்பட்டிருப்பதைப் பார்த்தாலே இது புரியும் என்றும் கூறியிருக்கிறார்.

ராஜித சேனாரத்ன கூறுகையில் “போர்க் குற்றங்களை யார் செய்திருந்தாலும், ஜனாதிபதி, பிற தளபதிகள், பாதுகாப்புச் செயலர் என யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் நடவடிக்கை எடுக்க எங்கள் அரசு தயாராக இருக்கிறது. போரின்போது என்ன நடந்தது என்பது குறித்து முழுமையான தகவல்களைப் பெற, தென்னாப்பிரிக்காவில் அமைக்கப்பட்டதைப் போல எல்லாத் தரப்பினரையும் உள்ளடக்கிய உண்மை அறியும் ஆணையம் ஒன்றை அமைப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்பட்டபோது, சர்வதேச சமூகமும் தமிழ் சமூகமும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், அதன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டபோது அதனைச் செயல்படுத்த வேண்டுமென இருதரப்புமே கோரினார்கள். விசாரணை சரியான முறையில் நடைபெற்றால் தமிழ் சிறுபான்மையினரின் நம்பிக்கையை பெற முடியுமென்று நம்புகிறோம்.” என்று கூறினார்.

இலங்கை அரசு உருவாக்கிய எல்லா குழுக்களும் இவ்வளவு வருடங்கள் விசாரணை செய்தும் ஏன் ஒரு சிங்களர் கூடத் தண்டிக்கப்படவில்லை ? என்று நமக்கு கேள்வி எழுகிறது. ஏன் இந்தியாவை துணைக்கு இழுத்து ஐ.நாவில் தான் தப்பிக்க வழி தேடுகிறது இலங்கை ? இந்தியா இலங்கைக்கு ஆதரவாக நிலை வைத்திருப்பதால் ஐ.நாவால் கூட எதையும் பெரிதாகச் செய்துவிடமுடியாது என்பது சிங்கள ஆட்சியாளர்களுக்கு நன்கு தெரியும். இந்த விஷயத்தில் இந்தியா தமிழர்களுக்கு எதிராகவும் இலங்கை சிங்களர்களுக்கு ஆதரவாகவும் நிலையெடுக்கும் என்பது வெளிப்படையாகத் தெரியும் விளைவாகும். முதல்வர் ஜெயலலிதா அமெரிக்காவுக்கு எதிராக, தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா நிலையெடுக்கவேண்டும் என்று சட்டசபையில் கடிதம் எழுதித் தீர்மானம் இயற்றினாலும் சிங்களமே வெல்லும்.

Related Images: