கடந்த வாரம் நடிகர் விஜயின் வீட்டிலும், அலுவலகத்திலும் வருமானவரித் துறையினர் சோதனை செய்தனர். அப்போது நிறைய பணம் கைப்பற்றப்பட்டதாக செய்தி வெளியானது. இதை மறுத்து விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“வருமான வரித்துறையினர் கலை உலகைச் சார்ந்த தயாரிப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் அலுவலகங்கள் மற்றும் இல்லங்களில் சோதனையிடுவதும், தணிக்கை செய்வதும் இயல்பான ஒன்று. கடந்த வாரம் என்னுடைய இல்லத்திலும், அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனையிட்டார்கள்.

நானும், எனது குடும்பத்தாரும், எனது அலுவலர்களும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தோம். ஆனால் சில பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் நான் கடந்த நான்கைந்து ஆண்டுகளாக வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்று உண்மைக்கு புறம்பான செய்தியை கூறியுள்ளதை அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

மேற்படி செய்தியில் சிறிதளவும் உண்மையில்லை. நான் சட்டத்தை மதித்து நடப்பவன். என்றும் சட்டத்துக்கு மரியாதை கொடுப்பவன். நடப்பு நிதியாண்டு வரை நான் என்னுடைய தொழில் மற்றும் வருமானம் சம்பந்தப்பட்ட கணக்கினை குறித்த நேரத்தில் உரிய வருமான வரி அலுவலகத்தில் தாக்கல் செய்து, அதற்குரிய வருமான வரியையும், சொத்து வரியையும், தொழில் வரியையும் முறையாக செலுத்தியுள்ளேன் என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும்.

மேலும் நான் எப்பொழுதும் வருமான வரித்துறைக்கு முழு ஒத்துழைப்பும் தருவேன். எனவே, உண்மைக்கு புறம்பான தேவையற்ற வீண் கருத்துக்களை செய்தித்தாள்களிலோ, ஊடகங்களிலோ வெளியிட்டு என் மனதைப் புண்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.

நடிகர் விஜய் போன்ற தனிநபர் பிரபலங்கள் மீது நடத்தப்படும் இது போன்ற ரெய்டுகள், மத்திய மாநில அரசுகள் கருப்புப் பணத்தை தடுக்க உஷாராக செயல்படுகிறோம் என்று மக்கள் முன் காட்டிக் கொள்ள ஆண்டுதோறும் வருமானவரித்துறை நடத்தும் நாடகங்களே. மக்களுக்கு நன்றாக அறிமுகமானவர்கள் விஜய் போன்ற பிரபலங்களே.

ஐம்பாதாயிரம், அறுபதாயிரம் கோடிகள் கார்ப்பரேட்டுகளுக்கு பட்ஜெட்டில் ஒரு சின்ன பக்கத்தில் வரும் வரிகளில் எளிதாக தள்ளுபடி செய்யப்படும். பெரிய காரப்பரேட் அம்பானிகள் முதல் பிர்லாக்கள் வரை வைத்திருக்கும் வருமான வரி பாக்கிகள் வேறு இதில் அடக்கம்.

உண்மையான குற்றவாளிகள் பிரதமர்களுடனும், ஜனாதிபதிகளுடனும் கைகுலுக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

Related Images: