தான் ஏற்கனவே பத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய பிரபலம் என்பதை மறைத்து விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஆனந்த் அரவிந்தாக்‌ஷன் முதல் பரிசைத்தட்டியது மோசடி என்று இணையங்களில் பகடி செய்யப்பட்டுவருவதைத் தொடர்ந்து தனது முகநூல் பக்கத்தில் முகாரி ராகம் இசைத்திருக்கிறார் ஆனந்த்.

படித்து பரிதாபப்படலாமா பகடியைத்தொடரலாமா என்று நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள்…

‘கடந்த இரண்டு தினங்களாக நான் கொண்டாட்டத்தின் உச்சத்தில் இருந்திருக்க வேண்டும். கடினமாக உழைத்துப் பெற்ற வெற்றியை மகிழ்வாகக் கொண்டாடி இருக்க வேண்டும். ஆனால் இந்த வெற்றி எனக்கு அப்படியான ஒரு சந்தோஷத்தை தரவில்லை. இந்த கடுமையான வாரத்தில் எனக்கு ஆதரவு அளித்தவர்களையும் விஜய் தொலைக்காட்சியையும் நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன். இந்த என்னுடைய வெற்றி என்பதை நான் எளிதாக அடைந்துவிடவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. இதற்கு முன் பாடியிருக்கிறேன் தான். ஆனால் பின்னணி பாடகர் என்றால் ஒரு பாடல் பாடியவரையும் அப்படித்தான் சொல்கிறோம் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய எஸ்;பி;பி சாரையும் அதே பெயரில் தான் அழைக்கிறோம். என்ன செய்வது? இதற்கு முன்னர் பாடியிருக்கேன் என்பது அத்தனை பெரிய குற்றமா?

நான் இதற்கு முன் பாடியிருக்கிறேன் என்பதை என்றுமே மறைத்ததில்லை. என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் என்னைப் பற்றிய முழு விபரங்கள் இப்போதும் உள்ளது. மறைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால் அதையெல்லாம் என்றோ அழித்திருப்பேன் அல்லவா? தவிர என்னுடன் பாடியவர்கள், போட்டியிட்டவர்கள் அனைவருக்கும் நான் பாடகன் என்று தெரியும். அவர்கள் ஒருவரும் இதுவரை எனக்கு எதிராக எதுவும் சொன்னதே இல்லை. தமிழகத்தின் பிரம்மாண்டக் குரல் தேடல் என்பதால் முன்பு பாடியிருக்கவே கூடாது என்று விதிமுறையில் நிச்சயமாக இல்லை.

என்னுடைய இந்தப் பாதையும் பயணமும் அத்தனை எளிதாக நான் கடந்து வந்ததல்ல. பாடல் பதிவு அரங்கில் பாடுவதற்கும் நேரலையான இத்தகைய நிகழ்ச்சியில் பாடுவதற்கும் நிறைய வித்யாசங்கள் உள்ளன. மிகக் கடின உழைப்பும் இதற்குத் தேவை. நான் அப்படித்தான் ஒவ்வொரு முறையும் தேவையான பயிற்சியுடன் தான் வந்து பாடினேன். அதன் பிறகே இந்த வெற்றி சாத்தியமானது. பத்து வருட போராட்டத்துக்குப் பின் ஒரு சிறிய நம்பிக்கையின் ஒளி என் பாதையில் தென்பட்ட போது அதை நான் பின் தொடர்ந்தேன். அது தான் இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி.

இந்த வெற்றியின் சந்தோஷத்தை உணர முடியாமல் மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்து நிற்பது போல் உள்ளது. இதற்கு முன் என்னை நேசிக்க இத்தனை அதிகம் பேர் இருந்ததில்லை என்றாலும் என்னை இக்காரணத்துக்காக வெறுத்தவர்களும் இல்லைதானே? மன அமைதியுடன் இருந்தேன் ஆனால் இப்போது நிம்மதி இழந்து நிற்கிறேன். ஏன் தான் ஜெயித்தேன்? எதற்காக இந்த வெற்றி?’ என்று பதிவு செய்துள்ளார்.

Related Images: