தமிழ் சினிமாவில் இன்னொரு ரவுண்ட் வந்தே தீருவது என்கிற முரட்டுப்பிடிவாதத்துடன் மேலும் மூன்று படங்களை இயக்கி வருகிறார் பாரதிராஜா.

நீண்ட இடைவேளைக்குப் பின் பாரதிராஜா நடித்து இயக்கியுள்ள படம் ‘மீண்டும் ஒரு மரியாதை’. இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது. இதுகுறித்து பாரதிராஜா அளித்த பேட்டியில்“என் இயக்கத்தில் மீண்டும் ஒரு மரியாதை, நவம்பர் 8, எலினா ஆகிய 3 படங்கள் தயாராகின்றன. இதில் மீண்டும் ஒரு மரியாதை படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர உள்ளது. இதில் ராசி நட்சத்திரா, மவுனிகா, ஜோ.மல்லூரி ஆகியோரும் நடித்துள்ளனர். இதில் கிராமத்து எழுத்தாளராக வருகிறேன்.

எழுத்தாளர், வயோதிக காலத்தில் மகனுடன் வசிக்க லண்டன் செல்கிறார். அங்கு தற்கொலைக்கு முயலும் ஒரு இளம்பெண்ணை சந்திக்கிறார். இருவருக்குமான பயணம் தான் கதை. தற்கொலை முடிவு தவறானது என்பதையும், உலகம் அழகானது என்பதையும் படம் உணர்த்தும். நவம்பர் 8 படத்தில் விதார்த் நடிக்கிறார். பாதி படப்பிடிப்பு முடிந்துள்ளது. மேலும் 3 படங்களில் நடித்து வருகிறேன்.

குற்ற பரம்பரையை வெப் தொடராக இயக்குகிறேன். 24 பகுதிகளாக இது வெளிவரும். எனது வாழ்க்கையில் இது பெரிய பதிவாக இருக்கும். பொன்னியின் செல்வன் படத்தை எம்.ஜி.ஆர். தயாரிப்பில் நான் இயக்குவதாக இருந்தது. கமல்ஹாசன், ஸ்ரீதேவி, ரேவதி ஆகியோரை அந்த படத்துக்கு ஒப்பந்தம் செய்யும்படி எம்.ஜி.ஆர். கூறினார். ஆனால் அது படமாக மாறுவதற்குள் எம்.ஜி.ஆர். உடல்நலம் குன்றியதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.” என்று பாரதிராஜா கூறினார்.

Related Images: