சென்னையில் மழை பாதிப்பு ஏற்பட ஆரம்பித்த நாட்கள் முதலே அதைப் பற்றி அக்கறையாய் பேசிய சித்தார்த், ஆர்.ஜே.பாலாஜி போன்ற நண்பர்களுடன் இணைந்து சென்னை, கடலூரில் நிவாரணப் பணிகளுக்கும் சென்றிருக்கிறார்.

கடலூருக்குச் சென்று நிவாரணப் பொருட்கள் வழங்கி விட்டுத் திரும்பியுள்ள சித்தார்த், கடலூர் பயணத்திலிருந்து நிவாரண உதவி செய்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களாக பத்து விஷயங்களை பட்டியலிட்டுள்ளார்.

“கடலூரிலிருந்து வந்துவிட்டேன்.. கற்றவை

1. பாய், படுக்கை, போர்வை, கொசுவர்த்தி உள்ளிட்டவற்றை அனுப்புங்கள்.

2. குறுகலான சாலைகளில் செல்லக்கூடிய அளவுக்கு சிறிய வண்டிகளில் பொருட்களை அனுப்புங்கள். மிகப் பெரிய வாகனங்கள் வேண்டாம்.

3. எளிதில் செல்ல முடியாத குக்கிராமங்களுக்கு உதவும் குழுக்களை அடையாளம் கண்டுகொள்ளுங்கள்.

4. பிரதான சாலைகளிலிருந்து விலகி இருக்கும் சிறிய கிராமங்களுக்கு முதலில் உதவுங்கள்.

5. நிவாரண பொருட்களை எடுத்துச் செல்லும் வண்டிகளில் பேனர்களை ஒட்டி தெரிவிக்க வேண்டாம். நீங்கள் வழியில் தாக்கப்படலாம்.

6. உள்ளூரில், போலீஸ் துணையோடு இருக்கும் உதவிக் குழுக்களை நாடுங்கள்.

7. சமைத்து சாப்பிட வசதியுள்ளதா என்பது தெரியாமல் அரிசி, பருப்பு உள்ளிட்ட பலசரக்கு / மளிகை பொருட்களை அனுப்பவேண்டாம்.

8. கடலூருக்கு கண்டிப்பாக உதவி தேவை. ஆனால் பீதியோ, அச்சமோ தேவையற்றது. தேவையில்லாத பொருட்களைக் கொண்டு உபரியால் நிரப்ப வேண்டாம்.

9. நாங்கள் 15 கிராமங்களுக்கு சென்றோம். அவை மூழ்கிவிட்டது என்றும், பட்டினியால் வாடுகிறது என்றும், சேவை செய்ய யாரும் செல்லவில்லை என்றும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளன. இது உண்மையல்ல.

10. வெளியிலிருந்து கொண்டே கடலூரைப் பற்றிய கருத்துகள் கூற வேண்டாம். கஷ்டப்படும் பகுதிகள் அங்கே இருக்கின்றனர். அக்கறையோடு இருங்கள். ஆனால் அதை மிகைப்படுத்த வேண்டாம். நிவாரணப் பணிகளில் குழப்பம் வேண்டாம்.

தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு சித்தார்த் தெரிவித்துள்ளார்.

கடலூரில் நிவாரண உதவிக்காக 20 வண்டிகளில் நிவாரணப் பொருட்களைக் கொண்டு சென்று வழங்கியுள்ளார். ஆனால் தனது களப் பணி தொடர்பான எந்த புகைப்படங்களையும் சித்தார்த், பாலாஜி உள்ளிட்டோர் இதுவரை இணையத்தில் கூட பகிரவில்லை.

அமிஞ்சிக்கரையில் ஒரு தன்னார்வலர் நண்பர்களுடன் கூட்டுச் சேர்ந்து ஸ்கைவாக்குக்கு எதிரேயுள்ள பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வீட்டிலேயே உணவு தயாரித்து வழங்கினார். உணவு வழங்கிக் கொண்டிருக்கும்போது வந்த அந்த ஏரியா அரசியல் பிரமுகர் ஒருவர் ஒரு தட்டை எடுத்துக் கொண்டு “கொஞ்சம் சாதம் போடப்பா எப்படி இருக்குன்னு பாப்போம்” என்று தட்டில் சாதம் வாங்கிக் கொண்டார். அதை அவர் சாப்பிட ஆரம்பித்ததும் கூடவே தயாராயிருந்த போட்டோகிராபர் ஒருவர் பையிலிருந்து கேமராவை எடுத்து சுற்றியுள்ள மக்களுடன் பிரமுகர் உணவு சாப்பிடுவதைப் புகைப்படம் எடுத்துக் கொண்டார். “எல்லாருக்கும் குடுங்கப்பா.. குடுங்கப்பா” என்று சொல்லியபடியே எஸ்கேப் ஆனார் பிரமுகர்.

இப்படியும் சில ஆளும் பிரமுகர்கள். அப்படியும் சில சித்தார்த்கள்.

Related Images: