உயர்சாதிப் பெண்ணைக் காதலித்து திருமணம் செய்ததால் கொலையான தலீத் கோகுல்ராஜ் கொலை வழக்கில் கொடுக்கப்பட்ட நெருக்கடியே விஷ்ணு பிரியவின் தற்கொலைக்குக் காரணம் என்று அவரது நெருங்கிய தோழியும், டி.எஸ்.பியுமான மகேஸ்வரி பேட்டியளித்துள்ளார்.

கோமதி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோகுல் ராஜ் கொலை வழக்கு விசாரணை பற்றிய போலீசாரின் வெளியிட முடியாத ஆவணங்களை நாமக்கல் ஏ.டி.எஸ்.பி.யிடம் கேட்டுள்ளார். ஏ.டி.எஸ்.பி யோ, கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை பற்றி கோமதி கேட்கும் தகவல்களை உடனடியாக கொடுக்குமாறு திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணு பிரியாவிற்கு உத்தரவிட்டிருக்கிறார்.
இந்நிலையில் 27 வயதான திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணு பிரியா, தனது அபார்ட்மென்ட்டில் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடலூரை சேர்ந்த இவர் திருமணமாகாத நேர்மையான அதிகாரி.

உயர் அதிகாரிகளின் தொல்லை தாங்க முடியாமல் பெண் டி.எஸ்.பி. விஷ்ணு பிரியா நேற்று தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. விஷ்ணு பிரியாவின் தற்கொலைக்கும் கோகுல்ராஜ் கொலைக்கும் தொடர்பில்லை என்று காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு விஷ்ணு பிரியாவின் தோழியும், கீழக்கரை டி.எஸ்.பி.யுமான மகேஸ்வரி மறுப்பு தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் செய்தியாளர்களிடம் பேசிய மகேஸ்வரி, “விஷ்ணு பிரியா காவல்துறையை மிகவும் நேசித்தார். அவர் பணம் எதுவும் வாங்காமல் செயல்பட்ட நேர்மையான அதிகாரி. மிகவும் திறமையான அதிகாரியும் ஆவார். தனிப்பட்ட முறையில் எனக்கு வரை கடந்த 6 ஆண்டுகளாக தெரியும். நானும் அவரும் மிகவும் நெருங்கிய தோழிகள்.

தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு எல்லாம் விஷ்ணு பிரியா ஒரு கோழை கிடையாது. தற்கொலை செய்துகொள்வதற்கு முன் அவர் என்னிடம் தான் கடைசியாக பேசினார். அவர் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு சென்றுவிட்டு வந்து என்னிடம் சுமார் மதியம் 2.48 மணியளவில் பேசினார். நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது, திடீரென எஸ்.பி. லைனில் வருவதாக கூறிவிட்டு லைனை விஷ்ணு பிரியா துண்டித்துவிட்டார். அதன்பின் அவரது தொலைபேசி சுவிட் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

அவருக்கு வாழ்க்கையில் எந்தவித பிரச்னையும் இல்லை. போலீஸ் சொல்வதெல்லாம் சுத்த பொய். இதை சொல்வதால் என் வேலைகூட போகலாம். அதனால் எனக்கு பிரச்னை ஏதும் இல்லை. கோகுல்ராஜ் கொலை வழக்கில் அவருக்கு எல்லா மட்டத்தில் இருந்தும் நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள். அவருடைய தற்கொலைக்கு எஸ்.பி., டி.ஐ.ஜி. போன்ற உயரதிகாரிகள் தான் முழுக்க முழுக்க காரணம்.

காவல்துறை அதிகாரிகள் மட்டுமல்லாமல், கோகுல்ராஜ் வழக்கில் தேடப்படும் குற்றவாளியான யுவராஜ் தரப்பில் இருந்தும் அவருக்கு அச்சுறுத்தல் இருந்துள்ளது. குறிப்பாக காவல்துறையினர், குற்றவாளிகள் அல்லாத 3 பேர் மீது குண்டாஸ் போட சொல்லி விஷ்ணு பிரியாவை வற்புறுத்தி உள்ளனர். இப்படி செய்ய எனக்கு உடன்பாடு இல்லை என்று அவர் என்னிடமே பலமுறை சொல்லி இருக்கிறார்.

விஷ்ணு பிரியா எழுதியதாக கூறப்படும் கடிதத்தில், “‘போலீஸ் வேலையை நான் உயிராக நினைக்கிறேன். ஆனால் அதற்கு நான் தகுதியானவள் இல்லை” என்று எழுதி இருக்கிறார் என்று சொல்கிறார்கள். ஆனால் அவர் அப்படி ஒருநாளும் நினைத்தவரல்ல. அவரை இந்த நிலைக்கு தள்ளியவர்கள் உயரதிகாரிகள் தான்.

நானும் ஒரு டி.எஸ்.பி. என்கிற முறையில் இதுபோன்ற அச்சுறுத்தல்களை தினமும் சந்தித்து கொண்டு தான் இருக்கிறேன். குறிப்பாக, காவல்துறையில் பெண்களுக்கு இதுமாதிரியான அச்சுறுத்தல்கள் தொடர்ந்து கொண்டு தான் இருகிறது.” என்றார்.

விஷ்ணுபிரியா இறப்பதற்கு முன்பு தனது தாய் தந்தையரிடமும் பேசியுள்ளார். காவல் துறை தனது துறையிலேயே ஒரு அதிகாரி இறப்பிற்குக் காரணமாக இருந்ததோடு அதை மறைக்கவும் முயற்சிக்கிறது. ஜாதி வெறி காவல் துறையினுள் வேறோடி இருப்பதற்கு விஷ்ணுபிரியா ஒரு உதாரணமாவார்.

Related Images: