மைனா, கும்கி என இயற்கை சார்ந்த படங்கள் மூலம் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் சுகுமார். இந்த இரு படங்களில் அடர்ந்த காட்டுப் பகுதிகளை குளுகுளுவென கண் முன்னே கொண்டு வந்திருப்பார்.

கும்கியை தொடர்ந்து மாமனிதன், கும்கி-2, தேன் ஆகிய படங்களில் பணிபுரிந்த சுகுமார் தற்போது தெலுங்கு படம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

பாலா இயக்கிய வர்மா படத்தில் பணிபுரிந்த அனுபவங்கள் மற்றும் கும்கி-2, மாமனிதன் படங்கள் குறித்தும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார் சுகுமார்…..

கும்கி -2, கும்கி-1ன் தொடர்ச்சியா ?

“ இரண்டும் வெவ்வேறு விதமான பின்னணி கொண்ட கதைகள். யானை என்றாலே யாருக்குத்தான் பிடிக்காது. அந்தவகையில் கும்கி படத்தை விட இன்னும் ஒருபடி மேலாக கும்கி-2 படம் குழந்தைகளை ரொம்பவே ஈர்க்கும் படமாக உருவாகியுள்ளது. யானை ஒன்று மட்டுமே இரண்டு படங்களையும் இணைக்கும் ஒற்றுமை பாலம்.


கும்கி-2வில் யானைகளுடனான அனுபவம் பற்றி கூறுங்கள்.

இதுவரை சினிமாக்காரர்கள் யாரும் நுழையாத ஒரு அருமையான ரம்மியமான வனப்பகுதியில் கும்கி 2 படப்பிடிப்பை நடத்தி வந்துள்ளோம். முக்கால்வாசி கதைக்கு மேல் வனப்பகுதியிலேயே நடைபெற்றது.

யானைகளை வண்டியில் ஏற்றித்தான் படப்பிடிப்புக்கு அழைத்துச் செல்வது வழக்கம்.. ஆனால் நாங்கள் படப்பிடிப்பு நடத்திய பகுதிக்கோ மெயின் ரோட்டில் இருந்து கிட்டத்தட்ட ஜீப்பில் பயணித்தாலே ஒன்றரை மணி நேரம் ஆகும். பெரிய வாகனங்கள் செல்ல முடியாது என்பதால் யானையை நடத்தியே கூட்டிச்செல்ல குறைந்தபட்சம் மூன்று மணி நேரத்திற்கு மேல் ஆனது.

அதன் பிறகுதான் படப்பிடிப்பு நடத்த துவங்குவோம். இந்த பயணத்தின்போது வேறு காட்டு யானைகள் வந்து விடும் அபாயமும் இருந்ததால் அந்த பகுதியைச் சேர்ந்த 40 க்கும் மேற்பட்ட ஆட்களை பாதுகாப்புக்காக தினசரி அழைத்துச் செல்வோம்.

இந்தப்பகுதியில் 40 நாட்கள் நாங்கள் தங்கியிருந்தபோது நல்ல இயற்கையான சாப்பாடு, சுத்தமான, மூலிகை அம்சங்கள் கொண்ட குடிநீர் என ஒரு புது வாழ்க்கை வாழ்ந்தது போல இருந்தது.

கும்கி-2 வில் உங்கள் ஒளிப்பதிவு பற்றி கூறுங்கள்.

கும்கி படத்தை எடுத்த சமயத்தை விட, தற்போது முன்னேறியுள்ள தொழில்நுட்பம் இன்னும் எங்களுக்கு புதிய முயற்சிகளை மேற்கொள்ள கைகொடுத்தது.அதேசமயம் அவற்றைப் பயன்படுத்தி மொத்தப் படப்பிடிப்பையும் எந்தவித செயற்கை ஒளியும் இல்லாமல் இயற்கை ஒளியிலேயே படமாக்கி இருக்கிறோம்.

இயக்குநர் பிரபுசாலமன் கூட கும்கி படத்தை விட இதில் நமக்கு தாராளமாகச் செலவு செய்ய இன்னும் அதிகமாகவே பட்ஜெட் இருக்கிறது. நீங்கள் இன்னும் நிறைய பயன்படுத்திக் கொள்ளலாமே என்று கூறியபோது வேண்டாமென திட்டவட்டமாக மறுத்துவிட்டேன்.

காரணம் இந்தக் கதைக்கு இயற்கையான ஒளி இன்னும் வலுவூட்டுவதாக இருக்கும் என்பதால் ஒரு டார்ச்லைட் ஒளியைக் கூட இதில் பயன்படுத்தவில்லை. இந்தப் படத்திற்குத் தேவைப்பட்டதாலும் அதேசமயம் இப்படியும் கூட படமாக்க முடியும் என்பதை வெளிப்படுத்தும் விதமாகவும் இந்த புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளோம்.

இயற்கை ஒளியையே பயன்படுத்தியதால் படப்பிடிப்பு நேரம் எங்களுக்கு ரொம்பவே மிச்சமானது. இயக்குநர் பிரபு சாலமனின் முழு ஒத்துழைப்பு இருந்ததால்தான் இது சாத்தியமானது. வி எஃப் எக்ஸ் காட்சிகளும் சிறப்பாக வந்திருக்கிறது. கலகலப்பும் , சென்டிமென்ட்டும் கலந்த படம் இது.

மாமனிதன் படத்தில் பணிபுரந்தது பற்றி..

தர்மதுரை படத்திற்கு பிறகு இயக்குநர் சீனு ராமசாமி மற்றும் விஜய்சேதுபதி இருவருடனும் இணைந்து மாமனிதன் படத்தில் பணியாற்றுகிறேன். இது தர்மதுரை மாதிரியான கதை அல்ல. வேறு விதமான கதை.

அடுத்தவர்களைப் பார்த்து வாழ வேண்டாம், நமக்காக நாம் வாழ்வோம் என்கிற ஒரு செய்தியைச் சொல்லும் நடுத்தர வர்க்கத்து குடும்பத்துக் கதையாக இது இருக்கும்.

படத்தில் விஜய் சேதுபதியும், காயத்ரியும் தேசிய விருதுகள் வாங்குமளவிற்கு சிறப்பாக நடித்துள்ளார்கள். படம் பார்க்கும் போது நீங்கள் அதை உணர்வீர்கள்.

இப்படத்தில் நான்கு காட்சிகள் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டவை. பல ஷாட்டுகளாக பிரித்து வழக்கம்போல எடுக்காமல், பக்காவான ரிகர்சல் பார்த்துவிட்டு சென்றதால் ஒரே டேக்கில் இக்காட்சியை பிரமாதப்படுத்தி விட்டார்கள் விஜய்சேதுபதியும் காயத்ரியும். ஏழரை மணிக்கு ஷாட் வைத்து எட்டு மணிக்கெல்லாம் படப்பிடிப்பை முடித்துவிட்டு கிளம்பிவிட்டோம் என்றால் பாருங்கள்.

விஜய் சேதுபதியுடன் பணிபுரிந்தது பற்றி கூறுங்கள்..

தர்மதுரை படத்தில் பார்த்த அதே விஜய்சேதுபதி தான் மாமனிதன் படத்திலும். அப்படியே இருக்கிறார். ஆண்டிபட்டியில் தான் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டன. தவிர கேரளா மற்றும் காசியிலும் சில காட்சிகள் எடுக்கப்பட்டன. படப்பிடிப்பு முழுவதும் ஒரு குடும்பத்தோடு இருந்தது போல உணர்வு ஏற்பட்டது.

சங்கத்தமிழன் போன்ற கமர்ஷியல் படங்களில் விஜய்சேதுபதி நடிக்கலாமா என சிலர் கேட்கிறார்கள். விஜய்சேதுபதி போன்ற ஒரு நடிகனை இப்படித்தான் நடிக்க வேண்டும் என ஒரு வட்டத்திற்குள் அடக்கவே கூடாது.

மாமனிதன் படத்துக்காக முதல் முறையாக இசைஞானி இளையராஜாவும் அவரது மகன் யுவன்சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளார்கள். அப்படி ஒரு சிறப்புமிக்க படத்தில் நானும் இருக்கிறேன் என்பதே பெருமையாக இருக்கிறது.

கணேஷ் இயக்கியுள்ள தேன் படத்தில் பணிபுரிந்தது பற்றி..

வீர சிவாஜி படத்தை இயக்கிய இயக்குநர் கணேஷ் விநாயக் இயக்கியுள்ள ’தேன்’ என்கிற படத்தின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டோம். இப்படமும் தேனி பக்கம் உள்ள மலைப்பகுதிகளில் படமாக்கப்பட்டதே.

வர்மா படத்தில் பாலாவுடன் பணிபுரிந்து பற்றி கூறுங்கள். அது ஏன் வெளியாகவில்லை ?

அது ஒரு புதுவிதமான அனுபவம். அந்தப் படம் வெளியாக முடியாமல் போனதில் எங்களுக்கு வருத்தமே. ரசிகர்களுக்கு ஒரு நல்ல அனுபவம் கிடைக்காமல் போகிறதே என்கிற ஆதங்கமும் இருக்கிறது. நான் இரண்டு படத்தையும் பார்த்துவிட்டேன். நிச்சயம் பாலாவின் ’வர்மா’ ஒருபடி மேலே தான் இருக்கிறது.

இந்தப் படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தான் இயக்குநர் பாலா இயக்கினார். படம் சென்சாருக்குப் போகும் கடைசி நாள்வரை இந்தப் படத்தை நிறுத்துவதற்கான எந்த ஒரு அடையாளமுமே தென்படவில்லை.

ஆனால் தான் பணியாற்றும் படங்கள் எல்லாம் ஹிட் ஆவதால் தன்னை எப்போதுமே அறிவுஜீவி என நினைத்துக் கொள்ளும் ஒரு முக்கியமான நபரின் தூண்டுதலால், தயாரிப்பாளர் வேறு வழியின்றி எடுத்த திடீர் முடிவு அது. படத்தைப் பற்றிய விளக்கங்களை பாலாவிடம் கேட்டுவிட்டுப் பிறகு அவர்கள் முடிவெடுத்திருக்க வேண்டும். இயக்குநர் பாலாவைப் பொருத்தவரை இந்தப்படத்தை விக்ரமுக்காகத்தான் இயக்கினார்.

நடிகர் விக்ரமுடன் எனக்கு 19 வருட நட்பு இருக்கிறது.அவர்தான் எனக்கு முதல்முதலாக ஸ்டில் போட்டோகிராபர் ஆக வாய்ப்பு கொடுத்தவர்.அவரது மகன் துருவ்வுக்கும் முதன்முதலாக நான்தான் ஸ்டில்ஸ் டெஸ்ட் எடுத்தேன் என்பது எனக்கு சந்தோஷமான விஷயம். அவரது குடும்பத்தில் ஒரு நபர் போலத்தான் நான்.

துருவ் எப்படி? அப்பாவைப் போல வருவாரா ?

விஜய்யின் தீவிர ரசிகர் தான் துருவ்.அவரது படங்களை விரும்பி பார்ப்பவர். இயல்பிலேயே அவருக்குள்ளும் நடிப்பு ஜீன் இருந்திருக்கிறது.அத்துடன் அமெரிக்கா சென்ற நடிப்புப் பயிற்சியும் பெற்றுவந்தவர்.

துருவ்விடம் உள்ள ஒரு சிறப்பம்சம், அவர் தமிழில் பேசினால் தமிழ் நடிகர் மாதிரி தெரிவார். ஆங்கிலத்தில் பேசினால் அமெரிக்க நடிகர் போல அவரது முகமே மாறிவிடும். லோக்கலாக பேசினால் சென்னைப்பையன் போல, கொஞ்சம் மாடல் ஐடி வாலிபனாக பேசினால் அதேபோல என அவரது முகத்தோற்றம் விதம் விதமாக மாறுவது அவருக்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்.

பாலா துருவ்வை எப்படி நடிக்க வைத்தார்? மிகவும் கஷ்டப்படுத்தினாரா ?

மற்ற நடிகர்கள் போல துருவ் சிரமப்படவில்லை. சிறுவயதிலிருந்தே தான் பார்த்த, தூக்கி வளர்த்த குழந்தை என்பதால் துருவ்விற்கு படப்பிடிப்புத் தளத்தில் மிகுந்த சுதந்திரம் கொடுத்து அவரை மிகச் சிறந்த நடிகனாக மாற்றினார் பாலா. துருவ்விற்கு இது மிகவும் கொடுப்பினையான விஷயம்.

சில காட்சிகளில் பாலா மீண்டும் ஒன்மோர் கேட்பார். அப்போது துருவ்வின் நடிப்பைப் பார்த்துவிட்டு அவங்க அப்பா மாதிரியே இருக்கிறார் என்று நான் கூறுவேன். அதற்கு பாலா, “ஆமாப்பா.. துருவ்கிட்ட அவங்க அப்பன் தெரியக்கூடாது.. அதனாலதான் ஒன்மோர் போலாம்னு சொன்னேன்” என்பார்.

இப்பொழுது வெளியாகியுள்ள ஆதித்யா வர்மா படத்தில் துருவ்வின் நடிப்பு சிறப்பாக இருப்பதாக பேசப்படுகிறது என்றால் பாலா என்கிற சிற்பியின் கைவண்ணம் தான் அதற்கு காரணம்.

வெளிவந்த புதிய ஆதித்யா வர்மா படத்தை பற்றி விமர்சனம் செய்தவர்கள் கூட இது துருவ்விற்கு 101-வது படம் போல இருக்கிறது என்று தான் சொன்னார்கள். பாலாவின் கீழ் ஒரு படம் செய்தது 100 படத்தில் நடித்ததற்கு சமம் தான். நடிப்பை பிழிந்து எடுக்காமல் விடமாட்டார் பாலா.

இனி வருங்காலத்தில் பாலா-துருவ் இருவரும் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இந்த ஒரு படத்தில் ஏற்பட்ட வருத்தத்தால் விக்ரமுடனான பலவருட நட்பில் எந்த விரிசலும் விழவில்லை.

பாலா இயக்கிய சேது படம்தான் தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி ஆக மாறியது. அதே சேதுவைத்தான் இந்தப் படத்தில் பாலா மீண்டும் உருவாக்கினார். சேது விக்ரமின் இன்னொரு அப்டேட் வெர்சன் தான் வர்மாவில் நடித்த துருவ்வின் பாத்திரம். நிச்சயம் இந்தப்படம் வெளியாகி ரசிகர்களை சென்றடைய வேண்டும் என்பதே என்னுடைய ஆசை” என்றார் சுகுமார்.

Related Images: