பேச்சு திறமை மிக்கவர் …உள்ளதை உள்ளப் படியே பட்டவர்த்தனமாக பேசுபவர், சமூகத்தில் மட்டுமின்றி , சுற்றுபுறம் சூழ் நிலையில்  மிகுந்தக் கவனம் கொண்டவர், உரிய நேரத்தில் உதவும் மனப்பான்மை கொண்டவர் எனப் பல ‘புகழ்’ கண்ட ஆர் ஜே பாலாஜி நாளை வெளி வர இருக்கும் ‘புகழ்’ படத்தில் ஒரு பிரதான வேடத்தில் நடித்து வருகிறார். 
 
ஜெய் கதாநாயகனாக நடிக்கும் ‘புகழ்’ படத்தில்  அவருக்கு இணையான பாத்திரத்தில் நடித்து வரும் ஆர் ஜே பாலாஜி ’புகழ்’ படம் தொடர்பான தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.’ வடகறி ‘ படத்தின் மூலம் எனக்கும் ஜெய்க்கும் இடையே  நல்ல பரிச்சயம் ஏற்பட்டது. அந்தப் படத்தில் எங்களுக்குள் இருந்த கூட்டணி, வெற்றிக் கூட்டணியாக இந்தப் படத்தில் தொடரும் என்பது நிச்சயம். ‘புகழ்’ தற்போதைய பரபரப்பான அரசியல் பின்னணி கொண்ட கதை. ஆயினும் சில காட்சிகள் நகைச்சுவை இழையோட சொல்லப்பட்டு இருக்கிறது. ஒரு நடிகனாக இந்தப் படம் எனக்கு நிச்சயம் புகழ் கொடுக்கும். ஜெய் இந்தப் படத்தின் மூலம் மிக பெரிய புகழை அடைவார் என்பது நிச்சயம். இந்தப் படத்துக்காக  நாங்கள் ஆவடி அருகே சில நாட்கள் படம் பிடித்தோம் . எங்களுக்கும் அங்கு நித்தமும்  கூடும் ரசிகர்களுக்கும் எந்த அளவுக்குஅன்பு இருந்ததென்றால், சற்று தாமதமாக நாங்கள் படப்பிடிப்புக்கு சென்றால் கூட அங்கு இருப்போர் ‘என்னா சார் , இன்னிக்கு லேட்டு ன்னு கேப்பாங்க. தயாரிப்பாளர் சுஷாந்த் பிரசாத்தை கண்டு  பயந்தோமோ இல்லையோ, இந்தக் கேள்விக்கு பயந்து நேரத்தில் படப்பிடிப்புக்கு சென்று விடுவோம். .இயக்குனர் மணிமாறன் இந்தப் படத்துக்கு பிறகு நிச்சயம் ஒரு நட்சத்திர இயக்குனராக வலம்  வருவார் என்பது உறுதி ‘ எனக் கூறினார் ஆர் .ஜே  பாலாஜி.

Related Images: