ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்த ‘தர்பார்’ திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இந்தத் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வருவாய் தரவில்லை என்றும் தங்களுக்கு நட்டத்தைக் கொடுத்துள்ளது அதற்கு படத்தில் சம்பந்தப்பட்டவர்கள் நட்ட ஈடு கொடுக்கவேண்டுமென்று என்று வினியோகஸ்தர்கள் போர்க் கொடி தூக்கினர்.

தர்பார் திரைப்படத்தின் நாயகன் ரஜினி, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோரின் வீடு, அலுவலகங்களுக்குச் சென்றனர்.இதையடுத்து காவல்துறை பாதுகாப்பு கேட்டு ஏ.ஆர்.முருகதாஸ், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில்….

தர்பார் படத்தை இயக்கியுள்ளேன். இயக்குநர் பணியைத் தவிர, தர்பார் படத்தில் வேறு எந்தப் பணியிலும் நான் ஈடுபடவில்லை. படத்தின் விநியோகம் உள்ளிட்டவைகளுக்காக யாரிடமும் நான் பணம் பெறவில்லை. ஆனால் கடந்த 3-ந்தேதி தேனாம்பேட்டையில் உள்ள என்னுடைய அலுவலகத்துக்குள் விநியோகஸ்தர்கள் என்று கூறிக்கொண்டு 25 பேர் அத்துமீறி நுழைந்து, என்னை அசிங்கமாக பேசியுள்ளனர். இதனால் என் அலுவலக ஊழியர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

அதேபோல, சாலிக்கிராமத்தில் உள்ள என் வீட்டை முற்றுகையிட்ட 15 பேர் எனக்கு எதிராக கோஷம் போட்டனர். எனவே, என் வீட்டிற்கும், அலுவலகத்துக்கும் பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.ராஜமாணிக்கம், பதில் அளிக்கும்படி காவல் ஆணையருக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் விஜய்சுப்பிரமணியன், முருகதாஸ் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதைப் பதிவு செய்துகொண்டு இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும்’ என்று கூறினார்.

அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்குரைஞர் முகமது ரியாஸ், ‘மனுதாரர் முருகதாஸ் கொடுத்த புகாரின் அடிப்படையில் தேனாம்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், இந்த வழக்கை மேற்கொண்டு நடத்த விரும்பவில்லை என்று காவல்துறைக்கு முருகதாஸ் கடிதம் அனுப்பியுள்ளார்’ என்று கூறி அந்தக் கடிதத்தை நீதிபதியிடம் கொடுத்தார்.

உடனே மனுதாரர் வழக்குரைஞர், ‘விநியோகஸ்தர்கள் சங்கத்தில் இருந்து இயக்குநர்கள் சங்கத்துக்கு இந்த விவகாரம் குறித்து கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதனடிப்படையில், காவல்துறை பதிவு செய்த வழக்கை மேற்கொண்டு நடத்த முருகதாஸ் விரும்பவில்லை’ என்று கூறினார்.

இதையடுத்து நீதிபதி, ‘பாதுகாப்பு கேட்டு வழக்கு தொடர்வார்கள். பதில் அளிக்க உத்தரவிடும்.காவல்துறையும் வழக்குப்பதிவு செய்வார்கள். அதன்பின்னர் நடவடிக்கை வேண்டாம். பாதுகாப்பு கேட்ட மனுவை முடித்துவைக்க வேண்டும் என்று கூறினால், இந்த மனுதாரர் (முருகதாஸ்) விருப்பப்படி நீதிமன்றம் செயல்பட வேண்டுமா?’ என்று கருத்து தெரிவித்தார். பின்னர், இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.