ஆம் சிவா அய்யாதுரை என்னும் ஒரு தமிழர் தான். அமெரிக்காவில் வசித்து வரும் இவர் சமீபத்தில் சென்னை வந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். செய்தியாளர்களுடன் சிவா அய்யாதுரை பேசும் போது பலவற்றைப் பகிர்ந்து கொண்டார்

அவர் பேசும் போது “நான் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. நம் மீது சில கற்பிதங்களையும் நம்பிக்கைகளையும் மேலை நாட்டினர் குறிப்பாக ஆங்கிலேயர் வேண்டுமென்றே உருவாக்கி வைத்துள்ளார்கள். அதை நாம் உடைக்க வேண்டும்.

நான் 1978ல் ​​ஈமெயிலைக் கண்டு பிடித்தது ஒரு இந்தியனாக, தமிழனாகக் ​​கண்டு பிடித்தேன். ​ ஒரு தமிழனாக ஈமெயிலைக் கண்டுபிடித்ததில் பெருமையடைகிறேன். ​ இதை இவ்வளவு காலம் கழித்து சொல்ல வேண்டியிருக்கிறது. காரணம் ​அப்போது இதை பிரபகண்டா ​பண்ணும் அளவிற்கு என்னிடம் வக்கீலோ அல்லது உடனிருந்து வழி நடத்த யாரும் இல்லை. பதினான்கு வயது சிறுவன் என்ன செய்வான். காப்பி ரைட் பற்றி அவனுக்கு என்ன தெரியும்? ஆனால் இப்போது உரக்கச் சொல்லவேண்டிய நேரம் இது. நம்மிடம் உள்ள ஒவ்வொரு இந்தியக் குழந்தையும் ஒவ்வொரு தமிழ்க் குழந்தையும் இதைக் கண்டு பிடித்தது ஒரு 14 வயது இந்தியப் பையன் ,தமிழ்ப் பையன் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.14வயது இந்திய பையனால் முடியும் என்றால் எல்லா இந்தியராலும் முடியும்.

வெள்ளைக்காரர்கள் நம் நாட்டுக்கு வந்த போது முதலில் நம்மைச் சுரண்டி பொருள்களைக் கொண்டு சென்றார்கள் அடுத்து நம்மை மூளைச் சலவை செய்தார்கள். இந்தியர்கள் எல்லாம் பணியாளர்கள், எழுத்தர்கள் அதிகமாகப் போனால் சி.இ.ஓ.க்கள் வரை ஆகலாம்.​ ​அவ்வளவுதான். ஆனால் வெள்ளைக்காரர்கள்தான் படைப்பாளிகள்,​​ வெள்ளைக்காரர்கள்தான் கண்டு பிடிப்பாளர்கள். நம்மை அந்தப் பட்டியலில் ​​சேர்க்கவே மாட்டார்கள்​.​சேர்க்க​விட​வே மாட்டார்கள்​. ​ எனக்கும் அது நடந்தது. அவர்களில் ஒருவன்தான் இமெயிலைக் கண்டுபிடித்தான் என்று இருப்பதையே அவர்கள் விரும்பினார்கள். அதற்கான விளையாட்டுகளைச் செய்தார்கள். ​​ எனக்கான ஆதாரங்கள் என் அம்மாவிடமிருந்து கிடைத்தபோது நான் கண்டுபிடித்ததை நிரூபித்தேன். நான் வெள்ளைக்காரனுக்கு நிரூபிக்கவில்லை. இந்தியனுக்கான அடையாளத்தை நிரூபித்துள்ளேன். இப்போது நாம் சொல்லலாம் இமெயிலைக் கண்டுபிடித்தது கருப்புத்தோல் கொண்ட பதினான்கு வயதுச் சிறுவன்; தமிழன்; இந்தியன் என்று !

நம்மில் ஏற்ற தாழ்வுகளை உருவாக்கியது வெள்ளைக்காரன்தான்​. சாதிப்பிரிவுகளைக் கொண்டு வந்து நம்மை பிரித்தாண்டது அவன்தான்​. எனக்கு இந்தியாவின் ஜாதி அமைப்பு மீது பல கேள்விகள் வருத்தங்கள் இன்றும் உண்டு. ஆனால் இதை நம்மிடம் மீண்டும் திணித்தவர்கள் ஆங்கிலேயர்கள்தான். அப்போது ஜாதிமாறி திருமணங்கள் இருந்தது. 13ஆம் நூற்றாண்டில் 14ஆம் நூற்றாண்டில்,15ஆம் நூற்றாண்டில் ஜாதிக் கலப்பு திருமணங்கள் சகஜமாகி வந்தன. ஆனால் அந்த ஜாதிமுறையை மீண்டும் ஆங்கிலேயர்கள்தான் கொண்டு வந்து நம்மைப் பிரித்தார்கள்.​ ​

எனக்குப் பூர்வீகம் ராஜபாளையம், மும்பையில் வளர்ந்தேன். சிறுவயதிலேயே ஏழு வயதில் அமெரிக்கா போனேன். போன இடம் அங்கே ஏழைகளின் நகரமான பேட்டர்சன். பலரும் நினைப்பது போல அமெரிக்காவில் எல்லாருக்கும் எல்லாம் உண்டு என்பது பொய்யான மாயை. அங்கும் ஏழைகளின் ஊர் , பணக்காரர்களின் ஊர் வெள்ளையர்களின் ஊர் , கறுப்பர்களின் ஊர் என்று பாகுபாடுகள், பிரிவினைகள் உண்டு.

நாங்கள் பேட்டர்சன் நகரத்திலிருந்து படிப்படியாக வசதியான லிவிங்ஸ்டன்-நியூஜெர்ஸி நகரத்துக்குச் சென்றோம். படிப்பில் கணிதத்தில், மருத்துவத்தில் எனக்கு மிகவும் ஆர்வம்​.​ கல்லூரிக்கான பாடத்திட்டத்தை 9 வயதிலேயே முடித்தேன்.​ 1978ல் நியூயார்க் பல்கலைக் கழகம் அமெரிக்காவில் 40 மாணவர்களைத் தேர்வு செய்து மென் பொருள் பயிற்சி கொடுத்தது. அதில் தேர்வான ஒரே இந்தியன் நான்தான்.

முன்பே 7 புரோகிராம் லாங்வேஜ்களை நான் படித்து முடித்திருந்தேன். அத்துடன் மேலும் 6 புரோகிராம் லாங்வேஜ்களை முடித்தேன்​​.​ ​ நியூ​யெர்க் என்கிற ஊரில் மருத்துவக்கல்லூரி நடத்திய மைக்கேல்சன் என்பவர் எனக்கு ஒரு வேலை கொடுத்தார். அங்கு நான் போனபோது 14 வயதுதான். என்னுடன் வேலைபார்த்தவர்கள் 30 வயது 40 வயதுகொண்டவர்கள். ஆனால் மைக்கேல்சன் எனக்கு அவர்களுக்குச் சமமான மரியாதை கொடுத்தார். சம்பளமும்கொடுத்தார். அப்போதே 14,15 செமினார்கள் நடத்தியிருக்கிறேன்.

எனக்கு ஒரு சவாலான வேலை கொடுத்தார். அங்கு ஒவ்வொரு அலுவலகத்திலும் கணினிகளை இணைப்பது சிரமமாக இருந்தது. நிறைய மனித உழைப்பைச் சாப்பிட்டது. சிக்கலாகவும் சிரமாகவும் இருந்தது. இதற்கு ஒரு வழி கண்டுபிடிக்கவும், 30 அலுவலகங்களை இணைத்து 3 கல்லூரிகளை​ ​இணைப்பது எப்படி எனக் கண்டுபிடிக்கவும் சொன்னார்.​ ​
அப்படி நான் கண்டுபிடித்தது தான் ஈமெயில். அப்போது அப்பர் கேஸில் 5 கேரக்டர்கள் மட்டுமே வர முடியும். எனவேதான் Email என்று பெயர் வைத்தேன். இதுதான் ஈமெயில்​ ​கண்டு பிடிக்கப்பட்ட வரலாறு.

எனக்கு எதிராக ‘ரேட்டியான்’ என்கிற கும்பல் மோசடிகள், போர்ஜரியில் ஈடுபட்டு என்னை வம்புக்கு இழுத்தார்கள். மற்றவர்களினஅ முந்தைய முயற்சிகள் எல்லாம். டெக்ஸ்ட் மெஸேஜிங் என்கிற அளவிலேயே இருந்த நிலையில் அலுவலக ஈமெயில் சிஸ்டம் முறையாக என்னால் கண்டுபிடிக்கப்பட்டது. அதுவரை ‘ஈமெயில்’ என்கிற வார்த்தை ஆக்ஸ்போர்டு டிக்ஷனரியில் இல்லை. 1978க்குப் பிறகுதான் டிக்ஷனரியில் வந்தது.

இசை, எழுத்து, படைப்புகளுக்கு மட்டுமே அதுவரை காப்புரிமை இருந்தது. என்னை முன்னிட்டு மென்பொருள் சார்ந்த சட்டத்திருத்தம் 1980ல் அங்கு வந்தது.
இப்போது தினமும் ஈமெயில் போக்குவரத்துகள் 20 ஆயிரம் கோடி முறை நடக்கின்றன.. 4.2பில்லியன் ஈமெயில் முகவரிகள் உள்ளன. 1993ல் அதிபர் கிளிண்டன் ஒருமுறை ஈமெயில் சார்ந்த வேலைப்பளுவைக் குறைக்க என்னிடம் யோசனை கேட்டிருக்கிறார்.

எனக்கு கணினி சார்ந்து மட்டுமல்ல மருத்துவத்திலும் ஆர்வமும் ஈடுபாடும் உண்டு. நம்நாட்டு சித்தா, ஆயுர் வேதத்தின் அருமை தெரியாமல் இருக்கிறோம். என் பாட்டி படிக்காதவர்தான் ஒருவரைப் பார்த்தே என்ன உடல் பிரச்சினை என்று கண்டு பிடித்து வைத்தியம் செய்வார். எனக்கு ஆச்சரியமாக இருக்கும். நம் சித்தா, ஆயுர் வேதத்தின் சிறப்பு முழு உடம்புக்குமானது. மேலை நாட்டு வைத்தியமுறையிலோ உட ம்பைப் பாகம் பாகமாக பிரித்துப் பார்ப்பார்கள் ஆயிரம் பாகங்கள், ஆயிரம்மருந்துகள், ஆயிரம்டாலர்கள் என்பது அவர்கள் கணக்கு எதையும் வியாபாரமாகப் பார்ப்பார்கள். ‘சைட்டோ சால்வ்’ என்பது எனது மருத்துவம் சார்ந்த கண்டுபிடிப்பாகும். இதன்படி மனித உடலை கணினியில் உள்ளீடு செய்து தீர்வு காணலாம்.

நம் நாட்டு பாட்டி வைத்தியம் எளிமையானது நம் வீட்டு கறி மசாலாவில் மிளகு,மஞ்சள், சீரகம் இருப்பது சிறப்பு. நம் உடலில் பத்து டிரில்லியன் செல்கள் உள்ளன.எல்லாவற்றையும் சமன் செய்வதுதான் நம் மருத்துவம். சித்தாவின் பெருமைகளை உலகுக்கு காட்டும் முயற்சியில் மென்பொருள் செய்து வருகிறேன் .சாதாரண முருங்கைக்காய் 97% பாங்கிரியாடிக் கேன்சர் செல்களைக் கொல்லும். நான் அமெரிக்காவில் இருந்தாலும் வீட்டில் தமிழ் பேச வேண்டும் என்பது அப்பா, அம்மாவின் கட்டளை. எனவே தமிழை மறக்கவில்லை.

இறுதியாகச் சொல்வது இதுதான் அமெரிக்காவில் அவர்களால் முடியும் என்றால் இந்தியாவில் நம்மாலும் முடியும். நாமும் கண்டு பிடிக்கலாம். ” இவ்வாறு சிவா அய்யாத்துரை பேசினார்.

இந்த சந்திப்பை எஸ்.ஜி.பி.சி இந்தியா நிறுவன ஆதரவுடன் ‘சுவாசம்’ அமைப்பினைச் சேர்ந்த டாக்டர் கார்த்திகேயன் பி.ஆர்.ஓ ஜானுடன் இணைந்து ஒருங்கிணைப்பு செய்து இருந்தார்.

சிவா அய்யாத்துரை ஈமெயிலை அப்படியே கண்டுபிடித்திருக்காவிடினும் அதன் முக்கிய கூறுகளுக்கு வித்திட்டவராகவாவது மேற்கத்திய வல்லுநர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராயில்லை. தற்போது ஈமெயிலை கண்டுபிடித்தவர் என்று ரே தாம்லின்சன் ( Ray Tomlinson) என்பவரை குறிப்பிடும் மேற்கத்திய உலகம், சிவா அய்யாத்துரையின் பெயரை அவர் கண்டுபிடிப்பில் உள்ள சில ஒற்றுமைகளுக்காகக் கூட முன்மொழிய முன்வரவில்லை என்பது ‘அவர்கள் இந்தியர்களை தாழ்வாகப் பார்க்கிறார்கள்’ என்ற சிவா அய்யாத்துரையின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதாகவே இருக்கிறது.

Related Images: