எந்தவொரு சினிமாப் பின்னணியும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் நுழைந்து, தனது கடின உழைப்பால் முன்னேறி, தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் தனது நடிப்பால் உருவாக்கி, அவர்கள் மனத்தில் ‘தல’ என்று நிலைத்திருப்பவர் அஜீத்.

’’என் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும், ஒவ்வொரு நொடியையும் நானே செதுக்கினதுடா என படத்தில் அவர் பேசும் வசனம் அவருக்கே உரித்தானது.

ஓபனிங் கிங் என ரசிகர்களால் கொண்டாடப்படும் அவரது பெர்ஷனல் பக்கங்கள் இது…

அஜீத் குமாரின்  பூர்வீகம் பாலக்காடு. தந்தை சுப்ரமணியம் தாய் மோகினிக்கு 1971-ம் ஆண்டு மே மாதம் 1 ஆம் தேதி மகனாக பிறந்தவர். நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். இரண்டு சகோதரர்கள். அண்ணன் அனுப், தம்பி அனில். ஆந்திரத்தில் பிறந்தாலும் சென்னை எழும்பூர் அசன் மேல்நிலை பள்ளியில் பத்தாவது வரை படித்தவர். இன்றும் சில இரவுகளில் காரில் பள்ளிக்கூடம் அருகில் வந்து பழைய நினைவுகளில் அஜீத் மூழ்குவது வழக்கம்.

என்பீல்டு கம்பெனியில் வேலைப்பார்த்தவர் பிறகு துணிகளை ஏற்றுவதி செய்யும் நிறுவனத்தில் சேர்ந்து விட்டார். அடுத்தக்கட்டமாக மாடலிங் துறையில் ஈடுபட்டார். தன்னுடைய 20-வது வயதில் நடித்த தெலுக்கு படத்தின் டைரக்டர் இறந்து விட படம் பாதியிலேயே நின்று போனது. மே மாதம் பட வாய்ப்பு கை நழுவி போனபோது ஊடகத் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா இயக்குனர் செல்வாவிடம் அஜீத் புகைப்படத்தை காட்ட ‘அமராவதி’ படத்தின் நாயகனாகி விட்டார்.

அஜீத்தின் முதல் சம்பளத்தில் வாங்கிய பைக் இன்றும் பத்திரமாக அவரிடம் இருக்கிறது. அஜீத்திற்கு ரேஸ் பழக்கம் எப்படி ஏற்பட்டதெனில் அவர் வேலைப் பார்த்த நிறுவனத்தின் முதலாளி சென்னை சோழவரம் ரேஸ்களில் கலந்துக் கொள்வாராம். அவரைப் பார்த்து தான் அஜீத்திற்கு பைக் ரேஸ் மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அமராவதி படம் ஓடிக் கொண்டிருக்கும் போதே விபத்தில் சிக்கி முதுகுத் தண்டு வடத்தில் பாதிக்கப்பட்டு மீண்டார்.

’பெடரேஷன் மோட்டார்ஸ் ஆப் இந்தியா’ போட்டியில் கலந்துக் கொண்டு 5-வது இடத்தை பிடித்தார். ஆசை படம் இவரின் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அஜீத் எம்மதமும் சம்மதம் என்ற பாலிசியை உடையவர். அதை குறிக்கும் விதமாக வீட்டு சுவற்றில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவ மத சின்னங்களுடன் கல் பதிக்கப்பட்டிருக்கும்.

அஜீத் ஒருவரை பார்த்து விட்டால் அவர்களை அப்சர்வ் பண்ணுவதில் கில்லாடி. அவர் வீட்டில் பால்ய கால நிகழ்வுகளின் புகைப்படங்களை மாட்டி வைத்துள்ளார். அதைப்பற்றி தனது மகள் அநெளஷ்காவுக்கு அடிக்கடி சொல்வதுண்டு அஜீத். அஜீத்திற்கு பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஒன்று புகைப்பட கிளிக். அஜீத் வீட்டில் சிறிய விளையாட்டு அரங்கு உள்ளது.

தன்னுடைய நண்பர்களுக்கு ஹெல்மெட் அணிய வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவார். இயக்குனர் – நடிகர்களின் திறமைகளை வெளிப்படையாக பாராட்டுவார். இவரால் சமீபத்தில் வெளிப்படையாக பாராட்டப்பட்டவர் அட்டகத்தி தினேஷ்.

வெளிப்புற படப் பிடிப்பு என்றால் ஐதராபாத் இடம்பெற்றிருக்கும். ராமொஜி ராவ் திரைப்பட நகரத்தின் மீது அவருக்கு ஒரு காதல். பிறந்த மண் ஆயிற்றே. இவரின் அண்மைக்கால சேகரிப்பு ஆத்திச்சூடி.. ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது. ஆத்திச்சூடியை பற்றிய விழிப்புணர்வு இல்லையே என்ற வருத்தம் அஜீத்திற்கு உண்டு, தன்னுடைய பிறந்த நாளை பசுமைக் திரு நாளாக கொண்டாட சொல்வார். ஒவ்வொருவரும் மரக் கன்றுகள் நட வேண்டும் என்பது அவருடைய விருப்பம்.

மனைவி ஷாலினியிடம் ஒவ்வொரு முறை போனில் பேசும் போதும் ஐ லவ் யூ சொல்வது வழக்கம். அஜீத்தை ஷாலினி பேபி என்று தான் செல்லமாக அழைப்பார். நண்பர்களை தேடிச் சென்று மணிக்கணக்கில் பேசுவார்.

நடிகர் ஜெய்சங்கரின் மகன் டாக்டர் விஜய் சங்கர் அஜீத்தின் நெருங்கிய நண்பர். ஞாபகசக்தி அதிகமுடையவர்.  தெரிந்தவர் என்றால் கைகுலுக்கி பேசுவார். மிகவும் தெரிந்தவரென்றால் தோல் மீது கைபோட்டு பேசுவார். துப்பாக்கி சுடுவதில் தேர்ந்தவர். சுயபாதுகாப்புக்காக பாயிண்ட் 32 ரக துப்பாக்கி வைத்திருக்கிறார். தனது உதவியாளர்கலுடன் இரவு 7 மணிக்கு மேல் பேச வேண்டிய நிலை ஏற்பட்டால் உங்களுடன் பேசலாமா?….நேரம் கிடைக்குமா? என்ற குறுஞ்செய்தி அனுப்பி பதில் கிடைத்த பிறகே பேசுவார்.

படப்பிடிப்பு இல்லாத நாட்களில் சமையலறையில் காணலாம். பிரியாணி ஸ்பெஷலிஸ்ட். வீட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு சீருடை மட்டுமல்ல. அவர்கள் வசிப்பதற்காக வீடுகளும் கொடுக்கிறார். அஜீத்திடம் வேலை பார்ப்பவர்கள் 14 பேர். தனது வீட்டுத் தளம் போலவே அவர்களின் வீட்டுத் தளமும் இருக்க வேண்டும் என சொல்லி இருக்கிறார்.

அஜீத்திடம் ஐந்து பைக்குகள் உண்டு. நீண்ட தொலைவு பயணத்துக்காக வாங்கியதில் தான் பெங்களூர், மும்பை என பயணம் செய்தார். அஜீத் தனிப்பட்ட சலுகை எதையும் விரும்புவதில்லை. விமான நிலையம் என்றாலும் சரி வாக்குச்சாவடியாக இருந்தாலும் சரி வரிசையில் தான் நிற்பார்.

பட்டதாரி இல்லை என்றாலும் ஆங்கிலம், இந்தி, பிரெஞ் தெரியும். தனது மொபைல் போனில் குழந்தை அனோஷ்கா பிறந்ததில் இருந்து இப்போது வரை நடப்பது, பேசுவது, ஓடுவது, சிரிப்பது என எல்லாமே குட்டிக் குட்டி வீடியோ கிளிப்பிங்குகளாக இருக்கின்றன. படப்பிடிப்பு இடைவேளைகளில் அவற்றைப் பார்த்து ரசித்துக்கொண்டு இருப்பார்!

 

 

Related Images: