பெரும் சர்ச்சைகளில் சிக்கி சற்றே ஓய்வெடுத்துக்கொண்டிருந்த ‘மாற்றான்’ சூரியா மீண்டும் மூட்-அவுட் ஆகும் வகையில், அவரது இணையதள ‘மாற்றான்கள்’ அவரைக் கதற அடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

மற்ற நடிகர் நடிகைகளுக்கு இருப்பது போலவே, சூரியா பெயரிலும் ஏகப்பட்ட ஃபேஸ்புக் அக்கவுண்டுகள் புழக்கத்தில் உள்ளன.இந்த அக்கவுண்டுகளுக்கு லட்சக்கணக்கில் பிந்தொடர்பவர்கள் இருக்கிறார்கள். இதில் ஒரு சில சாமர்த்தியசாலிகள் ஒரிஜினல் சூரியாவை மிஞ்சும் வகையில்,’ நானும் ஜோவும் நேற்று சிக்கன் குழம்பு வைத்தபோது நடந்தது என்னவென்றால்..’ என்கிற ரீதியில் அவரது அன்றாட நிகழ்வுகளை பதிவிடுவது தொடர்ந்ததால், பெரும் கவலையடைந்திருந்த சூர்யாவை நேற்று வெறுப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றார் இன்னொரு சூர்யா.

‘மாற்றான்’ படத்தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் படத்தின் ரிலீஸ் தேதி அக்டோபர் 12 என்று அறிவித்திருந்தவேளையில், சூர்யாவின் ஃபேஸ்புக்கில் செப்டம்பர் 15 என்று அறிவிப்பு வரவே, திரையுலகினரும், சில விநியோகஸ்தர்களும் ஏகத்துக்கு குழம்பிவிட்டனர்.

இந்த தேதி குழப்படி தொடர்பாக தொடர்ந்து போன்கால்கள் வரவே, நொந்துபோன சூர்யா, ’’இதுவரை என் பெயரில் இயங்கிவரும் எதுவுமே என்னுடையது இல்லை. எல்லாருமே போலியான மாற்றான்கள். இதை இத்தோடு நிறுத்திக்கொள்ளாவிட்டால் விரைவில் அவன்கள் மாட்டுவான்கள்.

ஃபேஸ்புக் செயல்பாடுகளில் எனக்கு ஆர்வம் இருந்தாலும், அதில் முழு நேரமும் இயங்க முடியாது என்பதால், வேறொரு பெயரில் அக்கவுண்ட் ஆரம்பித்து வெறுமனே ஒரு பார்வையாளராக மட்டுமே இயங்கிவருகிறேன். தயவு செய்து என் பெயரில் உள்ள கணக்கு வழக்குகளை இத்தோடு முடித்துக்கொண்டு என்னை ஆளை விடுங்கள்’’ என்கிறார்.

ஆனா நீங்களே வேறொருத்தர் பேருல அக்கவுண்ட் வச்சிருக்கேன்னு இவ்வளவு ஓபனா சொல்றப்ப, அவனுக உங்க பேருல அக்கவுண்ட் வச்சிருக்கது மட்டும் எப்பிடி தப்பாகும் பாஸ்?

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.