வெள்ளியன்று காலை பரபரப்பாக சென்னை வந்திறங்கிய பிரதமர் மோடியை முதல்வர் ஜெயலலிதா விமான நிலையம் சென்று வரவேற்றார். விமான நிலையத்திலிருந்து கிளம்பிய மோடி தமிழ்நாட்டில் பி.ஜே.பியின் வளர்ச்சிக்கு பல காலமாகவே பாடுபட்டு வரும் பத்திரிக்கையாளர் ‘சோ’வை சென்று சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.

அங்கிருந்து மோடி சென்னை பல்கலைக் கழகத்தில் நடந்த தேசிய கைத்தறி விழாவில் கலந்துகொண்டு துவக்கி வைத்தார். பின்னர் நேரே போயஸ் கார்டன் சென்ற மோடி அங்கே முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தார். ஜெயலலிதா தந்த விருந்தின் போது தமிழ்நாட்டுக்கும், கர்நாடகம் மற்றும் கேரளாவிற்குமிடையான நீர்ப் பங்கீட்டுப் பிரச்சனைகள் பற்றி இருவரும் விவாதித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 1 மணி நேரம் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.

பி.ஜே.பி. அரசின் நில அபகரிப்புச் சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் அ.தி.மு.கவின் ஆதரவையொட்டி பி.ஜே.பி. மற்றும் அ.தி.மு.க இடையே புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. முன்னதாக கைத்தறி விழாவில் பேசிய பிரதமர் ஜெயலலிதா பங்கேற்காவிட்டாலும் “நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்காக ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்தார்’. பி.ஜே.பியும் அ.தி.மு.கவும் தமிழ்நாட்டில் மோதிக்கொண்டாலும் தலைகள் சுமுகமாக இருப்பது பி.ஜே.பி. அ.தி.மு.கவை வைத்து தமிழ்நாட்டில் சில சீட்டுகளை பிடிக்க இருக்கும் கணக்கு போலத் தெரிகிறது.

மதியம் 3 மணியளவில் கவர்னர் வந்து வழியனுப்ப ஐந்தடுக்கு பாதுகாப்பு சூழ டெல்லி கிளம்பிச் சென்றார் பிரதமர் மோடி. மோடி கைத்தறி கண்காட்சியைத் தான் திறக்க டெல்லியிலிருந்து இவ்வளவு தூரம் வந்தார் என்பதை நம்புவதற்கு சிரமமாகத்தானிருக்கிறது. மோடியின் முதல் சென்னை வருகை இது. முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் பி.ஜே.பி ஆளும் கர்நாடக நீதிமன்ற ஜட்ஜ் மிகச் சொதப்பலாக ஒரு தீர்ப்பை சொன்னதற்கும், மோடியின் நண்பர் அதானியிடம் தமிழ்நாடு அரசு மின்சாரம் யூனிட்டுக்கு 8 ரூபாய் கொடுத்து வாங்க ஒப்புக் கொண்டதற்கும் எந்த வித சம்பந்தங்களும் இல்லை தான். இல்லையா ?

Related Images: