– மு. திருநாவுக்கரசு

ஐநா மனிதஉரிமைகள் பேரவை அறிக்கை : அமெரிக்காவிற்கு வெற்றி… ரணில் – சிறிசேனவிற்கு நற்செய்தி… மகிந்தவிற்கு அபாய அறிவிப்பு… தமிழருக்கு கவுன்சிலிங்…

இலங்கைக்கும் இலங்கை அரசுக்கும் எதிரான காட்டமான அறிக்கையை ஐநா மனிதஉரிமைகள் ஆணையர் இவ்வாரம் வெளியிட்டுள்ளார். இன-மத வன்முறைகள் நிறைந்த நாடு!! சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து நிகழும் நாடு !! மனிதஉரிமைகள் பெரிதும் மீறப்படும் ஒரு நாடு எனப் பலவாறாக இவ்வறிக்கை குற்றஞ்சாட்டுகிறது.

இறுதிகட்ட யுத்தத்தின் போது இலங்கை அரசு மேற்கொண்ட யுத்தக் குற்ற நடவடிக்கைகள் தொடர்பாக அதிகம் பேசப்பட்டுள்ள இந்த அறிக்கையில் இலங்கை அரசுக்கு எதிரான கடும் வார்த்தைகள்  பிரயோகிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பாதிக்கப்பட்ட ஈழத் தமிழருக்கான நீதி தேடும் பாதையில் இவ்வறிக்கை முன்னேற்றகரமானது என பொதுவாக கூறப்படுகிறது. இதுவரை  வெளிவந்த ஐநாவின் அறிக்கைகளுள் இது மிகவும் காட்டமானது என்பது உண்மை.

ஐநா மனிதஉரிமைகள் ஆணையர் சையது அல்-ஹூசைன் அவர்களினது எழுத்துபூர்வமான இந்த அறிக்கை இவ்வாணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டதும் தமிழ் மக்கள் தரப்பில் ஆறுதலும், திருப்தியும் ஏற்பட்டுள்ளது. உண்மையில் இப்படியொரு காட்டமான அறிக்கை வெளிவரும் என்று பொதுவாக விபரம் அறிந்தோர் மத்தியில் ஏற்கனவே கணிக்கப்பட்டிருந்தது.

இவ்வறிக்கைக்குப் பின்னால் தெளிவான இராஜதந்திர இலக்குகள் உண்டு. இவ்வறிக்கை ஒருபுறம் தமிழ் மக்களுக்கு உளவியல் ரீதியான ஆற்றுப்படுத்தலை வழங்கவல்லதாக அமைந்துள்ளது.  அத்துடன் இந்த அறிக்கை ராஜபக்ஸேக்களுக்கு ஓர் இறுக்கமான செய்தியை சொல்வதில் கவனம் செலுத்தியுள்ளது. தற்போது இலங்கையில் நடந்துவரும் அமெரிக்க சார்புள்ள சிறிசேனா அரசாங்கத்தை கவிழவிடாது பாதுகாக்க வேண்டுமென்ற நோக்கம் இவ்வறிக்கைக்குப் பின்னால் உள்ள மேற்குல அரசுகளிடமுண்டு.

சமீபத்தில் இலங்கையில் நடந்து முடிந்த உள்ளாட்சிச் சபைகளுக்கான தேர்தல்களில் ராஜபக்ஷே அணி பெருவெற்றியீட்டியதைத் தொடர்ந்து , பதவியில் இருக்கின்ற இன்றைய அரசாங்கம் கவிழ்ந்துவிடுமோ என்ற அச்சம் பெரிதும் ஏற்பட்டது. இந்த அரசாங்கத்தை கவிழ்த்தால் போர்க்குற்ற விசாரணை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் என்பனவற்றின் பேரால் தமக்கு ஏற்படக்கூடிய ஆபத்தை ராஜபக்சேக்கள் சரிவர உணர்ந்திருக்கிறார்கள். ஆதலால் உடனடியாக அரசாங்கத்தை கவிழ்கும் நோக்கம் அவர்களிடம் இல்லை. ஆனாலும் இந்த அரசாங்கத்திற்கு பெரும் சவால் இந்த வெற்றியால் ஏற்பட்டுள்ளது என்பதும் இதன் பின்னணியில் அரசாங்கம் கவிழ்க்கப்படுவதற்கான எத்தனங்கள் எழுந்திடக்கூடும் என்ற அச்சமும் மேற்குலகிடம் எழுந்துள்ளது.

ராஜபக்சே அரசாங்கத்தின் சீனசார்பு நிலைப்பாட்டால் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகமும், அண்டை நாடான இந்தியாவும் ராஜபக்சேவை பதவியில் இருந்து அகற்ற , 2009 போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்த யுத்தக் குற்றச்சாட்டுக்களை முக்கிய ஏதுவாக பயன்படுத்தி  வெற்றிபெற்றன. ஆனாலும் அவர் மக்கள் ஆதரவுடன் எழுச்சிபெறும் நிலை பெரிதும் உள்ளதை உள்ளாட்சிச் சபைகளுக்கான தேர்தல்களில் அவர்கள் பெற்றுள்ள வெற்றிகள் நிரூபித்துள்ளன.

இரண்டு ஆண்டுகளின் பின்பு வரவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்சே நிறுத்தப்பட்டு வெற்றியீட்டுவார் என்ற அச்சமும் பெரிதாகிவிட்டது. எப்படியோ உடனடியாக ராஜபக்சேக்களுக்கு அச்சம் தரும் நகர்வை மேற்கொள்ள வேண்டியது அவசியமென ராஜபக்சே எதிர்ப்பு நாடுகள் கருதுகின்றன. ஐநா சபையானது பெரிதும் அமெரிக்காவின் செல்வாக்கிற்கு உட்பட்ட சபையாகும். சர்வதேச ரீதியில் தனக்குச் சாதகமான விடயங்களை மேற்கொள்வதற்கு ஐநா சபையை பயன்படுத்துவதில் அமெரிக்கா பெரிதும் முனைப்பு கொண்டுள்ளது. ஐ,நாவில் அமெரிக்காவின் பலம் மிகப்பெரியது.

போர்க்குற்ற விசாரணை தொடர்பான பிரேரணையை ஐநா மனிதஉரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா முன்வைத்தது. அப்போது பதவியில் இருந்த ராஜபக்சே அரசாங்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்குவதில் இப்பிரேரணை மிகப்பெரும் வெற்றியை ஈட்டியது. இதனால் தமிழ் மக்கள் அடைந்த பலனைவிடவும் இப்பிரேரணையை முன்வைத்த மேற்படி அரசுகளின் இராஜதந்திர நோக்கம் பெரிதும் நிறைவேறியது.

தற்போது ஐநா ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கைக்குப் பின்னால் முக்கிய மூன்று இராஜதந்திர இலக்குகள் உண்டு. இதில் முதன்மையானது தற்போது பதவியில் இருக்கும் சிறிசேனா அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டும் என்பதுடன் அது நெருக்கடிக்கு உள்ளாகமல் தொடர்ந்து செயற்படக்கூடிய வகையில் நிலைமைகள் அமையவேண்டும் என்பது. இந்த வகையில் ராஜபக்சேக்களுக்கு இராஜதந்திர பரிபாஷையில் ஓர் எச்சரிக்கையை இந்த அறிக்கை வெளியிட்டுள்ளது என்றே கூறவேண்டும்.

இரண்டாவது தமிழ் மக்கள் மத்தியில் போர்க்குற்றம், காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமான அதிருப்திகள் மேலோங்கி ஐநா சபை மீதான நம்பிக்கை சரிந்துள்ளது. இந்நிலையில் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சியை தணிக்கவும், தமிழ் மக்களை உளவியல் ரீதியாக சாந்தப்படுத்தவும் வேண்டிய வகையில் இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழ் மக்களுக்கான ஒரு கவுன்சிலிங் உண்டு என்பதில் சந்தேகமில்லை.

இவ்வறிக்கையில் 40வது உறுப்பு காட்டமான செய்திகளை கூறுகிறது. இலங்கை அரசின் நீதித்துறை மீது பெரிதும் அவநம்பிக்கையை வெளியிட்டுள்ளதுடன் போர்க்குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசு நீதி தேடும் பாதையில் முன்னெறவில்லையென்றும் அதற்கான மனவிருப்பத்தையோ, செயல் ஊக்கத்தையோ இலங்கை அரசு காட்டவில்லையென்றும் இலங்கை கோரியுள்ள இரண்டு வருட கால காலநீட்டிப்பிற்குள் அது நீதிகாணும் நடவடிக்கையில் வெற்றிபெறுவது சந்தேகத்திற்குரியது என்றும் அதற்கான முன் முயற்சிகள் எதுவும் இதுவரை தோன்றவில்லையென்றும் அது கூறுகிறது.

இந்நிலையில் சர்வதேச நீதிகாணும் பொறிமுறை மூலம் நீதிகாண வேண்டுமென்கின்ற வாதத்தை முன்வைப்போரின் கருத்து இதன் மூலம் மேலோங்கியுள்ளது என்றும் எனவே அத்தகைய விசேட சர்வதேச நீதிமன்ற விசாரணை முறை வேண்டுமென்ற கோரிக்கையோடு ஐநா மனிதஉரிமைகள்ஆணையர் உடன்படுவதாகவும் அது கூறுகிறது. இந்நிலையில் சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடன் கூடிய நீதி விசாரணையை இலங்கை அரசு மேற்கொள்ளாதவிடத்து நீதிகாண்பதற்கான உலகளாவிய வகையிலான ஓர் அதிகாரம் உள்ள ஏற்பாட்டை மேற்கொள்ள வேண்டுமென்று ஐநா உறுப்புநாடுகளிடம் ஆணையாளர் கோருவார் என்ற விடயமே இலங்கைக்கு  அச்சமூட்டும் விடயமாகும்.

இச்செய்தி முக்கியமாக இராஜதந்திர பரிபாஷையில் ராஜபக்சேக்களுக்கான பெரும் எச்சரிக்கையாகும். குறிப்பாக நடப்பில் உள்ள அரசாங்கத்தை கவிழ்க்கக்கூடாது அவ்வாறு கவிழ்த்தால் இலங்கை அரசு சர்வதேச ரீதியான போர்க்குற்ற விசாரணைக்கு உள்ளாகும் என்பதுடன் , முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்ந்த வன்முறைகளானது அரசாங்கத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்திய நிலையில் இனிவரும் காலத்தில் அத்தகைய நடவடிக்கையில் பௌத்த நிறுவனங்களோ ராஜபக்சேக்களோ ஈடுபடக்கூடாது என்ற செய்தியையும் இது கூடவே அறிவிக்கிறது.

இறுதியாக ஐநா சபை மீது ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தியை சரிசெய்யவும் , போர்க்குற்றவிசாரணை,  காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் ஏற்பட்டிருக்கும் கொந்தளிப்புக்களை தணிக்கவும் வல்ல ஒரு கவுன்சிலிங்காக இந்த அறிக்கை அமைந்திருக்கிறது.

சிறிசேனா அரசாங்கத்தை பாதுகாப்பதில் இவ்வறிக்கை 100 வீதம் வெற்றிபெற்றுள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஈழத் தமிழ் மக்களுக்கான நீதிகாணும் விடயத்தில் இது ஒரு கவுன்சிலிங்காக மட்டும் அமைவதுடன் தன் பணியை முடித்துவிடும் என்ற அச்சம் எழ இடமுண்டு.

எப்படியோ இந்த அரசாங்கத்தை பாதுகாப்பதற்கான முயற்சியிலும், இந்த அரசாங்கத்திற்கு ராஜபக்சேக்கள் கொடுக்கக்கூடிய நெருக்கடியை தணிப்பதிலும் ஈழத் தமிழர்களுக்கான நீதிகாணும் விவகாரம் ஒரு துருப்புச்சீட்டாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை. இதுவெறும் துருப்புச் சீட்டாக மட்டும் போகாமல் தமிழ் மக்களுக்கான நீதிகாணும் படலத்தில் அர்த்தபுஷ்டியான செயற்பாட்டிற்கு போவதற்கு தமிழ்த் தரப்பில் உள்ள அரசியல் சக்திகள் எடுக்கவல்ல நிலைப்பாடுகளே வழிவகுக்க வேண்டும்.

எப்படியோ மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த அரசாங்கம் தலையிடியின்றி தொடர்ந்து பதவியில் இருப்பதை இவ்வறிக்கை உறுதிபடுத்திவிட்டது என்பது மட்டும் உண்மை.

Related Images: