‘பொட்டு’ படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகை நமீதா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

2003ஆம் ஆண்டு ‘எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் ஆனேன். கடந்த 13 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தி, ஆங்கிலம் என 6 மொழிகளில் 45 படங்களில் நடித்துள்ளேன். 45 படங்களிலும் கவர்ச்சி நாயகியாகவே வந்துபோன நான், முதன்முதலாக இந்த ‘பொட்டு’ திகில் படத்தில் அகோரியாக நடிக்கிறேன்.

கடந்த 13 வருடங்களாக என்னை ‘மச்சான்கள்’ (ரசிகர்கள்) கவர்ச்சியாக பார்த்து விட்டார்கள். தினமும் பிரியாணி சாப்பிட்டால் சலிப்பு ஏற்பட்டு, சாம்பார் சாதம் சாப்பிட வேண்டும் என்ற ஆசை வரும் அல்லவா? அதுமாதிரி ஒரு மாறுதலுக்கு, வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு வந்து இருக்கிறது. அதை ‘பொட்டு’ படத்தில் இருந்து தொடங்குகிறேன்.

இந்த படத்துக்காக நான் கருப்பு நிறத்துக்கு மாறுகிறேன். இதற்காக துபாய் சென்று, ‘மேக்கப்’ மூலம் உடல் நிற மாற்றம் செய்து கொள்கிறேன். 3 மாதங்கள் வரை என் தோலின் நிறம் கருப்பாகவே இருக்கும். அதன்பிறகு பழைய நிறம் வந்து விடும். படத்தில், நான் அடிக்கடி சுருட்டு பிடிப்பது போல் காட்சிகள் வருகிறது. அதற்குத்தான் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது.

நான் தினமும் ‘டுவிட்டர்’ மூலம் மச்சான்களுடன் கலந்துரையாடுகிறேன். நிறைய பேர் என்னை காதலிப்பதாக கூறுகிறார்கள். அவர்களின் காதலே போதும். கல்யாணம் எனக்கு தேவையில்லை என்று கருதுகிறேன்.

வாழ்நாள் முழுவதும் நடிகையாக இருக்கவே ஆசைப்படுகிறேன். அதற்காகவே 96 கிலோ எடையில் மிக குண்டாக இருந்த நான், கஷ்டப்பட்டு 73 கிலோவாக குறைந்தேன். இன்னும் 8 கிலோ குறைக்கப் போகிறேன்.

இயல்பாகவே நான் துணிச்சல் மிகுந்த பெண். பேய்களுக்கு எல்லாம் பயப்பட மாட்டேன். பேய் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததும், மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டேன்.

Related Images: