ஹாய் வினவு,

முதல்லயே சொல்லிடறேன். உங்க மேல நான் செம்ம கடுப்புல இருக்கேன். எதனாலேன்னு அப்பால சொல்றேன்.

நான் வாசு. வாசுதேவன் மாரிமுத்து. திருவண்ணாமலை சொந்த ஊரு. அருணாச்சலேஸ்வரர் கோயில், ரமணாஸ்ரமம் எல்லாம் உங்களுக்கு தெரியும்ல? புண்ணிய பூமி சார்…நான் BE (E&C) முடிச்சிட்டு இப்ப அக்சென்சர்ல வொர்க் பன்றேன். கொஞ்ச நாள் முன்னே ஆபீஸ்ல ஒரு கொலீக் சொல்லித் தான் உங்க வெப்சைட் பத்தி தெரியும்.

எனக்கு சல்மான் கான் பிடிக்கும்; தமிழ்லேன்னா எனக்கு எல்லாமே நம்ப தல தான். டபாங் பார்த்தீங்களா? செம்ம மாஸ்ல? உங்க ரசனைக்கு நீங்க எங்கே பார்த்திருக்கப் போறீங்க. என்னோட பிரச்சினை அதில்லே. நீங்க அடிக்கடி தேவையில்லாம சல்லு பாய் பத்தியும் தல பத்தியும் கலாய்ச்சி எழுதினு இருக்கீங்க. எங்காளோட பெருமையை நீங்க இன்னும் சரியா புரிஞ்சிக்கலை. இப்ப புரிஞ்சிப்பீங்க.

23ம் தேதி இங்கிலிஷ் ஹிந்து பத்திரிகைல ஐந்து மீனவர் விடுதலை பத்தி நம்ம சல்லு பாய் சர்கிள்ள ரொம்ப பேமஸ்! மேட்டர் இதான், சல்மான் கானும் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சேவும் நண்பர்கள். 22-ம் தேதி சல்லு பாயோட சிஸ்டர் அர்பிதாவுக்கு கல்யாணம். இந்தக் கல்யாணத்துக்கு அவரோட ஃபிரண்ட் நமல் ராஜபக்சேவுக்கும் அவோரோட அப்பா மகிந்த ராஜபக்சேவுக்கும் பத்திரிகை வச்சாரு சல்லு பாய்.

சல்லு பாய் இப்ப ரொம்ப பிசியா இருந்ததாலே கல்யாணப் பத்திரிகையை மீடியா ஃபிரண்ட் ரஜத் சர்மா கிட்டே கொடுத்து விட்டார். மகிந்த ராஜபக்சேவை சந்திச்ச ரஜத் சர்மா, சல்லுபாய் கேட்டுகிட்டதால தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து மீனவர்கள் விடுதலை பற்றி கேட்டிருக்கார். மகனோட பிரெண்டே ஆசைப் பட்டு கேட்டதும் மகிந்தா மீனவர்களை விடுதலை செய்ய ஒரு காரணமா இருக்கலாம்னு சொல்லாம சொல்லுது ஹிந்து பத்திரிகைல வந்த செய்தி.

மீனவர்கள் விடுதலைக்காக இந்திய அரசு எல்லா சாத்தியமான வழிமுறைகளையும் முயற்சி செய்து பார்த்தாங்களாம். அதில் சல்மானுக்கும் நமலுக்கும் இருந்த நட்பை பயன்படுத்தியதும் ஒன்னுண்ணு ஹிந்துகாரனே சொல்லிட்டான்.

மீனவர்களை விடுவித்த சல்மான் கானின் நமல் ராஜபக்சேவுடனான நட்பு
தமிழ்நாட்டுல தமிழர்களுக்கு தமிழின தலைவர் கருணாநிதிலேர்ந்து ரகவாரியா போராளிகள் இருக்காங்க. இங்க இருக்கிற எல்லா குட்டிச் சுவர்லேயும் மீசை முறுக்கிட்டு திரியற திருமாவளவன் இருக்காரு; விரைவீக்க டாக்டரே பொறாமை படும் அளவுக்கு எல்லா இருட்டுச் சந்து போஸ்டர்லயும் பல்லைக் காட்டுற மருத்துவர் மற்றும் சின்ன மருத்துவர் இருக்காரு; இது தவிற 16” பைசெப்ட் பாய் சீமான், பழ நெடுமாறன், வைகோ, டிராபிக் ராமசாமி, பி.குமார் (அகில இந்திய காதலர் கட்சி), அர்ஜுன் சம்பத், ஜி.கே வாசன் (லேட்டரல் எண்ட்ரி) இப்படி பலர் இருக்காங்க. இவங்க எல்லாருக்கும் மேல அகிலம் போற்றும் மக்கள் முதல்வர் அம்மா இருக்காங்க.

ஆனா இத்தனை பேரும் என்ன செய்யறாங்க?

தாத்தா சி.எம்மா இருந்தப்ப டெல்லிக்கு லெட்டர் எழுதினாரு.. தாத்தா ரெஸ்ட்டுக்கு போயி மம்மி வந்த பின்னும் தாத்தா காட்டிய அதே லட்சிய வழியில் அதே லெட்டரு தான். இப்ப மம்மிய பெங்களூர் கோர்ட்டு மக்கள் முதல்வர் ஆக்கினப்புறம் ஒருத்தர் சி.எம்மா வந்திருக்காரு. பாஷா படத்துல ஆட்டோ மாணிக்கத்த ஆனந்தராஜ் உருட்டு கட்டைல போட்டு சாத்து சாத்துன்னு சாத்தும் போது ரஜினி லூசு மாதிரி சிரிப்பார்ல, அந்த ரியாக்சனயும் குணா கமல் ரியாக்சனையும் மிக்ஸ் பண்ணா மாதிரி இருக்கிற குங்குமப் பொட்டு மிச்சர் மாமா ஓ.பி.எஸ் கூட கலைஞர் காட்டிய அதே கொள்கையின் படி டெல்லிக்கு லெட்டர் தான் போடறாரு.

இவங்க எழுதற லெட்டரை சென்னை செக்கரட்ரியேட் போஸ்ட் பாக்ஸ்லேர்ந்து எடுக்கற கேப்ல பத்து மீனவர்களையும், சென்னைலேர்ந்து டெல்லிக்கு அந்த லெட்டர் போற கேப்ல பதினைஞ்சி மீன்வர்களையும், மோடி அந்த லெட்டர்ல பஜ்ஜிய அழுத்தி எண்ணைய வடிச்சிட்டு கசக்கி குப்பைத் தொட்டிக்குள்ளே வீசற கேப்ல மேலும் இருபது மீனவர்களையும் கைது செய்யறான் ராஜபக்சே.

இந்தியா தான் இந்த உலகத்திலேயே நாலாவது பலமான நாடுன்னு சொல்றானுக.. ஆனா, சுள்ளான் சிலோன்காரன் போட்டு கொமட்டுலயே குத்தறான். ஏண்டா போலீசு மிலிட்டரின்னு ஒவ்வொத்தனையும் கறி சோறு போட்டு செனப் பன்னி மாதிரி வளத்து வச்சிருக்கீங்களேடா, இதெல்லாம் அடி வாங்கற பாடியாடான்னு கேட்கலாம்னு தான் பார்த்தேன். BUT, அதெல்லாம் பாலிடிக்ஸ் பாஸ். நமக்கு பாலிடிக்ஸ்னாலே அவ்வளவா ஆகாது.

ரஜத் சர்மா
ஆனா இன்னைக்கு என் தலைவன் சல்மான் கானுக்காக நான் பேசியே ஆகனும் பாஸ். நீங்க பாருங்க இந்தியாவோட ஆர்மி, நேவி, விமானப்படை, உளவுப் படை, போலீஸ் படை அப்புறம் அவன் வச்சிருக்கிற தொந்திப் படைன்னு எவன்னாலயும் சிலோன்காரனை இத்தனை வருசமா டச் பண்ண முடியலை. மோடி இன்னாமோ பெரிய WWF Undertaker மாதிரி வஸ்தாதுன்னு சொன்னானுங்க.. அவரு வந்த பின்னேயும் மீனவர்கள் நிலைமை மாறவே இல்லை.

ஆனா இந்த அஞ்சி பேர் விசயத்துல பாருங்க இவரு போன் போட்ட உடனே அவரு வீட்டுக்கு அனுப்பி வச்சாராம். தமிழ்நாட்டுல பி.ஜே.பிக்கு பூத் கமிட்டி ஏஜெண்ட் போடக் கூட ஆளில்லாம காத்தாடிட்டு இருக்கு. இந்த மாதிரி எதுனா சீன் போட்டா தானே அடுத்த எலக்சென்ல வார்டு கவுன்சிலராவது ஜெயிக்க முடியும். ஏன்னா உத்திரபிரதேச இடைத்தேர்தலுக்காக ஊரையே கொளுத்தி விட்டவனுங்க தானே.

அதுக்கு தகுந்தா மாதிரி பி.ஜே.பியோட தமிழ்நாட்டு தலைவி தூள் சொர்ணாக்கா வேற எல்லா டி.விலயும் போயி “மீனவர்கள் விடுதலையை தயவு செய்து யாரும் அரசியல் ஆக்க வேணாம்.. ஆனா விடுதலைக்கு நாங்க தான் காரணம்”னு பீத்திகிட்டே இருக்காங்க. சரிங்கக்கா ரெண்டு நாள் முன்னாடி மோடியை பார்த்து பயந்து தூக்குலேர்ந்து அஞ்சி மீனவர்களை விடுவித்த ராஜபக்சே நேத்து பதினாலு மீனவர்களை கைது பண்ணிருக்காப்லயே? உங்காளுக்கு நெஜமாலுமே நெஞ்சில மஞ்சா சோறு இருந்தா “இனிமே தமிழ்நாட்டு மீனவர்கள் ஒருத்தரைக் கூட நாங்க கைது செய்ய மாட்டோம்னு” ராஜபக்சேவை சொல்ல வைங்க பார்க்கலாம்.

வினவு சார்.. பி.ஜே.பி பயங்கரமா காமெடி பன்றாங்கன்னா நம்ம அ.தி.மு.க காமெடியா பயங்கரமா நடந்துக்கறாங்க. பி.ஜே.பி காரன் என்னடான்னா சிலோன்ல இருந்து ரிலீஸ் ஆன மீனவர்களை வீட்டுக்கு அனுப்பாம, அவங்க வீட்டுக்காரங்க கிட்ட கூட சொல்லாம, அவங்கெல்லாம் திருச்சி விமான நிலையத்துல எப்படா பார்ப்போம்னு தவிச்சிகிட்டு இருந்த நேரத்துல டெல்லிக்கு கூப்டு மோடியோட நிப்பாட்டி போட்டோ சூட் வைக்கிறான்.

டெல்லிலேர்ந்து நேரா வீட்டுக்கு அனுப்பிடுவாங்கன்னு பாத்தா கூடவே செக்கூரிட்டியா ஒரு ஆபீசரையும் அனுப்பி வைக்கிறான். ஏன்னா, தமிழ்நாட்டுக்கு வரும் மீனவர்கள் அம்மாவோட நின்னு ஒரு போட்டோ எடுத்து அதை மோடி போட்டோ வர்றதுக்கு முன்னே ரிலீஸ் பண்ணிடப் போறாங்களோன்னு ஒரு முன்னெச்சரிக்கை. ம்ம்ம்ம் பாம்பின் கால் பாம்பறியும்; ஒரு விளம்பரப்பிரியனுக்குத் தானே இன்னொரு விளம்பரப்பிரியையின் மனம் புரியும்.

தமிழினத்தின் விடிவெள்ளி சல்மான் கான்
இந்த நிலைமைல நம்ம தினத்தந்தி ரங்கராஜ் பாண்டேவோட நிலைமைய யோசிச்சா தான் மனசுக்கு ரொம்ப கஸ்டமா இருக்கு பாஸ். அவரோட ரெண்டு கண்ணும் ஒன்னை ஒன்னு எதிர்க்கும் தர்மசங்கடமான நிலைமை. மோடியை ஆழ்மனசிலேர்ந்து திருப்தியா ஆதரிச்சு பேசலாம்னு பாத்தா மக்கள் முதல்வர் காண்டாகி பெரிய அண்ணாச்சி மேல கஞ்சா கேசு விழுந்தாலும் விழும் – தொழில் நடக்கனுமா இல்லையா. வழக்கம் போல வாலைச் சுருட்டிகிட்டு மக்கள் முதல்வரை வெளிப்படையா ஆதரிக்கலாம்னாலும் பிரச்சினை.

இப்படி இவங்க எல்லாரும் மீனவர்களை மறந்துட்டு விளம்பரத்துக்காக அடிச்சிட்டு சாவும் போது எல்லாத்தையும் சுபமா நடத்தி வைச்சிட்டு எங்க சல்லு பாய் ஜென் துறவி மாதிரி சைலண்டா இருக்காரு.

ஈழப் போர் நடந்தப்ப சீமானும் வைகோவும் (பாஸ் விரல் வலிக்குது, இந்த லிஸ்ட்ல ஏற்கனவே நான் சொன்ன உதிரிப் போராளிகளையும் சேர்த்து புரிஞ்சிக்கங்க) அம்மா கால்லே விழுந்தாங்க, பி.ஜே.பி கால்லயும் விழுந்தாங்க. அட அவ்வளவு ஏங்க பாரபட்சம் பார்க்காம ஒபாமா கால்லயும் ஹிலாரி கால்லயும் கூட விழுந்தாங்க. ங்கொய்யால யாரு கிட்டே…..? ராஜராஜ சோழன் பரம்பரை பாஸ்; கால்ல விழுறதுன்னு முடிவு பண்ணிட்டா எவன் கால்னு பார்க்க மாட்டாய்ங்கே. மீசைய முறுக்கி விட்டுகினு குப்புன்னு விழுந்துடுவாய்ங்கே. வீரம் முக்கியமில்லையா பாஸ்.

அந்த தமிழ் வீரத்தை சல்லு பாய் கிட்டே காட்டி அவர் கால்ல விழுந்திருக்கலாம். ஈசியா மேட்டரை முடிச்சிக் குடுத்திருப்பார். சோட்டா பீம் மோடியாலயே முடியாததை அசால்டா முடிக்கிறவர் தான் சல்லு பாய். அவரு தமிழர் இல்லைன்னு இவங்க யாரும் யோசிக்கத் தேவையில்லை. தமிழ் போராளிகளின் ஒரே பிரச்சினை வடுக வந்தேறிகள் தானே? வேணும்னா இவங்க வழக்கமா வடுக வந்தேறிகளைக் கண்டு பிடிப்பதற்காக செய்யும் யூரின் டெஸ்ட் செய்து பார்க்கட்டுமே. அவர் வடுக வந்தேறி இல்லைன்னு டீடெய்லா ரிசல்ட் வரும். அதுக்கு நான் கேரண்டி.

தமிழ் போராளிகள் மேல கூட எனக்கு கோபம் இல்லை பாஸ் – நாளைக்கே சல்லு பாய் சீமானுக்கு கால்ஷீட் கொடுத்தா ”அந்த ராஜராஜ சோழனோட மறுஜென்மமே சல்மான் கான்” தான் அப்படின்னு நேக்கா பேலன்ஸ் பண்ணிடுவார். சீமான் இந்த மாதிரி எழுதற திருக்குறளுக்கெல்லாம் உரை எழுதறக்காகவே நிறைய அப்ரசண்டி பாய்ஸ் இருக்காங்க. சோ நோ பிராப்ளம்.

எனக்கு உங்க மேல தான் பயங்கர காண்டா இருக்கு. தமிழர்களுக்கு இருக்கும் ஒரே எதிர்கால நம்பிக்கை சல்லு பாயை நீங்க எத்தனை கேவலமா எழுதியிருக்கீங்க? சுவச் பாரத் பதிவுல கூட ’பொறுக்கி சல்மான் கான்’ அப்படின்னு எழுதியிருக்கீங்க. சல்லு பாய் லைட்டா மப்புல வண்டி ஓட்டும் போது குறுக்கே வந்து விழுந்து செத்தவங்களுக்காக எங்க தலைவனை எத்தனை கேவலமா திட்டிப் பேசினீங்க. போதைல இருக்கிறவன் குழந்தை மாதிரி பாஸ்.

அன்னைக்கெல்லாம் மனசுக்கு ரொம்ப கஸ்டமா இருந்துச்சி பாஸ். நீங்க செய்த தவறுக்கு பரிகாரமா இந்த பதிவை வெளியிடனும். செய்வீங்களா பாஸ்?

இப்படிக்கு,

வாசு

குறிப்பு : ஒருவேளை என்னோட லெட்டரை வெளியிட்டா தயவு செஞ்சு “தமிழினத்தின் புதிய விடிவெள்ளி சல்மான் கான்” அப்படின்னு பேர் வைங்க தலைவா.

http://www.thehindu.com/news/international/south-asia/how-colombo-released-the-indian-fishermen/article6625726.ece  –  சல்மான்கான் பற்றிய ஹிந்து கட்டுரை

தமிழரசன்
நன்றி – வினவு இணையதளம்
http://www.vinavu.com/2014/11/25/salman-khan-played-a-role-in-rescuing-tn-fishermen/

Related Images: