பா.ஜ.க வின் ஆட்சி தொடங்கியதும் மெதுவாக ஆரம்பித்த மதவெறுப்புப் பிரச்சாரம் தொடர்ந்து, அண்மைக்காலமாக நடைபெற்று வரும் மத ரீதியான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதில் பெரிதாகி நிற்கிறது. இது சாகித்ய அகாதமி பெற்ற எழுத்தாளர்கள், எழுத்தாளர் கல்புர்கி இந்துத்துவாவாதிகளால் கொல்லப்பட்டதை எதிர்த்து விருதுகளை திருப்பி வழங்கினர். திரைப்படத்துறையினர் அவார்டுகளை திருப்பியளிக்கத் துவங்கினர். இதே போல நூற்றுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு நாட்டில் நிலவும் மதவன்முறை கலாச்சாரத்தைப் பற்றி கண்டித்து கடிதம் எழுதியுள்ள நிலையில், மூலக்கூறு அணுவியல் விஞ்ஞானியான பி.எம்.பார்கவா தனது பத்மபூஷண் விருதை திருப்பியளிப்பதாக அறிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் ஆங்கில நாளிதளுக்கு அளித்துள்ள பேட்டியில், “நாட்டில் தற்போது நிலவும் சூழல் தொடர்ந்தால் இந்திய தேசம் ஜனநாயக தேசம் என்ற அடையாளத்தை இழந்துவிட்டு பாகிஸ்தான் போல் மதசார்பு நாடாக உருவாகும். நம் நாட்டில் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது. இந்தியாவின் எதிர்காலம் வருத்தமளித்தப்பதாக இருக்கிறது. எனவே, எனக்கு வழங்கப்பட்ட பத்மபூஷண் விருதை திருப்பியளிக்க முடிவு செய்துள்ளேன். இது தொடர்பாக உள் துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பவிருக்கிறேன். ஒரு விஞ்ஞானியாக என்னால் இதை மட்டுமே செய்ய முடியும். அண்மையில் நடைபெற்ற அறிவியல் மற்றும் தொழில்துறை ஆய்வுக் கூடங்கள் கூட்டமைப்பின் மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் சிலர் கலந்து கொண்டனர். அறிவியல் மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கு என்ன வேலை ? அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சிகளுக்கான நிதி உதவியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டில் அறிவியலுக்கும், பகுத்தறிவுக்கும் மதிப்பற்ற சூழல் உருவாகியுள்ளது ”

“என்னுடைய நூலில் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை நான் கடுமையாக விமர்சித்திருக்கிறேன். ஆனால், இப்போது அவர்களை ஒரு விஷயத்துக்காக நான் வெகுவாக பாராட்டுகிறேன். காங்கிரஸ் கட்சியினர் நாம் என்ன உண்ண வேண்டும், என்ன உடுத்த வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதில் கெடுபிடி விதிக்கவில்லை. அதற்காக அவர்களை பாராட்டியாக வேண்டும்” என்றார்.

பார்கவாவைத் தொடர்ந்து விஞ்ஞானிகள் அசோக் சென், பி.பல்ராம் உள்ளிட்டோரும் பத்ம பூஷண் விருதை திருப்பித் தரப் போவதாக அறிவித்துள்ளனர். நாட்டில் தலையெடுக்கும் மதவன்முறையை தடுக்காமல் பிரதமர் மோடி மவுனமாக இருப்பதைக் கண்டித்து வரலாற்றாசிரியர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். ரொமிலா தாப்பர், இர்பான் ஹபிப், கேஎன் பன்னிகர் மற்றும் மிருதுளா முகர்ஜி உள்ளிட்ட 53 முன்னணி வரலாற்றாசிரியர்கள் கூட்டாக அறிக்கை விடுத்துள்ளனர்.

Related Images: