போக்ஸ்வேகன் (Wolkswagon) என்றழைக்கப்படும் வோல்க்ஸ்வேகன் என்கிற ஜெர்மனி நாட்டின் கார் தயாரிப்பு நிறுனம் சமீபத்தில் தனது கார்களில் மாசுக் கட்டுப்பாட்டு கருவிகளை கார் டெஸ்ட் செய்யப்படும்போது மட்டும் ஆன் செய்து மற்ற சமயங்களில் ஆப் செய்தே வைத்திருந்திருக்கிறது என்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு நவீன சாப்ட்வேர் கொண்ட கருவியை அது கார்களில் உள்ளே ரகசியமாக பொருத்தியிருந்திருக்கிறது. இவ்வாறு மாசுக் கட்டுபாட்டு நிர்ணயங்களை அது 2009லிருந்து ஏமாற்றி வந்திருக்கிறது.

அமெரிக்காவில் விற்பனையான போக்ஸ்வேகன் கார்களை மாசுக்கட்டுப்பாடு டெஸ்ட் செய்யும் போது அமெரிக்க மாசுக் கட்டுப்பாட்டு அமைப்பு இதைக் கண்டுபிடித்தது. அமெரிக்காவில் ஓடிக்கொண்டிருக்கும் 80 ஆயிரம் கார்களில் இந்த மாசுக் கட்டுப்பாடு ஏமாற்றும் கருவி பொருத்தப்பட்டிருப்பதை ஒப்புக் கொண்டது போக்ஸ்வேகன். இதையொட்டி போக்ஸ்வேகன் மீது ரூ. 1.17 லட்சம் கோடி அபராதம் விதித்திருக்கிறது அமெரிக்க சுற்றுச் சூழல் அமைப்பு.

செய்தி வெளியான முதல் நாள் ‘ஃபோக்ஸ் வேகன்’பங்குகளின் மதிப்பு 20% வீழ்ந்தது; அடுத்த நாள் மேலும் 17% வீழ்ந்தது. முதலில் கள்ள மவுனம் சாதித்த ‘ஃபோக்ஸ்வேகன்’ அடுத்து, அமெரிக்காவில் நிறுவனத்தின் செயல்பாடு முடக்கப்படலாம் எனும் எச்சரிக்கையைத் தொடர்ந்து, குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டிருக்கிறது. தலைமைச் செயல் அதிகாரி மார்ட்டின் வின்டர்கோன் பதவி விலகியிருக்கிறார்.

போக்ஸ்வேகன் நிறுவனத்தை 1937ல் அடால்ப் ஹிட்லர் தான் உருவாக்கினார். தனது ஆரிய மக்களுக்கான சமுதாயத்தை உருவாக்க விரும்பிய ஹிட்லர் சீமான்கள் மட்டுமே கார்கள் வைத்திருந்த காலத்தில் அமெரிக்கா போலவே வீட்டுக்கு ஒரு கார் என்று ஜெர்மானிய மக்களும் கார் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் குறைந்த விலையில் இந்தக் கார்களை உருவாக்கினார். இரு பெரியவர்கள், மூன்று குழந்தைகளுடன் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் பயணிக்கக் கூடியதாகவும், குறைந்த விலைக்குள்(999 ரெய்க்ஸ்)ளும் ஜெர்மனியின் வாகன உற்பத்தித் துறையை வளர்ப்பதோடு, உள்நாட்டில் நாஜி கட்சியின் செல்வாக்கை மேலே கொண்டு செல்லவும் திட்டமிட்டே அவர் இந்தக் காரை அறிமுகப்படுத்தினார்.

யுத்தத்துக்குப் பின் மீண்டும் தலையெடுத்த ‘ஃபோக்ஸ்வேகன்’ 1950-களில் அமெரிக்கச் சந்தையில் கால் பதித்தது. அடுத்த 10 ஆண்டுகளில், தனக்கென அங்கு ஒரு சந்தையை உருவாக்கிக்கொண்டது. கடந்த முக்கால் நூற்றாண்டில், இரண்டு கோடிக்கும் மேற்பட்ட கார்களை விற்று, உலகின் ஏனைய நிறுவனங்களை எல்லாம் பின்தள்ளி, ‘டொயாட்டா’வுக்கு அடுத்து பெரிய கார் நிறுவனம் எனும் இடத்துக்கு வந்தது.

இந்நிலையில்தான் எந்த அமெரிக்கச் சூழலை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டதோ, எந்த அமெரிக்காவைத் தனது வலுவான சந்தை களில் ஒன்றாக உருமாற்றிக்கொண்டதோ, அதே அமெரிக்காவின் ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை’யால் (இபிஏ) மிகுந்த பின்னடைவுக்கு ஆளாகியிருக்கிறது ‘ஃபோக்ஸ்வேகன்’. இதனால் ஜெர்மனியின் பொருளாதாரமே பின்னடைவுக்கு ஆளாக நேரிடும் என்று அஞ்சப்படுகிறது. இந்நடவடிக்கைக்குப் பின்னணியில், அமெரிக்க அரசுக்கு என்னென்ன உள் ஆதாய நோக்கங்கள் இருக்கின்றன என்பது தெரியவில்லை; இருக்கலாம். ஆனாலும்கூட, மிகத் துணிச்சலான, மக்கள் – சூழல் நலன்சார் நடவடிக்கை இது. அதே சமயம் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் சுற்றுப்புறச் சூழல் அரசால் கூட கண்டுகொள்ளப்படுவதில்லை என்பதும் நாம் கவனிக்கவேண்டியது.

1970-ல் அதிபர் நிக்ஸன் ஆட்சியில் உருவாக்கப்பட்ட ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை’. ஆண்டுக்கு ரூ.50,000 கோடி நிதி ஒதுக்கீடு, 16,000 + நிரந்தர ஊழியர்கள் + அதற்கு இணையான ஒப்பந்த ஊழியர்கள், பரந்து விரிந்த ஆய்வகங்கள், கடல் ஆய்வுகளுக்குச் சொந்தக் கப்பல் என ஒரு பெரிய துறையாகச் செயல்படும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை சுற்றுச் சூழலை கண்காணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அமெரிக்காவில் காற்று, நீர், நில மாசில் தொடங்கி கதிரியக்க அபாயம் வரை கண்காணிக்கும் / ஒழுங்குபடுத்தும் இந்த அமைப்புக்கு அமெரிக்க நாடாளுமன்றம் இன்னும் போதுமான அதிகாரங்களை வழங்கவில்லை என்ற குறை அமெரிக்கர்களிடம் உண்டு. ஆனால், அதன் கையில் இப்போது இருக்கும் அதிகாரமே எத்தகையது என்பதற்கு உதாரணம் ‘ஃபோக்ஸ்வேகன்’ விவகாரம்.

வெளிநாட்டு நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால், சர்வதேச உறவுகள் பாதிக்கப்படும், அந்நிய முதலீடுகள் குறைந்துவிடும் என்றெல்லாம் பயந்து ‘யூனியன் கார்பைடு’ நிகழ்த்திய போபால் படுகொலைகள், மாகி நூடுல்ஸில் இருந்த ஆபத்தான வேதிப்பொருட்கள், கோக் பெப்ஸியில் இருந்த அளவு மீறிய வேதிப்பொருட்கள், ஸ்டெர்லைட் ஆலை மாசுகள், ‘நோக்கியா’, ‘வோடஃபோன்’, நிகழ்த்திய பொருளாதார மோசடிகள் வரை எல்லாவற்றிலும் முதலாளிகள் முதலீடு செய்யாமல் ஓடிவிடுவார்களே என்று சொல்லி அமைதியாயிருக்கும் இந்தியா எவ்வாறு மக்கள் நலனில் அக்கறை காட்டமுடியும் ? மேகி நூடுல்ஸ் விவகாரத்தில் என்ன ஆனது ? அந்த நிறுவனத்துக்கு எதுவுமே நடக்கவில்லை. இதோ அடுத்து மீண்டும் சந்தையில் நுழையப்போகிறது மேகி.

2014-ல் பொதுத் தேர்தல். குஜராத் முதல்வராக இருந்தபோது தொழில் வளர்ச்சியின் பெயரால் சுற்றுச்சூழல் பாதுகாப்பை அலட்சியப்படுத்தியவர் மோடி. பிரதமரான பின் அவருடைய நோக்கப்படி, சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நாட்டின் முக்கியமான பாதுகாப்புச் சட்டங்களை மறுபரிசீலனை செய்ய டி.எஸ்.ஆர்.சுப்ர மணியன் குழுவை நியமித்தார். இரு மாதங்களில் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது அக்குழு. அந்த அறிக்கை என்ன சொல்கிறது; அரசின் போக்கு எப்படியிருக்கிறது என்பதற்கு ரந்தீப் சர்ஜிவாலா விமர்சனத்தின் ஒரு வரி போது மானது: “இந்தியா 60 ஆண்டுகளாக உருவாக்கிய ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கட்டமைப்பையும் அடித்து நொறுக்கி பெரு நிறுவனங்களின் கையில் எல்லாவற்றையும் ஒப்பளிக்க 60 நாட்களில் யோசனை தெரிவித்திருக்கிறது இந்த அறிக்கை.”. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கடும் எதிர்ப்புகளால் “சுற்றுச் சூழல் பாதுகாப்பு முகமை உருவாக்கத்தில் அவசரப்படப் போவதில்லை” என்று தற்காலிகமாக இந்த விவகாரத்தைத் தள்ளிப்போட்டிருக்கிறது மோடி அரசு.

ஒவ்வொரு நாளும் தொழில் வளர்ச்சியின் பெயரால் சராசரியாக 333 ஏக்கர் வனப் பரப்பை இழந்துகொண்டிருக்கும், ஆண்டு உற்பத்தி மதிப்பில் 5% இழப்பைச் சூழல் கேடுகளால் பறிகொடுக்கும் நாடு இந்தியா! நாட்டின் பிரதமர் மோடி இப்போது, தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அமெரிக்காவில் நியூயார்க், கலிஃபோர்னியா என்று சுற்றும் மோடி, வாஷிங்டனில் உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் அலுவலகத்துக்கும் அவசியம் போக வேண்டும். ஜனநாயகம், வளர்ச்சி எனும் வார்த்தைகளுக்குள் உண்மையில் எத்தனை அர்த்தங்கள் பொதிந்திருக்கின்றன என்பதை அவருடைய அரசு இப்போதாவது புரிந்துகொள்ள வேண்டும்! மூன்றாம் உலக நாடுகள் ஆடுமாடுகளுக்குச் சமானம் என்று மோடி அரசும், மன்மோகன் அரசும் நினைத்ததால் தான் உலகில் தடை செய்யப்பட்ட பூச்சிக் கொல்லி உரங்களும், தடை செய்யப்பட்ட மாத்திரைகளும், தடை செய்யப்பட்ட பானங்களும் இ்ந்தியாவில் அமோகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.

Related Images: