ம.செந்தமிழன்

பக்கவிளைவு (Side effect) :

உங்கள் வீட்டுத் தோட்டத்தில் ஒரு மாம்பழ விதையை ஊன்றி வைக்கிறீர்கள். மாஞ்செடியும் வளர்கிறது. சில ஆண்டுகள் கழித்து, அது மரமான பின்னர் அம்மரத்தின் கிளைகளில் ஒட்டுண்ணிக் கொடிகள் முளைக்கின்றன. அவை மரத்தின் உயிராற்றலைச் சிறிதளவு பாதிக்கும். அதை நீங்கள் வெட்டி எறிகிறீர்கள். நீங்கள் விதைத்தது முளைத்தது. அதனோடு வேறு ஒரு கொடியும் முளைத்துவிட்டது. இது பக்கவிளைவு. அதாவது நீங்கள் எதிர்பாராமல் விளைந்தது.

நேர் எதிர் விளைவு (Adverse Effect):

உங்கள் மாமரம் காய்க்கத் துவங்குகிறது. அதன் பழங்கள் எட்டிக்காய் போல் கசக்கின்றன. அதை உண்டவர்கள் சில காலத்தில் நோய்வாய்ப்பட்டு இறந்தே போகின்றனர். பின்னர்தான் தெரிகின்றது, அந்த மாம்பழங்களில் நஞ்சு கலந்துள்ளது எனும் செய்தி. இது நீங்கள் எதிர்பாராத விளைவு மட்டுமல்ல, நீங்கள் விரும்பாத விளைவு. இது பக்க விளைவு அல்ல, நேர் எதிர் விளைவு.

அலோபதி மருத்துவத்தில் ஒரு சொல்லை வெகு தந்திரமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். ’பக்க விளைவு’ (Side effect) எனும் சொல் அது. ஒரு நோய்க்காக அலோபதி மருந்தினை உட்கொண்டால், ஒன்று அந்த நோய் முற்றிலும் தீர வேண்டும் அல்லது அந்த மருந்தினால் வேறு எதிர்விளைவுகள் நேராமலாவது இருக்க வேண்டும். அலோபதி மருந்துகள் பெரும்பாலான நோய்களைத் தீர்ப்பதே இல்லை. ஆனால், எதிர் விளைவுகளை உருவாக்கிவிடுகின்றன. அலோபதிக்காரர்கள் அழகாக இந்த எதிர்விளைவுகளை ‘பக்கவிளைவுகள்’ என்பார்கள். இது வார்த்தைகளால் நடத்தப்படும் அரசியல். உண்மையில் அவை எதிர்விளைவுகள்.

பயோக்ளைடோசோன் எனும் மருந்தினை சர்க்கரை நோய்க்காக உட்கொண்டால், அம்மருந்து சர்க்கரை நோயை குணப்படுத்துவதில்லை. ஆனால், அதே மருந்து புற்று நோயையும், இதய நோய்களையும், உடல் பருமனையும் விளைவிக்கிறது. இதன் பெயர் பக்க விளைவு என்றால், அது மோசடி அல்லவா.

இந்தப் புரிதலோடு இன்சுலினைப் பற்றியும் உங்களோடு உரையாட விரும்புகிறேன்.

இன்சுலினும் நாய்களும்:

நாய்களுக்கும் இன்சுலினுக்கும் மிக நெருங்கிய உறவு உண்டு. முதன்முதலில் இன்சுலினைப் பற்றிய ‘ஆராய்ச்சியை’ அலோபதிக்காரர்கள் துவங்கியது நாய்களை வைத்துத்தான்.

1889 ஆம் ஆண்டு, ஆஸ்கர் மின்கோவ்ஸ்கி, ஜோசப் வான்மெரிங் ஆகிய இருவரும் ஒரு நாயின் வயிற்றைக் கிழித்து அதன் கணையத்தை மட்டும் அறுத்து எடுத்து மீண்டும் நாயின் வயிற்றைத் தைத்து விட்டார்கள். கணையம் இல்லாத நாயின் சிறுநீரைச் ‘சோதனை’ செய்து பார்க்கையில், அதில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தது. அந்த நாயின் சிறுநீரை ஈக்களும் மொய்த்தன. ஆகவே, அவர்கள் ‘ஆய்வின்படி’ கணையம் இல்லாவிட்டால், சர்க்கரை அளவு அதிகரிக்கும் எனும் முடிவு எடுக்கப்பட்டது.

1916 ஆம் ஆண்டு, பேராசிரியர் நிக்கோல் பாலேசு என்பவர், கணையத்தின் திசுக்களை வெளியே வளர்த்து அவற்றின் சாரத்தை ‘சர்க்கரை நோய்’ ஏற்பட்ட நாய்களுக்குக் கொடுத்தார். இதில், நாய்களின் சர்க்கரை குறைந்தது.

1921 ஆம் ஆண்டு, மருத்துவர்கள் பிரடரிக் பான்டிங், சார்லஸ் பெஸ்ட் ஆகிய இருவரும் இணைந்து, ஒரு நாயின் கணையத்தை அகற்றி அதற்கு சர்க்கரை நோய் வரவழைத்தார்கள். பின்னர் நாயின் கணையத்தினை கூழாக அரைத்து ஊசி மூலம் அதே நாய்க்குச் செலுத்தினார்கள். இதன் வழியாக, அந்த நாயின் சர்க்கரை அளவு மட்டுப்பட்டது. இந்த தொடர் ’வெற்றிகளை’த் தொடர்ந்து மாட்டுக் (Cow) கணையத்திலிருந்து ’இன்சுலின்’ முதன் முதலாக தயாரிக்கப்பட்டது.

இந்த நிகழ்வுவரை, இன்சுலின் மனிதர்கள் மீது ஆய்வு செய்யப்படவும் இல்லை; மனிதர்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படவும் இல்லை என்பதைக் குறித்துக் கொள்ளுங்கள்.

1922 ஆம் ஆண்டு லியோனார்ட் தாம்சன் எனும் 14 வயதே நிரம்பிய சிறுவனுக்கு முதன் முதலாக இன்சுலின் கொடுக்கப்பட்டது. அந்தச் சிறுவன் அலோபதி முறைப்படி, முதல் வகை (type 1) சர்க்கரை நோயாளி. இவ்வகையில் ’இயற்கையாகவே உடலில் இன்சுலின் சுரப்பு இருக்காது’ என்பது அலோபதியின் கண்டுபிடிப்பு. லியோனார்ட் தாம்சனுக்குக் கொடுக்கப்பட்ட இன்சுலின் வெற்றிகரமாக வேலை செய்தது என்பது அலோபதி உலகினால் கொண்டாடப்பட்டது. அதன் பின்னர், இன்சுலினை மனிதர்களுக்கும் வழங்கத் துவங்கினார்கள்.

மனிதர்களும் இன்சுலினும்:

லியோனார்ட் தாம்சன் தொடர்ந்து இன்சுலின் ஏற்றிக் கொண்டு தனது இருபத்து ஏழாவது வயதில் மரணமடைந்தார். அதாவது, தொடர்ந்து 13 ஆண்டுகள் இன்சுலின் குத்திக்கொண்ட பின்னர் அவர் இறந்துபோனார். அவரது மரணத்திற்குக் காரணம் என்ன என்றும் அலோபதிக்காரர்கள் காரணம் கூறியிருக்கிறார்கள். அது மிக வினோதமான காரணம். லியோனார்ட் தாம்சன் ’நிமோனியா காய்ச்சல்’ வந்து இறந்துபோனார். அதாவது, சர்க்கரை நோயிலிருந்து ’காப்பாற்றப்பட்ட’ அந்தச் சிறுவன் சாதாரண ‘காய்ச்சலால்’ இறந்துபோனான்.

இப்போதும், தொடர்ந்து இன்சுலின் குத்திக்கொள்ளும் நம் சமூகத்தினர் எண்ணற்ற உடல் தொல்லைகளுக்கு ஆளாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். சில ஆண்டுகள் தொடர்ந்து இன்சுலின் குத்திக்கொண்டவர்களுக்கு மரணம் நேரிடும்போது, எந்த மருத்துவராவது இந்த மரணத்திற்கு ’இன்சுலின்’ குத்திக்கொண்டது காரணம் எனக் கூறுகிறார்களா?

1996 ஆம் ஆண்டு முதல் இன்சுலின் மரபணு மாற்றம் செய்யப்பட்டு விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. விலங்குகளில் இருந்துதான் முதலில் இன்சுலின் தயாரிக்கப்பட்டது.

1982 ஆம் ஆண்டு முதல் ’மனித இன்சுலின்’ (Human insulin) உருவாக்கப்பட்டது. இதிலும் பல எதிர்விளைவுகள் கண்டறியப்பட்டதால், எலி லில்லி எனும் நிறுவனம் மனித இன்சுலினையே மரபணு மாற்றம் செய்து சந்தைக்குக் கொண்டுவந்துவிட்டது.

சாதாரண தக்காளி, கத்தரிக்காயில்கூட மரபணு மாற்றம் செய்யப்பட்டால் மிக மோசமான உடல்நலக் கேடுகள் விளையும் என்பதை நாம் உணர்ந்துவிட்டோம். ஆனால், இரத்ததில் நேரடியாகக் கலக்கும் ஒரு மருந்தை மரபணு மாற்றம் செய்து கொடுப்பதை இன்னும் அறிந்து கொள்ளாமலேயே இருக்கிறோம்.

உங்களுக்கோ உங்கள் உற்றாருக்கோ வழங்கப்படுவது, மரபணு மாற்றப்பட்ட இன்சுலினா அல்லது விலங்கு இன்சுலினா அல்லது மனித இன்சுலினா என்ற தகவலையாவது நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். இன்சுலின் குறித்த தனது அறிவிப்பில் பிரிட்டன் தேசிய சுகாதார சேவை அமைப்பு (NHS),

’ The NHS has always allowed patients to have an informed choice of treatment before they make their treatment decisions and this includes information about risks and benefits. In recent years, greater emphasis has been placed on informed choice as a result of NHS policy which puts patients at the centre of care and encourages involvement in their treatment decisions so that in the ideal world, patients and their doctors make decisions jointly.

The treatment of diabetes is no exception and therefore people with insulin-requiring diabetes, whether Type 1 or Type 2 diabetes should have an informed choice of insulins and should be given information about risks and benefits.’ என்கிறது.

அதாவது, ’எந்த வகையிலான சிகிச்சை தனக்குத் தரப்படுகிறது, எந்த வகை இன்சுலின் தனக்கு பரிந்துரைக்கப்படுகிறது, தனக்குத் தரப்படும் இன்சுலின் மற்றும் பிற மருந்துகளால் விளையும் நன்மைகள், இடர்ப்பாடுகள் ஆகியவற்றைப் பற்றி ஒவ்வொரு நோயாளியும் அறிந்திருக்க வேண்டும். இந்த செயல்பாட்டில் மருத்துவர்களும் நோயாளிகளும் இணைந்துதான் முடிவெடுக்க வேண்டும்’ என்கிறது பிரிட்டன் தேசிய சுகாதார சேவை அமைப்பு.

இந்திய அரசின் சட்டங்களின்படியும் மேற்கண்ட செய்திகளை அலோபதி மருத்துவர்கள் தங்களிடம் வரும் மக்களிடம் வெளிப்படையாகக் கூற வேண்டும்.

மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம்’ 1940 – ஷெட்யூல் – ‘J’
“Drugs and Cosmetics Act, 1940, 1945, 1995, ‘Schedule J’ contains a list of 51 disease and ailments (by whatever name described) which a drug may not purport to prevent or cure or make claims to prevent or cure”

‘மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம்’ 1940 ல் இயற்றப்பட்டு பின்னர் 1945, 1995 ல் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் ஷெட்யூல் – ‘J’ என்ற பிரிவின் கீழ் 51 வகை ஆங்கில மருத்துவத்தின் வியாதிகள் எழுதப்பட்டுள்ளன. இந்த வியாதிகள் ஆங்கில மருத்துவத்தின் மருந்துகளைக் கொண்டு குணப்படுத்த முடியும்!’ என்றோ, ‘மருந்துகளைக் கொண்டு குணப்படுத்திக் காட்டுகிறேன்!’ என்றோ கூறுதல் கூடாது என்று எச்சரிக்கிறது.

இங்கு என்ன நடக்கிறது என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள்!

இன்சுலின் குத்திக் கொள்ளும் அளவினை எந்த நேரமும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என்பதுதான் உலகளவிலான அலோபதி அமைப்புகள் செய்யும் எச்சரிக்கை. அவ்வாறு கவனிக்காமல்,

அளவுக்கு அதிகமான இன்சுலினை குத்திக்கொண்டால் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும் என்கிறது கீழேயுள்ள பட்டியல்:

மன அழுத்தம், சோர்வு, மிகையான தூக்க உணர்ச்சி, அதீத அயற்சி, தலைவலி, பசி, எதிலும் கவனம் செலுத்த இயலாத நிலை, எரிச்சலான உணர்ச்சி, குமட்டல், நரம்புத் தளர்வு, ஆளுமையில் மாற்றம் ஏற்படுதல், அதிவேகமான இதயத் துடிப்பு, நிதானமின்மை,நிம்மதியான தூக்கமின்மை, குழறியபடி பேசுதல், வியர்வை, கூச்ச உணர்வு, நடுக்கம்,செயல்பாடுகளில் / அசைவுகளில் நிதானமற்ற நிலை

மேலே உள்ளவை பொதுவான ’இன்சுலின் அளவு அதிகரித்தால்’ ஏற்படுபவைதான்.

இன்சுலின் அளவு மிகவும் கூடுதலாகிவிட்டால் என்னென்ன ஏற்படும் என்பது கீழே உள்ள பட்டியல்:

ஆழ் மயக்கம் (coma),தன்னிலையிழத்தல்,தோல் வெளிறிப் போகும் நிலை,வலிப்பு

மேற்கண்ட பட்டியல்கள் ஏதோ மரபுவழி மருத்துவர்களின் கண்டுபிடிப்பு அல்ல. பிரிட்டனில் இயங்கும் diabetes.co.uk எனும் மிகப் பெரிய நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை.

நவீன மருத்துவம்!

ஒருவர் சர்க்கரை நோய்க்காக அலோபதி மருத்துவரை அணுகினால், ஒன்று அந்த நோயைத் தீர்க்கும் மருந்தைத் தர வேண்டும் அல்லது ’எங்களிடம் மருந்து இல்லை’ என்று ஒப்புக்கொள்ள வேண்டும். மாறாக, அவரது நோயையும் தீர்க்காமல், சர்க்கரையைக் காட்டிலும் மிகக் கொடுமையான எண்ணற்ற நோய்களை உருவாக்கும் மருந்துகளை எழுதிக் கொடுக்கிறார்கள் அலோபதிக்காரர்கள். இதற்குப் பெயர்தான் ‘நவீன மருத்துவம்’!

இதைக் கேள்வி கேட்பவர்கள் ‘பிற்போக்குவாதிகள்’ , ‘அறிவியலே தெரியாதவர்கள்’.

இன்சுலின், பயோக்ளைடோசோன் உள்ளிட்ட மருந்துகளினால் விளைபவை பக்க விளைவுகளா (side effects)? நேர் எதிர் விளைவுகளா (Adverse effects)? என்பதை இப்போதாவது நம் சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்.

மரபுவழிகளைப் பொறுத்தவரை, ’உடலின் இயற்கை ஆற்றலுக்கு மீண்டும் இன்சுலின் சுரக்கும் ஆற்றல் உண்டு’ என்பதுதான் கோட்பாடு. பெரும்பாலான மரபுவழிகள், உடலின் இயற்கை ஆற்றலைத் தூண்டும் மருந்துகளையும், செயல்முறைகளையும் மட்டும்தான் கொண்டுள்ளன. ஆகவேதான், பல ஆயிரம் ஆண்டுகளாக, நம் முன்னோர் சர்க்கரை நோயைக் கண்டு அஞ்சாமல் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்துவந்தனர்.

நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் போன்ற அலோபதி முறை, ஆலமரங்களாக நிலைத்து நிற்கும் மரபுமுறைகளை வீசி எறிய முயற்சித்து மனித உயிர்களுடன் விளையாடிக் கொண்டுள்ளது.

எதற்கெடுத்தாலும் செயற்கையான வழிமுறைளைக் கண்டறிந்து, உடலின் இயற்கை ஆற்றலை, இயல்பான மனநிலையை அழித்து மரணப் பெட்டிக்கு அனுப்பும் கொள்கையுடன் இருக்கிறது அம்முறை.

ஒருபுறம் எளிய தீர்வுகள், மறுபுறம் மக்களின் உயிர்களுடன், பொருளாதாரத்துடன் சூதாட்டம் நடத்தும் மருத்துவ முறை இவை இரண்டையும் கண்டு மனம் பொறுக்காத உங்களில் நானும் ஒருவன். தீய வழிகளைப் புறக்கணித்து, எளிய தீர்வுகளை சமூகத்தின் முன்னே கொண்டு நிறுத்தும் இயற்கையின் பிள்ளைகளாக செயல்படுவோம்.

நன்றி – ம.செந்தமிழன்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.