மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடக்க இருந்த பாகிஸ்தான் பாடகர் குலாம் அலியின் கச்சேரிக்கு சிவசேனா எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த நிகழ்ச்சி ரத்தானது. அடுத்ததாக மும்பையில், பாகிஸ்தான் முன்னாள் அமைச்சரும், அரசியல் தலைவருமான குர்ஷி முகமது கசூரியின் புத்தகத்தை வெளியிட ஏற்பாடுகளை செய்த சுதீந்திரா குல்கர்னியின் மீது சிவசேனையினர் கருப்பு மை ஊற்றினர்.

கடந்த வாரம் மும்பையில் உள்ள பிசிசிஐ அலுவலகத்தை முற்றுகையிட்ட சிவசேனா கட்சியினர் இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நிறுத்திவிட்டது.

சிவசேனாவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பாலிவுட் நட்சத்திரங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அனுராக் பாஸு கூறுகையில் “இந்த எதிர்ப்புகளுக்கு பின்னாலிருக்கும் கோட்பாடுகள், முறை, காரணம் என்ன என்று ஒன்றுமே புரியவில்லை. இதுவரை இதுபோன்ற பிரச்சினைகள் வந்ததே இல்லை. சினிமா பார்க்க போகும்போது திரையரங்கில் நமக்கு முன்னாலும் பின்னாலும் இருப்பவர் பாகிஸ்தானியரா? அல்லது இந்தியரா? என நாம் கேட்டு தெரிந்துகொள்வதில்லை. பிறகு இப்போது ஏன் இந்த புது குழப்பம்?” என்றார்.

“கலை, பண்பாடு போன்றவற்றை அரசியலிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன். நமது துறையில் அதிக எண்ணிக்கையில் பகிஸ்தானைச் சேர்ந்த நடிகர்கள், பாடகர்கள் இருக்கின்றனர். அவர்கள் மிகவும் முக்கியமானவர்கள். அவர்களை புறக்கணிக்கக் கூடாது” என்றார் பஜ்ரங்கி பாய்ஜான் திரைப்பட இயக்குனர் கபீர் கான்.

எம்ரான் ஹஷ்மி படைப்பாற்றலுக்கு எல்லைகள் கிடையாது என்றார். சோஹா அலி கான், எழுத்தாளர்களைப் போல நடிகர் நடிகைகளும் விருதுகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்றார். நடிகை நிம்ரத் கவுர், ஓமங் குமார்,மோஹித் சூரி போன்றோரும் இது போன்று கலையைத் தடுப்பதை கண்டித்துள்ளனர்.

பாடலாசிரியர் ஸ்வானாத் கிர்கிரே சிவேசேனையை நேரடியாகவே தாக்கிப் பேசினார். “சிவசேனா குறுகிய எண்ணமுடைய கட்சி. அதனை ஒப்புக் கொள்ள அவசியம் இல்லை. கலையால் மட்டுமே கலாச்சாரத்தையும் மக்களையும் ஒன்றிணைக்க முடியும். கலாச்சார பரிமாற்றத்தால் தான் மக்கள் வளர்ச்சியடைகின்றனர். இந்த எதிர்ப்பு ஒரு கட்சியினுடையது. இந்த நாட்டினுடையது அல்ல. குலாம் அலியின் இசையை கேட்க வேண்டும் என்பதுதான் மக்களின் எண்ணம். அதனால் தான் குலாம் அலிக்கு இங்கு இத்தகைய வரவேற்பு.” என்றார் அவர்.

Related Images: