சில நாட்களுக்கு முன்பு கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா ‘மாட்டுக்கறி சாப்பிடுவது அவரவர் சொந்த விஷயம். அதில் யாரும் வந்து உத்தரவிட முடியாது. நான் மாட்டிறைச்சி சாப்பிடுவதை யாரும் தடுக்கமுடியாது’ என்று தெரிவித்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து ஷிவமோகாவில் பா.ஜ.க. நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது போது ஷிவமோகாவைச் சேர்ந்த பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சன்னபசப்பா இந்த சான்ஸில் பெயர் பெற்றுவிடலாம் என்று நினைத்தாரோ என்னமோ கொஞ்சம் ஓவராகத் தான் சவுண்டு விட்டு விட்டார்.

“தான் மாட்டிறைச்சி சாப்பிடுவதை யாரும் தடுக்க முடியாது என்கிறார் சித்தராமையா… அவருக்கு தைரியம் இருந்தால் ஷிமோகாவின் இந்த கோபி சர்க்கிளில் வந்து மாட்டிறைச்சி சாப்பிடட்டும்… அவரது தலையை வெட்டுவோம்… இதில் வேறு சிந்தனைக்கே இடம் இல்லை.. இப்போது மாட்டிறைச்சி சாப்பிடுவதாக கூறுகிறார் சித்தராமையா… பின்னர் காங்கிரசார் நாய், நரி கறியெல்லாம் சாப்பிட்டு அவரை மகிழ்விப்பார்கள்” என்றார் பசப்பா.

இதற்கு பதிலளித்த சித்தராமையா, “பா.ஜ.கவின் இந்தச் சகிப்புத் தன்மையற்ற வாதத்தை சட்டப்படி எதிர்கொள்வேன்” என்று கூறினார். அதையடுத்து சித்தராமையாவின் தலையை வெட்டுவேன் என்று கூறிய சன்னபசப்பாவை ‘வாப்பா’ என்று போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிச் சென்றுள்ளனர் போலீசார்.

Related Images: