இது நடந்தது கேரளாவில் இல்லை. டெல்லியில். அங்கு ஜந்தர் மந்தரில் கேரள அரசுக்கு சொந்தமான கேரளா பவன். அரசு விருந்தினர்களுக்கான தங்குமிடத்தில் உள்ள கேரள உணவகத்தில் வெளியாட்களும் போய்ச் சாப்பிடுவார்கள்.

நேற்று, இந்துசேனா என்கிற கட்சியின் தலைவர் விஷ்ணு குப்தா அங்கு போய் சாப்பிட்டுப் பார்த்தாரோ என்னவோ, ‘கேரளா பவனில் பசுக் கறி குடுக்குறாய்ங்க..’ என்று காவல் துறையில் போய் கம்ப்ளெய்ன்ட்செய்துவிட்டார்.

உடனே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி போலீஸ் (நம்ம ஊரல் அம்மா கண்ட்ரோல்ல இருக்கிற மாதிரி அங்கே கேஜ்ரிவால் கையில் போலீஸ் இல்லை. அதை வெச்சே ஏகப்பட்ட பிரச்சனை ஓடிட்டு இருக்கு) உடனே நேரடியாப் போய் அங்கிருக்கிறவங்களை விசாரிச்ச விசாரிப்புல அவங்க அரண்டு போய் மெனு கார்ட்ல இருந்த ‘பீப் ப்ரை’ன்ற அய்ட்டம் பேரையே தூக்கிட்டாங்க.

கேரளா பவன் கேரள அரசின் வெளிநாட்டுத் தூதரகம் போன்றது. உயர் மட்ட அதிகாரிகள் வரும் இடம். அங்கு உள்ளே நுழைந்து சோதனை போட, கவர்னர் லெவலுக்கு உயர் மட்ட அளவில் அனுமதி வாங்கித்தான் உள்ளே நுழைய முடியும். ஆனால் டெல்லி போலீஸ் இந்து சேனா சொன்னதும் உள்ளே போய் தேடியது கேரள அரசை இழிவு படுத்தியது போலிருக்கிறது.

கேரள முதல்வர் உம்மன் சாண்டி மத்திய அரசின் இந்தச் செயலுக்கு கண்டனம் தெரிவித்திருப்பதுடன் பிரதமருக்கு ஒரு கடிதமும் எழுதியுள்ளார். கேரள அரசின் தலைமைச் செயலர் ஜிஜி தாமஸ் அங்கே போடப்பட்டது ‘எருமைக்கறி ப்ரை’ தான் என்றும் பசு மாட்டு ப்ரை என்று யாரோ கூறி அனுமதி பெறாமல் உள்ளே நுழைந்திருக்கிறார்கள் என்றார்.

டெல்லியில் இருக்கும் கேரள அரசின் எம்.பி.க்கள் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து இன்று அங்கு ஊர்வலம் நடத்தினர்.

டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கூறுகையில் “டெல்லி போலீஸ் பாஜக மற்றும் சிவசேனா போன்று நடந்துகொள்கிறது. இதேபோல, டெல்லி முதல்வர் பவனுக்குள்ளும் நுழைந்து, மோடிக்கும் பாஜகவுக்கும் பிடிக்காத உணவை முதல்வர் உண்டு கொண்டிருந்தால் கைது செய்தோம் என்று கூறிவிடுவர்களா என்ன?” என்று கேட்டுள்ளார்.

Related Images: