ஏ.ஆர்.முருகதாஸ் – ரஜினிகாந்த் கூட்டணியில் இன்று வெளியான படம் தர்பார். இந்தப் படத்தில் காசு இருந்தால் சிறைக்கைதி கூட ஷாப்பிங் போகலாம் என்ற வசனம் இடம்பெற்றுள்ளது.இந்த வசனம் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலிருக்கும் சசிகலாவை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழக அமைச்சர் ஜெயக்குமார், “தர்பார் திரைப்படத்தில் சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கின்ற பணத்தினால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைக்கும் மனிதர்களைப் பற்றி எடுக்கப்பட்டுள்ளது.

அதாவது பணம் பாதாளம் வரைக்கும் பாயும் அதேசமயத்தில் பணம் சிறைச்சாலை வரைகூட பாயும் என்று சசிகலா அவர்களை சுட்டிக்காட்டி படம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கு விசாரணையில் உள்ளதால் அதை பற்றி நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை, ஆனால் அதே சமயத்தில் திரைப்படங்கள் வாயிலாக நல்ல கருத்துக்களை தமிழக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” என்றார்.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய வசனத்தை தர்பார் படத்திலிருந்து நீக்க வேண்டும் என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

மேலும், காவல்துறை அதிகாரி வினய் குமார் அறிக்கையில் சசிகலா ஷாப்பிங் போனதாக எங்கேயும் குறிப்பிடவில்லை என்று தெரிவித்திருக்கும் அவர், அந்தக் காட்சிகளை நீக்க வேண்டும் என்றும், அவ்வாறு நீக்கப்படாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை பாயும் என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல் ஆதாரம் இல்லாமல் பேசும் ஜெயக்குமார் மீதும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வைப்போம் என்றும் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறியுள்ளார்.

இந்நிலையில் முகநூல் உள்ளிட்ட வலைதளப் பக்கங்களில் இவ்வளவு ஆத்திரப்படும் சசிகலா தரப்பினர் குறைந்த பட்சம் சசிகலாவுக்குச் சொந்தமான ஜாஸ் சினிமாஸ் தியேட்டர்களிலிருந்தாவது அவருக்கு எதிரான வசனங்களை வெட்டி எறியலாமே என்று யோசனை சொன்னதைத் தொடர்ந்து படத்தில் இரு இடங்களில் இடம் பெறும் வசங்களை சசிகலா தரப்பினர் நறுக்கப்போவதாக நம்பகமான தகவல்.

Related Images: