வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்கும்., திருமணமாகாத பேச்சிலர் இளைஞர்களுக்கும்., தினக்கூலிகளுக்கும் வரப்பிரசாதமாக கொண்டு வரப்பட்ட திட்டம் தான் “அம்மா உணவகம்”.

இந்த திட்டம் சென்னையில் தொடங்கப்பட்டு மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு சிறப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. பிற மாநிலங்களிலும் செயல்பாட்டுக்கு வர உள்ளது.

இன்றைக்கு சினிமா தொழிலில் ஈடுபட்டுள்ள நூற்றுக்கணக்கான உதவி இயக்குனர்களுக்கும்., பிற உதவியாளர்களுக்கும் பசியை போக்குவது இந்த உணவகங்கள் தான். மக்கள் போற்றும் மகத்தான இந்த திட்டத்தின் பெயரில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் மோசடி நடைபெற்று வருகிறது.

தாணு தயாரிப்பாளர் சங்கத் தலைவராக பொறுப்பேற்றவுடன் தயாரிப்பாளர் சங்கத்தில் அம்மா உணவகத்தை தொடங்கினர். சாப்பிட வழியில்லாதவர்களின் பசியை போக்க மாண்புமிகு அம்மா அவர்களால் தொடங்கப்பட்ட திட்டத்தை கோடிகளில் முதலீடு செய்யும் தயாரிப்பாளர்களின் சங்கத்தில் செயல்படுத்த நினைத்தது கோமாளித்தனம்.

இந்த திட்டத்தின் படி தயாரிப்பாளர் சங்கத்திற்கு சாப்பிட வழியில்லாமல் வரும் தயாரிப்பாளர்களுக்கு இலவசமாக பிரியாணி வழங்குவார்களாம். இதற்காக சென்னையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றுடன் ஒப்பந்தம்
செய்யப்பட்டு மாதா மாதம் பணம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் எந்த தயாரிப்பாளராவது வந்து இலவச உணவு சாப்பிடுகிறார்களா என விசாரித்தால் ” இல்லை ” என்கிற பதில் தான் வருகிறது. அப்படியென்றால் பிரபல ஹோட்டலுக்கு மாதா மாதம் பணம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன என்று விசாரித்தால் திடுக்கிடும் உண்மை வெளிவருகிறது.

இந்த திட்டத்தின் படி ஹோட்டலுக்கு பணத்தை கொடுத்துவிட்டு அவர்களிடமிருந்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணுவும், செயலாளர் சிவாவும், உயர்ரக மளிகை பொருட்களாக பெற்று கொள்கின்றனர். மாதா மாதம் ஹோட்டலில் இருந்து உயர்ரக மளிகை பொருட்கள் தாணுவின் வீட்டிற்கும், சிவாவின் வீட்டிற்கும், அனுப்பிவிட்டு தயாரிப்பாளர் சங்கத்திற்கு உணவு சப்ளை செய்தது போல கணக்கு காட்டி ஹோட்டல் நிர்வாகம் பணத்தை பெற்று கொள்கிறது.

தயாரிப்பாளர்களுக்கு நல்லது செய்வது போல் நடிக்கும் தாணுவும் அவரது குடும்பமும் இன்றைக்கு சாப்பிடுவதே தயாரிப்பாளர் சங்க பணத்தில் தான் என்று வேதனையோடு மூத்த நிர்வாகி ஒருவர் புலம்புவதை தயாரிப்பாளர் சங்கத்தில் கேட்க முடிகிறது.

Related Images: