’கண்டுபுடி கண்டுபுடிடா’ படத்தில் முழுக்க முழுக்க கல்யாண மண்டபத்தில் நடக்கும் ஒரு கதையில், துப்பறியும் காவல் அதிகாரியாக நடித்த சீமான், இன்னும் இரண்டே மாதங்களில் கல்யாண மாப்பிள்ளையாகப்போகிறார்.

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் திருமண நாள் அக்டோபர் ஒன்று. அதனால், அன்றைய தினத்தையே தனது திருமண நாளாக திட்டமிட்டிருக்கும் சீமானுக்கு வைகோ தலைமையில் கல்யாணம்.

அம்மாவுக்கும் கல்யாணப்பத்திரிகை நேரில் சென்று தரப்படும். வந்தால் சந்தோஷம்.வராவிட்டால் ரொம்ப சந்தோஷம் . இதுதான் சீமானின் மனநிலை.

இப்படி ஒரு செய்தி கடந்த ஓரிரு தினங்களாகவே முகநூல் வட்டாரங்களில் மெல்ல நடமாட ஆரம்பித்திருந்ததைத்தொடர்ந்து, சீமானுக்கு நெருக்கமானவரான அவரது தம்பி ஒருவரை அணுகியபோது செய்தி முற்றிலும் உண்மை என்பதை ஊர்ஜிதம் செய்தார்.

தமிழகத்தை சேர்ந்த பிரபலமான பெண்மணி ஒருவர்தான் சீமானை மணக்க இருக்கும் அதிர்ஷ்ட சாலி என்று தெரிவித்த தம்பி,மணப்பெண் பற்றிய மற்ற தகவல்களை சட்டென மறைத்தார்.

‘’ மணப்பெண் யார் என்பதையும், திருமணம் தொடர்பான மற்ற செய்திகளையும் அண்ணனே மிக விரைவில் அறிவிப்பார். வெகு விமரிசையாக நடைபெறவிருக்கும் திருமணத்திற்கு தமிழகம் முழுக்கவிருந்து சுமார் 50,ஆயிரம் பேர்களாவது கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

சீமான் திருமணம் என்றால் சும்மாவா?. அவ்வளவு பேருக்கும் கண்டிப்பாக ஆட்டுக்கறி மற்றும் கோழிக்கறி விருந்து உண்டு, சைவச்சாப்பாடு தனியாக தயாரிக்கப்படும்.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி மான் தலைமையில் நடக்க இருக்கும் திருமணத்தில் வைகோ, திருமாவளவன், கிருஷ்ணசாமி, கொளத்தூர் மணி, வேல்முருகன்,தமிழருவி மணியன் உள்ளிட்டோரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். சிறப்பு விருந்தினராக ஜெகன் மோகன் ரெட்டி கலந்து கொள்ள இருக்கிறார்.

சீமான் மீது செக்ஸ் டார்ச்சர் புகார் கொடுத்து பரபரப்பு கிளப்பிய சினிமா நடிகை விஜயலட்சுமி தான் கொடுத்த புகாரை விரைவில் வாபஸ் வாங்க இருக்கிறார். இதற்கான பேச்சு வார்த்தையில் வழக்கறிஞர் தடா சந்திரசேகரன், மூத்த பத்திரிக்கையாளர் அய்யநாதன் உள்ளிடோர் தீவிரமாக இயங்கி வருகிறார்கள்.

திருமணம் செய்து கொள்ளும் எண்ணமே சீமானுக்கு இல்லாமலே போயிருந்தது. ஆனாலும், சீமானின் அதீத வளர்ச்சியை முடக்கும் வகையில் பெண்கள் சம்மந்தபட்ட சர்ச்சைகளை போலிஸ் தரப்பும் பொறமை கொண்ட அரசியல் தரப்பும் தொடர்ந்து கிளப்பி வந்தது.

விஜயலக்ஷ்மியின் விவகாரமும் அப்படிபட்ட ஒன்றுதான். விஜயலக்ஷ்மி பரபரப்பு கிளப்பிய பின்னணியில் சீமானுக்கு மிக நெருக்கமான இயக்குனர்கள் சேரன், தங்கர் பச்சான் இருவரும் தீவிரமாக செயல்பட்டது சீமானை மனரீதியாக மிகவும் நொறுங்க வைத்துவிட்டது. அதிலும் தங்கர் பச்சான் பல சந்தர்ப்பங்களிலும் அண்ணன் விவகாரங்களில் இழிபிறவியாகவே நடந்துகொண்டார்.

தங்கர் போன்ற உறவாடிக்கெடுத்த சகுனிகளுக்கு பதிலடி கொடுக்கவும், பெண்கள் சம்மந்தமான பிரச்சனைகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாகவும், மன நிம்மதிக்கான வழியாகவும் திருமண முடிவை எடுத்திருக்கிறார் சீமான்’’.

இவ்வளவு தகவல்களையும் தெரிவித்த சீமானின் அன்புத்தம்பி, உச்சக்கட்டமாக சொன்ன தகவல்:

‘தலைவர் பிரபாகரன் திருமணம் செய்துகொண்ட அதே திருப்போரூர் முருகன் கோவிலில்தான் சீமானின் திருமணமும் நடக்கவிருக்கிறது’.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.