நட்சத்திர கிரிக்கெட் என்று மொட்டை வெயிலில் காசு கொடுத்து வந்து ரசிகர்கள் கிரிக்கெட் பார்ப்பார்கள் என்று யாரோ கொடுத்த தவறான ஐடியாவால், ஏப்ரல் 17 ஆம் தேதி நடிகர் சங்கம் சார்பாக நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடந்தது. அந்நிகழ்ச்சி படு ப்ளாப்பானாலும் அது வெற்றிகரமாக நடந்ததாகக் கூறி அதற்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் நடிகர் சங்கம் சார்பாக, சந்திப்பொன்றை நடத்தினார்கள்.

சந்திப்பில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பொன்வண்ணன், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர். நடிகர் நடிகைகள் நிகழ்ச்சிக்காக உதவியவர்கள் பணியாற்றியவர்கள் ஆகிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு விஷால் பதிலளித்தார். அப்போது அஜித், கிரிக்கெட் நிகழ்ச்சிக்கு வராதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த விஷால், இதற்கு மேலும் பிரச்சனையை பெரிதுபடுத்த விரும்பாமல் சட்டென்று இறங்கி வந்து யார் மனமும் புண்படாமல் பேசினார்.

‘எனக்கும் அஜித்துக்கும் எந்தப்பிரச்சினையும் இல்லை, அஜித்தை அஜித்ன்னு கூப்பிடக்கூடாது அஜித் சார் என்று கூப்பிடணும் என்று சொன்னார்கள், அவரை எனக்கு ரொம்ப நாளாகவே தெரியும், அவருக்கும் எனக்கும் பிரச்சினை என்று சொல்வது வெறும் விளம்பரத்துக்காகத்தான்.

ஒவ்வொருவருடைய தனிப்பட்ட கருத்தையும் மதிக்கவேண்டும், நான் வரவில்லை என்று சொல்கிறவரை வந்துதான் ஆகவேண்டும் என்று வற்புறுத்தக்கூடாது. எங்களுக்கு அவர் மீது எந்த வகையிலும் கோபமில்லை, அவர் வராததற்கு விளக்கம் சொல்லணும்கிற அவசியம்கூட அவருக்கு இல்லை, எனக்கும் அவருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்ல, பிரச்சினையும் பண்ணமாட்டேன், ஐ லவ் அஜித், ஐ லவ் விஜய், ஐ லவ் ரஜினி, ஐ லவ் கமல் அண்ட் ஐ லவ் ஆல் ஆக்டர்ஸ்.

எனக்கு இந்தக் கட்டிடம் நல்லபடியாக நடக்கவேண்டும் என்பது மட்டுமே விருப்பம், அதற்காகவே உழைத்துக்கொண்டிருக்கிறேன். எனவே நீங்களும் அஜீத் பாட்டை நிறுத்தினேன், நடிகர்சங்க நிகழ்ச்சி தோல்வியடைய இதுதான் காரணம் என்பது போன்ற நடக்காத செய்திகளை நடந்ததுபோல் எழுதாதீர்கள்” என்று பத்திரிக்கையாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

நடிகர்களிடையே ஒற்றுமையின்மை இருப்பதை மேலும் பெரிதுபடுத்தி நாறடிக்க விரும்பாத விஷால் அஜித், விஜய் புறக்கணிப்பை கேஷூவலாக எடுத்துக் கொண்டு பேசியதன் மூலம் ஜென்ட்டில்மேனாகி விட்டார்.  நடிகர்  சங்கத்துடன் ஒத்துழைக்காமல் கெத்து  காட்டிய அஜீத்தும், விஜய்யும் விஷாலின் முன் சின்னப் பொடியர்களாகி விட்டார்கள்.

ஒத்துமையா இருங்கப்பான்னு புதுசா ஒரு சினிமா படம் எடுத்து தான்  யாராவது புரிய வைக்கணும் போல.

Related Images: