ஷாலினியின் தங்கை ஷாமிலி தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலம் ஆனவர். 2009-ல் ‘ஓய்’ என்ற தெலுங்கு படத்தில் சித்தார்த் ஜோடியாக நடித்தார். படம் சரியாகப் போகவில்லை. அவரும் நடிப்பை மூட்டை கட்டிவிட்டு படிக்கப் போய்விட்டார். இப்போது படிப்பு முடிந்து மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

துரை செந்தில் குமாரின் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார். இதில் ஒரு தனுஷ் ஜோடியாக நடிக்க ஷாமிலி ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். விக்ரம் பிரபு நடிக்கும் ‘வீரசிவாஜி’ படத்திலும் நாயகியாக நடிக்கிறார். இது தவிர மலையாளம், தெலுங்கு படங்களில் நடிப்பது பற்றியும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

இது குறித்து ஷாமிலி கூறும்போது,
“நான் சினிமாவில் நடிப்பதில் அக்காள் கணவர் அஜீத்துக்கு அவ்வளவு விருப்பம் இல்லை. என்றாலும் எனது விருப்பத்தை சொன்ன உடனே அதற்கு முழு ஆதரவு கொடுத்தார். நான் போட்டோ எடுக்க வேண்டும் என்று விரும்பியதும், அவரே என்னை போட்டோ எடுத்தார். அதை மறக்க முடியாது.

அவர் மிகவும் அமைதியானவர் வீட்டையும் குடும்பத்தையும் மிகவும் விரும்புவார். அவருடன் இருக்கவேண்டும் என்று எல்லோரும் ஆசைப்படுவார்கள். நடிப்பில் திறமையை காட்ட வேண்டும் என்று ஆசை இருக்கிறது.

நான் ஒரு போதும் அஜீத் ஜோடியாக நடிக்க மாட்டேன். அவருடைய படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அது பற்றி சிந்திப்பேன். எனக்கு மார்டனாக நடிக்க ஆசை இருக்கிறது. ஆனால் கவர்ச்சியாக நடிக்க விருப்பம் இல்லை. என் அக்கா குறைந்த படங்களிலேயே நடித்திருந்தாலும மிக நல்ல பெயர் சம்பாதித்தார். அதுபோல நானும் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க முயற்சி செய்வேன்” என்றார்.

Related Images: