ஒளிப்பதிவாளர் லக்ஷ்மன் இயக்குனாராக அறிமுகமாகும் திரைப்படம் ‘மசாலா படம்’. மிர்ச்சி சிவா, பாபி சிம்ஹா, லக்ஷ்மி தேவி மற்றும் கௌரவ் நடிக்கும் இப்படத்தை ஆல்இன் பிக்சர்ஸ் சார்பில் விஜய் தயாரிக்கிறார். இப்படத்தின் நாயகி லக்ஷ்மி தேவி படத்தைப் பற்றி மிக ஆர்வமாகப்
பேசினார். பின்பு தான் தெரியவந்தது படத்தின் திரைக்கதையை அவர் எழுதியுள்ளார் என்பது.

“நல்ல படமோ, மொக்க படமோ ஒரு மசாலா படம் நம்மை மகிழ்விக்க கூடியது. நாம் வாழ கனவு காணும் அந்த கதாப்பாத்திரங்களை நம் கண் முன் நிறுத்துபவை. நாம் எதிர்பார்க்கும் வியப்புகளை மட்டுமே அடக்கியதே மசாலா படங்கள். கவிதைகள், சிறு கதைகள், நாடகங்கள் இப்பொழுது
சினிமா என எனக்கு எழுதுவது மிகவும் பிடிக்கும். இயக்குனர் லக்ஷ்மன், தயாரிப்பாளர் விஜய், நான் ஆகிய மூவரும் நல்ல நண்பர்கள். மசாலா படங்களை பற்றி ஒரு படம் எடுக்கலாம் என்று திட்டமிடவில்லை. பலரும் இங்கு மசாலா படங்கள் மற்றும் ஆன்லைன் சினிமா விமர்சகர்களை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். இதை அடிப்படையாய் வைத்தே தான் இக்கதையை எழுதினோம். இது ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்.”

“கேமரா முன்பு நடிப்பு, மற்ற சமயம் இயக்கம், தயாரிப்பு என ‘ மசாலா படம்’ எனக்கு ஒரு நேர்த்தியான சினிமாவை கற்றுக் கொடுத்துள்ளது. என்னால் இரவு பகல் பாராமல் உழைக்க முடியும் என்பதை உணர்த்தியுள்ளது இப்படம். மிர்ச்சி சிவாவுடன் பொது இடங்களில் ஷூட் செய்யும்பொழுது அவரை சுற்றி ரசிகர்கள் சூழ்வதை பார்க்கும்போது அவ்வளவு உற்சாகமாய் இருக்கும். மறுபக்கம் பாபி சிம்ஹாவுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம், ஒரு காட்சியில் அவர் என்னை தள்ளி விடுவார் நான் ஒதுங்கி விட வேண்டும் அனால் நானோ பொம்மைபோல் கீழே விழுந்துவிட்டேன்.” என்று கூறி சிரித்தார் லக்ஷ்மி தேவி.

ஸ்டில்லில் கலக்குறீங்க மேடம்.  திரையில் நடிப்பில் கலக்குவீங்களா ? இல்லை திரைக்கதையிலா ? காத்திருக்கிறோம்.

Related Images: