தமிழ்ச் சினிமாவில் இதுவரை வந்த பெரும்பாலான பெண் இயக்குனர்கள் ஹம் ஆப் கே ஹைன் கோன் போல க்ளிஷே டைப் படங்களாகவே எடுத்துத் தள்ளினார்கள். அதை மாற்றியவராக வந்திருப்பவர் இறுதிச் சுற்று சுதா கொங்கராவ். படத்தில் அவரது மெச்சூரிட்டி நன்கு வெளிப்பட்டிருந்தது. அவர் போலவே மெச்சூர்டான இயக்குனராக வருவார் என நம்பிக்கை கொள்ள வைக்கிறார் உஷா கிருஷ்ணன். சுசீந்திரனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

சிதம்பரம் அருகிலிருக்கிற குக்கிராமத்திலிருந்து கிளம்பி முதுகலை பட்டம் பெற்று, “ஒரே லட்சியம் சினிமாதான்” என்று வந்து சேர்ந்திருக்கிறார். பாண்டியநாடு, ஜீவா ஆகிய படங்களில் பணியாற்றியவருக்கு தனியாக படம் பண்ண வேண்டும் என்ற ஆசை வந்ததும் ஒவ்வொரு ஹீரோவாக சந்தித்து கதை சொல்லக் கிளம்பினாராம். பல முன்னணி ஹீரோக்கள் வீட்டு கதவு திறக்கவேயில்லை. சிலர் வருஷக்கணக்காக அலையவிட்டார்கள். அந்த நேரத்தில்தான் பூ படத்தில் துவங்கி சண்டி வீரன் வரைக்கும் ஆறேழு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிஜி.முத்தையாவிடம் கதை சொல்லியிருக்கிறார் உஷா. அவருக்கும் கதை பிடிக்க, அதற்கப்புறம் அவரது சிபாரிசின் பேரில் கூட சில பல ஹீரோக்களை சந்தித்திருக்கிறார். கதை சொல்லியிருக்கிறார். ம்ஹும்… ஒரு பூவும் உதிரவில்லை.

 

தொடர்ந்து விஜய் சேதுபதியை அணுகினார் உஷா. வருஷக்கணக்காக அலைய விடும் நடிகர்கள் மத்தியில் ஒரே வாரத்தில் அழைப்பு வந்துவிட்டது விஜய் சேதுபதியிடமிருந்து. முழு கதையையும் கேட்டாராம் அவர். ஆனால், “இந்த கதை எனக்கு பொருத்தமா இருக்குமான்னு தெரியல. ஆல் தி பெஸ்ட்மா”ன்னு சொல்லி அனுப்பினாராம்.

தன் வாழ்வில் நடந்த சொந்தக் கதையைதான் இப்போது ‘ராஜா மந்திரி’ என்ற பெயரில் படமாக்கியிருக்கிறார் உஷா கிருஷ்ணன். கலையரசன், காளி வெங்கட் இருவரும் லீட் ரோலில் நடித்திருக்கிறார்கள். ஷாலின் என்ற கேரள நடிகையை இப்படத்தில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தியிருக்கிறார் உஷா.

இறுதிச் சுற்று சுதா போல கலக்குவாரா உஷா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Related Images: