தமிழ் சினிமாவில் பெயர் பெற்ற நடிகையான நிக்கி கல்ராணியின் சொந்தத் தங்கை சஞ்சனா கல்ராணி. தெலுங்கு, கன்னட மற்றும் மலையாள சினிமாவில் கடந்த 10 வருடங்களாக நிலைபெற்றிருந்தவர் தற்போது தமிழ்த் திரைப்படங்களின் பக்கம் சாய்ந்திருக்கிறார். அவர் நடித்துவரும் அருண் விஜய்யின் ‘பாக்ஸர்’ மற்றும் கலக்கப்போவது புகழ் ராமரின் ‘போடா முண்டம்’ படங்களின் படங்கள் ரிலீஸாவதற்கு முன்பே, சஞ்சனாவின் சர்ச்சை தமிழ் சினிமா பக்கம் எட்டிப்பார்த்துவிட்டது.

கன்னடத் திரைப்படங்களில் அதிக ஆர்வம்காட்டிவந்த சஞ்சனாவின் இருப்பிடம் பெங்களூரு தான். எனவே, அங்குதான் சஞ்சனாவின் அனைத்துக் கொண்டாட்டங்களும் நடைபெறும். கடந்த வாரம் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற பார்ட்டியில் கலந்துகொண்டார் சஞ்சனா. அவரைப் போலவே கன்னடத் திரைப்படத் தயாரிப்பாளரான வந்தனா என்பவரும் அந்தப் பார்ட்டியில் கலந்துகொண்டிருக்கிறார். மது அருந்துவது, டான்ஸ் ஆடுவது என அனைத்து வகையிலும் அமர்க்களமாக நடைபெற்றுக்கொண்டிருந்த பார்ட்டியில் திடீரென சஞ்சனாவுக்கும் வந்தனாவுக்கும் இடையே ஏதோ பிரச்சினையாகிவிட்டது. இதில் இருவரும் ஒருவரையொருவர் மோசமான வார்த்தைகளால் திட்டிக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. பிரச்சினையை ஹோட்டல் நிர்வாகத்தினர் உள்ளே புகுந்து தடுத்த பிறகு, அங்கிருந்து நேராக கப்பன் பார்க் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்ற வந்தனா, ‘என்னுடன் சண்டையிட்டு பீர் பாட்டிலால் தலையில் அடித்துவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று புகார் NCR கொடுத்திருக்கிறார்.

இந்தப் புகாரைத் தொடர்ந்து, பார்ட்டியில் எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி விஷயம் பெரிதாகப் பேசப்பட, நேரடியாகப் பத்திரிகைகளை எதிர்கொண்டார் சஞ்சனா. “சமீபத்தில் ஹோட்டலில் நடைபெற்ற பிரச்சினை குறித்து உங்களுக்குப் பல விஷயங்கள் தெரியவந்திருக்கும். சில வீடியோக்களையும் பார்த்திருப்பீர்கள். நான் 10 வருடங்களுக்கும் மேலாக இருந்து வரும் திரையுலகில் தான் வந்தனாவும் இருக்கிறார். ஆனால், அவருடன் நான் சேர்ந்து வேலை செய்ததே இல்லை. காரணம், பப்ளிசிட்டிக்காக என்னவேண்டுமானாலும் செய்பவர்களுடன் நான் சேர்வதில்லை. எனக்கென சில தகுதிகள் இருக்கின்றன. அந்தத் தகுதிகள் தான் என்னையும், என் குடும்பத்தையும் சொல்லமுடியாத அளவுக்கு தரக்குறைவாகப் பேசியபோதும் எந்தவித தவறான செயலிலும் இறங்காமல் என்னைக் காத்து வந்தன. ஆனால், அப்படிப்பட்ட என்னை பாட்டிலால் அடித்தேன் என்று குறிப்பிடுவது மகா மட்டமான செயல். வெளியாகியிருக்கும் வீடியோவில் நீங்களே பார்த்திருப்பீர்கள். பீர் பாட்டிலால் அடித்திருந்தால் தலையில் காயம் ஏதாவது ஏற்பட்டிருக்க வேண்டுமே அது இருந்ததா? ஒரே ஓர் ஆதாரம் நான் அப்படி நடந்துகொண்டதாகச் சமர்ப்பித்தாலும் நான் ஜெயிலுக்குக் கூட போகத் தயார்” என்று பொரிந்து தள்ளிவிட்டார் சஞ்சனா.

Related Images: