அல்டிமேட் அஜித் அலட்டிக்கொள்ளாமல் மனதில் படும் நல்ல விஷயங்களைச் செய்துவிடுவார் என்பது தெரிந்ததே. பிடித்த ரேஸ் பைக்கை வெளிநாட்டிலிருந்து வாங்கி வந்து சென்னை தெருக்களில் ஓட்டி டீக்கடையில் டீக்குடித்துப் போவதிலிருந்து, ‘சும்மா என்னையே சுற்றி வந்து ரசிகர்
மனறங்கள் வைத்து உங்கள் வாழ்க்கையை வீணடிக்காதீர்கள்’ என்று ரசிகர் மன்றங்களை வேண்டாம் என்று சொல்வது வரை நிறைய விஷயங்கள் இப்படி உண்டு.
போன வருடம் செப்டம்பர் மாதம் தன் வீட்டில் வேலை செய்யும் சமையல்காரர், தோட்டக்காரர் போன்ற 12 ஊழியர்களுக்கு, தனது வீடு இருக்கும் ஈ.ஸி.ஆர் ரோட்டிலேயே அரை ஏக்கர் இடம் வாங்கினார் என்று செய்தி வந்தது. அதை ஊழியர்களின் பெயரிலேயே பதிவுசெய்து கொடுத்து செய்து விட்டார்.
இந்த ஜூன் மாத ஆரம்பத்தில் அந்த இடத்தில் அவர்கள் அனைவருக்கும் தனது செலவிலேயே வீடு கட்டிமுடித்து ரெடி செய்து மனைவி ஷாலினி கையால் அவர்களுககு வீட்டுச் சாவிகளை கொடுத்து அசத்தியிருக்கிறார் மனிதர். தன்னுடைய அன்றாட வாழ்வில் அங்கமாக பல வருடங்களாக ஒன்றிவிட்ட ஊழியர்களை வெறும் வேலைக்காரர்களாக மட்டும் பார்க்காமல் (அதான் மாசா மாசம் சம்பளம்தான் குடுக்குறோம்ல..) தன் வாழ்க்கையின் உயரங்களுக்கு உதவிய அவர்களின் வாழ்க்கை நிலையையும் உயர்த்த நினைக்கும் மனம் எத்தனை பேருக்கு இருக்கிறது?
உதாரணத்திற்கு, கோச்சடையானில் பணிபுரிந்த கிராபிக்ஸ் ஊழியர்களுக்கு சௌந்தர்யா மாதக் கணக்கில் சம்பள பாக்கி வைக்க, ஒரு முறை ரஜினியை நேராகச் சென்று அவர்கள் பார்த்து, அவர் தலையீட்டின் பேரில் சில மாதங்கள் சம்பளம் வந்தது. பின் மீண்டும் அதே நிலை தொடர்ந்தது. படம் முடிந்து சுமார் நூறு கோடிக்கும் மேல் லாபம் பார்த்தபின்பாவது ஊழியர்களுக்கு பாக்கி சம்பளம் வழங்கப்பட்டதா? தெரியவில்லை.