ரஜினிகாந்தின் அரசியல் மற்றும் சமூக ஈடுபாடு குறித்தெல்லாம் எனக்கு மாற்றுக்கருத்து இருக்கிறது என்றொரு பொறுப்புத் துறப்பை முன்வைத்துவிட்டு குறுக்குச் சால் ஓட்டுகிறவர்கள் நேரடியாக ரஜினியின் பெரியார் விமர்சனத்தை ஆதரிக்கத் தொடங்கி விடுகிறார்கள். அவர்கள் இப்போதில்லை; எப்போதுமே பெரியார் என்ற பெயரையும் அவரது அரசியல், சமூகப் பங்களிப்பையும் அச்சத்தோடு கவனித்து மறுத்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.அவரை நாத்திகம் மட்டுமே பேசியவராகக் குறுக்குவதை முதன்மையாகச் செய்கிறார்கள்.
சனாதனச் சடங்குகளை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த இடைநிலைச் சாதிக்கூட்டங்களை நோக்கி இடையறாது பேசியவர் பெரியார். அவர்களின் அறியாமையையும், சாதிப் பெருமைகளையும் தாங்கள் சாதி அடுக்கில் மேலே இருப்பவர்கள் என்ற எண்ணங்களை அர்த்தமற்ற வெட்டிப் பேச்சுகள் எனச் சுட்டிக்காட்டியவர். சமூக நீதிக்கான அவரது போராட்டங்களையும் பரப்புரைகளையும் வாசித்துவிட்டு அதற்கான மறுப்புரைகளை முன்வைப்பதற்குப் பதிலாகத் தலித் (தீண்டப்படாதவர்)களுக்கெதிராக முன்னிறுத்த விருப்பம் கொண்டவர்களாகச் சில முன்னெடுப்புகளைச் செய்கிறார்கள். இந்து சமயத்திற்கெதிராகப் புத்தமதத்தை முன்மொழிந்த அயோத்திதாசரைப் பெரியார் மறைத்துவிட்டார் என்பது முதன்மையானது முன்னெடுப்பு. பிராமணப்பெண்களின் அபத்தச் சீற்றங்கள் இன்னொன்று.இவ்விரண்டையும் வைத்துக்கொண்டு இப்படிச் சில கேள்விகளைக் கேட்கலாமா?
இந்த முன்னெடுப்பை வைத்துக்கொண்டு இப்படிச் சில கேள்விகளைக் கேட்கலாமா? நாத்திகர் பெரியாரால் மறைக்கப்பட்ட அயோத்திதாசரைச் சமூகவெளியில் முன்னே கொண்டுவந்து நிறுத்தி இந்துமத அபிமானிகள் கொண்டாடியிருக்கலாமே? அவர்களைத் தடுத்தது எது? அவர்களும் சேர்ந்து அயோத்திதாசரை ஏன் மறைத்தார்கள்?
எதிரியின் எதிரிக்கு உதவும் தந்திரோபாயம் என்ற அளவில் கூட அப்போது செய்யவில்லையே? உலக நிகழ்வுகளையெல்லாம் அடையாளப்படுத்திய சுதேசமித்திரன் இதழில், அயோத்திதாசர் என்ற பெயரையும் அவரது அறிவுக்கூர்மையையும் பாராட்டாமல் – சுட்டிக்காட்டாமல் தடுத்தது எது?
தன்காலச் சமூகச் சீர்திருத்தவாதிகளை – இந்திய/ உலக அளவுப் பெயர்களைக் கவிதைப்பரப்பில் சுட்டிக் காட்டிய பாரதியார் ஏன் அயோத்திதாசர் என்ற பெயரைச் சுட்டிக்காட்டவில்லை என்றெல்லாம் கூடக் கேள்வி கேட்கலாம். அப்படிக் கேட்பது ஒருவித அபத்தம், அவரவரின் நிகழ்காலத்தில் எதைப் பேசுவது? எதனை ஆதரிப்பது? எதனை மறுப்பது? எதனைக் கண்டுகொள்ளாமல் இருப்பது என்பதெல்லாம் ஒவ்வொருவரின் தேர்வும் நோக்கமும் சார்ந்தன. அவர்களின் அரசியல் நிலைபாடுகள் சார்ந்தன. அவர்களின் இயங்குநிலை சார்ந்தது.
முகநூலிலும் சமூக ஊடகங்களிலும் செயல்படும் பிராமணப் பெண்களின் சாதீய ஈடுபாடு ஆச்சரியமாக இருக்கிறது. அவர்களைத் தங்களைப் பெண்களாகக் கருதுவதைவிடப் பிராமணப் பெண்களாகவே கருதிக்கொள்கிறார்கள். இந்தப் போக்கு தலித் பெண்ணியத்தின் நிலைபாடுகளுக்கு நேரெதிரானது. பாலடையாளத்தை முதன்மையாக நினைக்காமல் சாதி அடையாளத்தை முதன்மையாக நினைக்கிறார்கள். நாங்கள் முதலில் பெண்கள்; பிறகு தலித்துகள். அதனால் நாங்கள் இரண்டு விதமான ஒடுக்குமுறைக்கும் ஒதுக்குதலுக்கும் உள்ளாகிறோம் என்று வாதிடுகிறார்கள் தலித் பெண்கள். தலித் ஆண்களின் ஒடுக்குதலையும் ஒதுக்குதலையும் சேர்த்தே எதிர்க்கும் நிலைக்குமாறாகப் பிராமணப்பெண்கள் என்ற ஒற்றை அடையாளத்துக்குள்ளேயே நிற்கிறார்கள். அதனால் கிடைக்கும் புனிதங்களாலும் பெருமைகளாலும் தங்களின் இடம் உயர்வானது என நினைக்கிறார்கள். அதனாலேயே பிராமணியத்தைக் கேள்விகேட்ட பெரியார் மீது கோபங்கொண்டு சீறுகிறார்கள்.
இந்திய/ தமிழ்ப் பரப்பில் பெண்களின் பொதுவெளிப்பங்கேற்புக்கும், பெண்கல்விக்கும், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கலுக்கும் காரணமான சொல்லாடல்களைத் தீவிரமாக முன்வைத்தவர் பெரியார். பெரியாரின். கருத்துகளை உள்வாங்கிச் செயல்பட்ட திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளே இங்கு பெண்களுக்கான வெளிகளைத் திறந்துவிட்டுள்ளன. அவரளவுக்கு இந்தியப் பரப்பில் பெண்ணியம் சார்ந்த பாய்ச்சலான கருத்தியலை முன்வைத்தவர் ஒருவரைச் சுட்டிக்காட்ட முடியாது. இதனை அறிந்திருந்தபோதிலும் அதனைப் பேச மறுக்கும் பெண்கள், சீதாப்பிராட்டியைத் தங்களின் அடையாளமாகக் கருதிக் கொண்டு, அவரை அசிங்கப்படுத்திவிட்டது பெரியாரியம் எனக் கொந்தளிக்கிறார்கள். நவீனப் பிராமணப் பெண்களின் அடையாளம் சீதாப்பிராட்டி தானா? இறங்கு என்றால் நெருப்பில் இறங்கிக் கற்பை நிரூபிக்கத்தயாரான சீதாதேவியாகத் தங்களை நினைத்துக்கொண்டால் விமோசனங்கள் பக்கத்தில் இல்லை.பெரியாரின் இயங்குநிலைகள் தேர்தல் அரசியல் அல்ல. அதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். அவரை – அவரது கருத்துகளை- முழுமையாக ஏற்றுக்கொண்டு செயல்பட நினைத்தால் தேர்தல் அரசியலில் வெற்றிகள் சாத்தியமில்லை என்பதை அறிந்ததால் தான் திராவிட முன்னேற்றக்கழகமே உருவானது; மாற்றங்களை மேற்கொண்டது. அதற்காக அவரை எதிர்த்து நிற்கவில்லை. ஆனால் இன்று அவர் பெயரை உச்சரித்துச் சாடுபவர்களின் நோக்கம் தேர்தல் அரசியல். தேர்தல் அரசியலின் அணிதிரட்டலுக்காக அவரது செயல்பாடுகளைப் பெரும்பான்மைக்கெதிரானதாகக் கட்டமைக்கிறார்கள். தலித்துகள், பெண்கள், ஒடுக்கப்பட்டோர் போன்ற தனி அடையாளங்களை மறுக்கும் கருத்தியலாளர்கள் அனைவரையும் மத அடையாளத்தின் வழி ஒன்றாக்கப் பார்க்கிறார்கள். ஒன்றாக்கிச் சமநிலை பேணுவதல்ல அதன் பின்னிருக்கும் நோக்கம். ஒன்றாக்கி அரசியல் அதிகாரம் பெறுவது மட்டுமே அவர்கள் தேவை. அதன் பிறகு சனாதன தர்மம் தலித்துகளுக்கு எந்த இடத்தைத் தருமோ அதையே தருவார்கள். பெண்களை எங்கே நிறுத்துமோ அதையே உறுதி செய்வார்கள். பெரியாரை வெறுத்து ரஜினிகாந்த் முன்வைக்கும் ஆன்மீக அரசியலை ஆதரிக்கத் தொடங்கினால், அவரது படங்களில் பெண்களுக்குத் தரும் உன்னத இடங்களை நீங்கள் அடையலாம். பெண்களைப் பற்றிப் படங்களில் அவர் பேசிய பொன்(பஞ்ச்) மொழிகளில் சில:
பொம்பளைக்கு பொறுமை வேண்டும், அவசரப்படக்கூடாது. அடக்கம் வேணும், ஆத்திரப்படக்கூடாது. அமைதி வேணும், அதிகாரம் பண்ணக்கூடாது. கட்டுப்பாடு வேணும், கத்தக்கூடாது. பயபக்தி வேணும், பஜாரித்தனம் கூடாது. மொத்தத்துல பொம்பள பொம்பளயா இருக்கணும்.

– அதிகமா ஆசைப்படற ஆம்பளையும் அதிகமா கோபப்படுற பொம்பளயும் நல்லா வாழ்ந்ததாக சரித்திரமே கிடையாது.

– ஒரு பொண்ணு வீட்டைவிட்டு வெளிய போனா புருஷன் கூட போகணும். இல்லேன்னா நாலுபேரு தூக்கிட்டுப் போகணும்.

– பெண் என்றால் புடைவை கட்டி, கையெடுத்துக் கும்பிடத் தோன்ற வேண்டும்

– பொம்பளைய அடிக்கறவனுக்கும் ஊனமுற்றவங்களை அடிக்கிறவனுக்கும் என் அகராதியில் பொட்டைன்னு அர்த்தம்

– பொண்டாட்டிய புருஷன் மதிக்கலேன்னா நரகம். புருஷனை பொண்டாட்டி மதிக்கலேன்னா ஏழேழு ஜென்மத்துக்கும் நரகம்.

– பொம்பள புள்ளைங்க ஊர் சுத்தினா கெட்டுப் போயிடுவாங்க. ஆம்பள புள்ளைங்க வீட்டைச் சுத்தினா கெட்டுப் போயிடுவாங்க.’ (நன்றி: கவிதா லக்ஷ்மி- நார்வே)
பெண்ணுரிமை -பெண்ணியம்- பெண் விடுதலை போன்ற வரங்களுக்கான பாதைகள் வேண்டாம். சாபங்களே போதும் என்றால் பெரியாரைச் சபித்துக் கொண்டிருக்கலாம்.

Related Images: