நாய்கள் ஜாக்கிரதை படத்தின் மூலம் கவனம் கவர்ந்த நடிகை அருந்ததி. இவர்  ஆக்க்ஷன் காட்சிகளில் அதிரடியாக அசத்தும்  புதிய  படம்  அர்த்தநாரி .

கிருத்திகா  பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஏ.எஸ்.முத்தமிழ் தயாரிக்கும் இந்த படத்தை இயக்கியுள்ளவர்  சுந்தர இளங்கோவன்.  இயக்குனர் பாலாவிடம் அசோசியேட் இயக்குனராகப் பணியாற்றியவர்  இவர்.

படத்தைப் பற்றி உற்சாகமாகப் பேசும் அருந்ததி, “அர்த்தநாரி படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் அமைந்த ஒரு முழுமையான ஆக்க்ஷன் படம். அந்த உண்மை சம்பவங்கள் எனக்கு பர்சனலாகவே மிகவும் உத்வேகம் அளித்தன.

“இதில் நான் சவால்கள் நிறைந்த ஒரு அண்டர் கவர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இது வழக்கமான  அண்டர் கவர் அதிகாரி கேரக்டர் அல்ல. மிக கஷ்டமான  ஒன்று.. இந்த கேரக்டருக்காக நான் நிறையவே ஹோம் வொர்க் செய்து என்னை முழுமையாகத்  தயார் செய்துகொண்டேன்.

“துப்பாக்கியை எப்படி பிடிப்பது? ட்ரிக்கரை எப்படி அழுத்துவது என்பது வரை எல்லாமும் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு போலீஸ் அதிகாரியிடம் இரண்டு வாரம் பயிற்சி எடுத்துக்கொண்டேன்.

“சண்டைக் காட்சிகளில் ஒரு நிஜ போலீஸ் வீராங்கனை போலவே  குதிப்பது, உதைப்பது எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்பதற்காக, சண்டைப் பயிற்சியும் எடுத்துக் கொண்டேன் . அவை எல்லாம் மிக சிரமமாக இருந்தாலும் இன்ட்ரஸ்டிங்காகவும் இருந்தன.

“இப்படி இந்த படத்துக்குத் தேவையான சண்டைக் காட்சிகள் மட்டுமின்றி,  டான்ஸ் காட்சிகளிலும் நான் பொருத்தமான முறையில் கற்றுக்கொண்டு நடிக்க வேண்டும்’ என்பதில் இயக்குனர் ரொம்பவும் உறுதியாக இருந்தார். காரணம் படத்தின் ஸ்கிரிப்ட் அப்படி.

“அது மட்டுமா? இந்த கேரக்டரை நான் மிக சிறப்பாக செய்ய வேண்டும் என்பதற்காக The Blue Steel, The Bone Collector, Mardhani ஆகிய படங்களையும் பார்க்க வைத்தார்.  அந்த படங்களை பார்த்தபிறகு எனக்குள் ஒரு சக்தியே வந்தது என்ற உண்மையை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

“இப்போது அர்த்தநாரி படத்தை முழுமையாகப் பார்த்தபோது எனக்குள் வந்த அந்த சக்தி அப்படியே நிலைத்து விட்டது போலவே  உணர்கிறேன்.

“படத்தில் நடிக்கும்போது எனது கணுக்கால் முட்டியில் அடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டது. ஆனால் அப்போது பட யூனிட் என் மீது காட்டிய அக்கறையையும், துணிச்சலான நடிப்புகாக கொடுத்த பாராட்டையும் பார்த்தபோது அந்த வலி பறந்தேபோனது .

“இப்படி கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படம் கிடைத்ததற்காக கடவுளுக்கும் இயக்குனருக்கும் என்றென்றும் நான் நன்றி சொல்ல வேண்டும்.

“சின்ன வயசிலிருந்தே நான் விஜயசாந்தியின் தீவிர ரசிகை . இந்தப் படத்தில் நான் ஏற்று நடித்திருக்கும் கேரக்டரும், நடித்திருக்கும் ஆக்க்ஷன் காட்சிகளும், விஜயசாந்தி மேடத்துக்கு அவரது ரசிகையான நான் சேர்க்கும் பெருமையாகவே இருக்கும் என்று மனப்பூர்வமாக நம்புகிறேன்” என்கிறார் அருந்ததி .

Related Images: