சினிமா மீதான பெரும் கனவுடன் திரைத்துறைக்குள் வரும் பலருமே பிரபலமானதும் அரசியலிலும் கால் பதித்துவிடுகிறார்கள். அப்படி இயக்குநராக அறிமுகமாகி, நடிகராக நிலைபெற்று அரசியலிலும் கவனம் செலுத்திவருபவர் கரு.பழனியப்பன்.

ஸ்ரீகாந்த், சினேகா நடிப்பில் வெளியான ‘பார்த்திபன் கனவு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கரு.பழனியப்பன், அதன் பிறகு, சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், மந்திரப்புன்னகை, சதுரங்கம் மற்றும் ஜன்னல் ஓரம் படங்களை இயக்கினார். அவற்றில் சில ஹிட்டு சில அன்ஃபிட்டு. சமீபத்தில் ‘நட்பே துணை’ படத்தில் வில்லன் ரோலில் நடித்திருந்தார். மேலும் சில படங்களிலும் நடித்து வருகிறார்.

அது சரிய்யா…இப்ப இந்த தகவல்களுக்கு என்ன அவசியம் வந்தது என்கிறீர்களா?

எட்டு எட்டு மனுஷன் வாழ்வைப் பிரிச்சுக்கோ என்ற கவிஞர் டயமண்டுவின் கண்றாவிக் கருத்துக்கு ஏற்ப, எட்டு வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் இயக்குநராகக் களமிறங்குகிறார் கரு.பழனியப்பன். அதிலும் லேட்டஸ்ட் டிரெண்டிங் நடிகராக வேண்டுமென்று தேடி ஆர்யாவை ஓகே செய்திருப்பதாகத் தகவல்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ செம ஹிட். இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு, அடுத்தடுத்து பல படங்கள் ஆர்யாவைத் தேடி வருகிறது. எக்கச்சக்கப் படங்கள் வந்தாலும் , செலக்டிவான படங்களை மட்டும் தேர்ந்தெடுக்கிறார் ஆர்யா. அப்படி, சமீபத்தில் கரு.பழனியப்பன் – ஆர்யா சந்திப்பு நடந்திருக்கிறது. அப்போது, இவர் சொன்னக் கதைப் பிடித்துப் போனதால் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்காராம் ஆர்யா.

ஆர்யாவுக்கு சுந்தர்.சி. இயக்கத்தில் ‘அரண்மனை 3’ மற்றும் விஷாலுடன் நடித்திருக்கும் ‘எனிமி’ படங்கள் ரிலீஸுக்குத் தயாராகிவருகின்றன. அதோடு, டெடி இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்திலும், மகாமுனி இயக்குநர் சாந்தக்குமார் இயக்கத்திலும் நளன் குமாரசாமி இயக்கத்திலும் படங்கள் நடிக்க கமிட்டாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படங்களின் லிஸ்டில் கரு.பழனியப்பன் படமும் இணைகிறது. விரைவிலேயே, அதிகாரபூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

எட்டு வருஷங்களுக்கு அப்புறமா படம் இயக்குறதால கொஞ்சம் தரமான ஹிட்டு கொடுக்குற மாதிரி வாங்க பாஸ்…

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.