தனது மகன் துருவுக்கு புதிய பட வாய்ப்புகள் பெற்றுத்தருவதற்காக சினிமாவை விட்டு நடிகர் விக்ரம் ஓய்வெடுக்கப்போவதாக வந்துகொண்டிருக்கும் செய்திகளை விக்ரம் தரப்பு மறுத்துள்ளது.

\விக்ரம், 1990-ல் வெளியான ‘என் காதல் கண்மணி’ படத்தில் அறிமுகமானார். 1999-ல் பாலா இயக்கத்தில் நடித்த ‘சேது’ திருப்பு முனையை ஏற்படுத்தியது. அதன்பிறகு மளமளவென படங்கள் குவிந்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார்.

அந்நியன், பிதாமகன், தில், தூள், ஜெமினி, சாமி, தெய்வத்திருமகள் உள்பட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். ஒவ்வொரு படத்திலும் கடுமையான உடற்பயிற்சிகள் மூலம் தோற்றத்தை வித்தியாசப்படுத்தி திறமையான நடிகர் என்பதையும் நிரூபித்தார். தற்போது அஜய் ஞானமுத்து இயக்கும் ‘கோப்ரா’ படத்தில் 20 தோற்றங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் விக்ரம் சினிமாவை விட்டு விலக முடிவு செய்து இருப்பதாக இணைய தளங்களில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. விக்ரம் மகன் துருவ், தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீமேக்கான ‘ஆதித்ய வர்மா’ மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி உள்ளார். இந்த படம் கடந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வந்தது. சினிமாவை விட்டு விலகி மகனின் சினிமா வாழ்க்கைக்கு உதவ விக்ரம் முடிவு செய்து இருப்பதாக இணைய தளங்களில் கூறப்பட்டு இருந்தது. இது விக்ரம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த தகவல் உண்மையா? என்று பலரும் கேள்வி எழுப்பினர். இதற்கு விக்ரம் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. “விக்ரம் தற்போது கோப்ரா, மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், மகாவீர் கர்ணா, மேலும் லலித் தயாரிக்கும் படம் உள்பட 4 படங்களில் நடித்து வருகிறார். சினிமாவை விட்டு விக்ரம் விலகுவதாக வெளியான தகவலில் உண்மை இல்லை” என்று அவரது மானேஜர் தெரிவித்து உள்ளார்.

ஆனால் அவரது மகன் துருவ் அடுத்த பட வாய்ப்பின்றி தவிப்பதை விக்ரம் வட்டாரம் மறுக்கவில்லை.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.