இன்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் அவசர அவசரமாக சூர்யாவின் ‘மாற்றான்’ பட பிரஸ்மீட் நடந்தது. படத்தில் சூர்யா ஒட்டிப்பிறந்த இரட்டையராக நடிக்கும் ரகஸியத்தை இனியும் மறைக்க முடியாது என்பது ஒருபுறமிருக்க, இணையதளங்களில் தொடர்ந்து ப்ரியாமணி இரட்டையராக நடித்துவரும் ‘சாருலதா’ படமும் ‘மாற்றானும்’ ஒரே டி.விடி.யிலிருந்து சுடப்பட்ட இரட்டைக்குழந்தைகளே என்ற தகவல்கள் வெளியாக ஆரம்பித்த்தும் ஒரு முக்கிய காரணம். [அட்டா என்ன ஒரு ஆச்சரியம் ட்வின்ஸ் கதையையும் ட்வின்ஸாத்தான் திருடுறாய்ங்க]
தியேட்டரில் பத்திரிகையாளர்களுக்கு போட்டுக்காட்டப்பட்ட ஒரு நிமிட ட்ரெயிலரும் இது தாய்லாந்தில் 2007-ல் ரிலீஸான ‘அலோன்’ படத்தின் அப்பட்டமான காப்பிதான் என்பதை ஒரே நிமிடத்தில் பறைசாற்றியது.
‘’ஆமாங்க. அந்தப்படத்தோட தழுவல்தான்’ என்று மழுப்பலான பதில் சொல்வதைக்கூட கவுரவக்குறைச்சலாக கொள்ளும் கோடம்பாக்க கொம்பர்கள் மத்தியில் கே.வி. ஆனந்த் மட்டும் விதிவிலக்கா என்ன?
இதுகுறித்து ஒரு நிருபர் கேள்விகேட்டபோது, ‘’இப்பிடி ஒரு தகவல் கேள்விப்பட்ட பிறகுதாங்க நான் அந்தப் படத்தையே பார்த்தேன். எங்க படத்துக்கும் அந்த தாய்லாந்து படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று முழு டி.வி.டி.யை சோற்றில் மறைத்தார். விடாமல் இந்தக்கதையை எப்படிப்பிரசவித்தார் என்று அதே தாய்லாந்து விமானத்தில் ஒரு ’கதை’யும் கட்டினார்.
கே.வி.ஆனந்தின் மேற்படி அண்டப்புளுகு அறியாமல், விழாவுக்கு தாமதமாக வந்த கதாசிரியர்கள் சுபா மைக்கைப்பிடித்தபோது,’’ எங்களுக்கு ’மாற்றான்’எப்படி ஒரு கதையா உருவாச்சின்னா’ என்று பேச ஆரம்பித்தபோது முகம் வெளுத்துப்போன கே.வி.ஆனந்த் ‘யோவ் அமுக்கி வாசிய்யா’ என்று சைகைகாட்ட ‘நன்றி’ சொல்லி அவசரமாக மேடையிறங்கினர்.
இந்தக்களவாணிகளை நினைத்தபோது ‘ஒரு தாய்க்கு இரு பிள்ளை வருவதுண்டு. இரு தாய்கள் ஒரு பிள்ளை பெறுவதுண்டோ? அசல் யாரோ? நகல் யாரோ?’ என்ற பாட்டுதான் ஞாபகம் வருதே,.. ஞாபகம் வருதே,..