மறைந்த எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது ஒருமுறை பாரதிராஜாவைக் கூப்பிட்டனுப்பினாராம். பாரதிராஜா இயக்குனர் இமயமாக மிளிர்ந்துகொண்டிருந்த காலம் அது. அவரைச் சந்தித்த பாரதிராஜாவிடம் “கல்கியின் பொன்னியின் செல்வனைப் படமாக எடுக்கவேண்டும் என்றும் அதில்
நான் பொன்னியின் செல்வனாக நடிக்கவேண்டுமென்றும் எனக்கு ஆசை. ஆனால் எனக்கு வந்த பொறுப்பகக்ளில் ஓய்வே இல்லாமல் போய்விட்டதால் என்னால் மீண்டும் நடிக்கவே முடியவில்லை.
எனவே இப்போது கமல்ஹாசனை பொன்னியின் செல்வனாகவும், ஸ்ரீதேவியை குந்தவையாகவும் நடிக்கவைத்து அந்தப் படத்தை எடுக்கலாமென்று நினைக்கிறேன். நீங்கள் இயக்குங்கள். எனது எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் மூலம் படத்தை தயாரிக்கலாமா?” என்று கேட்க பாரதிராஜாவும் மிகுந்த சந்தோஷமாகச் சரியென்று சொல்லிவிட்டு வந்தாராம்.
அதன்பின்பு என்ன காரணமோ தெரியவில்லை. அதுசம்பந்தமாக மீண்டும் எம்.ஜி.ஆர் அழைக்கவேயில்லையாம். அப்படியே அந்தப் பேச்சு நின்றுவிட்டதாம். இப்படிச் சமீபத்தில் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் பாரதிராஜா. கமல்ஹாசனே கூட பொன்னியின் செல்வனை எடுக்க எவ்வளவோ முயன்றார் என்று சொல்வார்கள்.
ஒருவேளை அதை நாவல் போலவே நேர்த்தியாக எடுக்கும் அளவு சிறந்த ஆட்கள் இன்னும் தமிழில் வரவில்லையோ என்னவோ!