தமிழ்நாடெங்கும் சாதாரணமாக இருந்த தியேட்டர்கள் எல்லாம் மல்ட்டிப்ளக்ஸ் மால்களாக புது வடிவம் பெற்று எழுகின்றன. சாதாரண முதலாளிகள் கையிலிருந்து கார்ப்பரேட் தொழிலாக சினிமா தியேட்டர்கள் வடிவெடுப்பதன் விளைவே இது.

பெரு நகரங்களில் பல பெரிய தியேட்டர்கள் ஷாப்பிங் மால்களுடன் இணைந்த திரையரங்குகளாக பளபளக்கின்றன. அதில் நுழைவதற்கு சாதாரண மக்களுக்கு இடமில்லை.

அந்த வகையில் படுத்துக் கொண்டே  படம் பார்க்கும் வகையில் 9 திரையரங்குகள் கொண்ட மல்டிபிளக்ஸ் மால் ஒன்று கோயமுத்தூரில்  ‘புரோசான் மால்’ என்ற பெயரில் கட்டப்பட்டு வருகிறது.

ஐநாக்ஸ் கார்ப்பரேட் நிறுவனத்தின் மாலான இதில் உள்ள திரையரங்குகளில் ரசிகர்கள் படுத்துக் கொண்டே படம் பார்க்கும் வகையில், மெத்தை,  தலையணைகள் சகிதம் உள்ள, கால்நீட்டி படுத்துக் கொள்ளுமளவு விஸ்தாரமான இருக்கைகளையும் அமைத்திருக்கிறார்கள்.

‘சரி. படுத்துக்கிட்டே படம் பார்க்கிறோம்… பக்கத்துல ஆள் இல்லைன்னா எப்படி ?’ என்கிற உணர்வுபூர்வமான கேள்விக்கும் விடை தரும் வகையில் இந்தப் படுக்கை இருக்கைகள் ஜோடி, ஜோடியாக உட்காரும்படி,, படுத்துக் கொள்ளும்படி அமைக்கப்பட்டிருக்குமாம்.

ஜோடியாகப் படுத்தபடியே படம் பார்க்கலாம். எல்லாம் சரிதான். தியேட்டர்ல படம் மட்டும் தான் ஓடுமா ? இல்லை வேறு ஏதும் அப்படி இப்படி வசதிகளும் உண்டா ? எதுக்கும் கேட்டு வைப்போம்.

Related Images: