இவ்வளவு வருடங்கள் அரசியல் வேண்டாமென்றிருந்த சகாயம் ஐஏஎஸ் திடீரென்று கொடி பிடித்து அரசியலுக்கு ஏன் வருகிறார் ? அவருக்கு பின்புலமும் பணமும் திடீரென்று ஒரே நாளில் எப்படி கிடைத்தது ?
கமல்ஹாசனின் மநீமவுக்கு எப்படி திடீரென பணம் கிடைத்ததோ அப்படித்தான்.

சகாயத்தின் பேச்சுக்களைக் கூர்ந்து கவனித்தால், அவரது புதிய கட்சி அறிவிப்பு பேச்சு உட்பட, அவர் ஊழல் மட்டுமே தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினை போல பேசுவதை கவனிக்கலாம். மற்றபடி நேர்மை , எளிமை , கருமை தான் அவருக்குத் தெரிந்த வார்த்தைகள்.

நீட் , விவசாய சட்டங்கள் , டீமானடைசேஷன் , பெட்ரோல் விலை உயர்வு, மதவெறி பாஜக, உழவர்கள் போராட்டம், இவையெல்லாம் சகாயம் கண்ணுக்கு ஏன் தெரியவில்லை ? கவனித்துப் பாருங்கள். இனியும் அவர் கண்ணுக்கு இவை தெரியாது. சகாயம் ஐஏஎஸ் பதவியில் இருந்த 6 வருடமும் ஊழல் மிகுந்த அதிமுகவாலும் , பாஜகவாலும் ஓட ஓட விரட்டப்பட்டவர். தூக்கியடிக்கப்பட்டவர். ஆனால் இன்று அரசியல் கட்சி ஆரம்பித்த பின்னும் அவர் தன்னை துன்புறுத்திய இந்தக் கட்சிகள் பற்றி வாயே திறக்கவில்லை. ஏன் ? பயமா ? எஜமான விசுவாசமா ? மோடிக்கோ, பாஜகவுக்கோ எதிராக இன்றுவரை சகாயம் ஒரு வார்த்தை பேசவில்லை.

வடக்கில் அன்னா ஹாசாரே என்கிற காந்தியவாதி காங்கிரஸ் ஊழல் மட்டுமே இந்தியாவின் பெரும் பிரச்சினை என்று பேசினாரே நியாபகம் வருகிறதா ? அதில் பாஜக ஆதாயம் அடைந்ததே. இப்போது அதே அன்னா ஹாசாரே ஏன் பேசவில்லை ? மோடி ஆட்சியில் ஊழலே இல்லையா என்ன ? எக்கச்சக்கமாய் இருக்கிறது. நம் சகாயம் இன்னொரு ஹசாரே முகம்.

சகாயமும் , கமலஹாசனும் , அண்ணாமலை ஐபிஎஸ்ஸும் பாஜகவின் ‘போலியான நேர்மை முகம்’ காட்டும் பகடைக்காய்கள்.

தேர்தல் நேரத்தில் EVMல் குளறுபடிகள் செய்ய பாஜகவுக்கு மேலும் சில புதிய குட்டிக் கட்சிகள் தேவை.

ரஜினி , கமல் , சகாயம், சரத்குமார் என்று பலரும் களமிறக்கப்படுவார்கள். எதற்கு ? இவர்களால் ஓட்டுக்கள் பிரிந்துவிட்டன என மக்களை நம்பவைப்பதற்கு மட்டுமே. தேர்தல் முடிவுகளில், ஒரு தொகுதியில் ஜெயிக்கவேண்டிய நபர் பாஜக கூட்டணியாக இல்லாவிட்டால் அங்கே EVM குளறுபடிகள் ஆரம்பமாகும்.

EVMல் பித்தலாட்டங்கள் செய்து, ஜெயிக்கும் நபரின் ஓட்டுக்கள் இந்த புதிய நேர்மையாளர்களுக்கு, அதாவது ‘நல்லவர்’களுக்கு பிரித்து போடப்படும். பாஜக சார்பு வேட்பாளருக்கு இவர்கள் எல்லாரையும் விட கொஞ்சமே கொஞ்சம் அதிகமாக ஓட்டுக்கள் விழும்படி போடப்படும்.

இன்று புதிதாய் அரசியலுக்கு வந்த சகாயமும், கமலும் 40 ஆயிரம் ஓட்டுக்கள் ஒரு தொகுதியில் திடீரென வாங்கினால் நீங்கள் சந்தேகப்படுவீர்களா ? மாட்டீர்கள் தானே ?

ஆம். நேர்மையாளர் சகாயம் 40 ஆயிரம் ஓட்டு வாங்குகிறார் என்பது நம்பி விடக்கூடிய ஒரு விஷயம் தான். அந்த நம்பகத்தன்மைதான் EVM மோசடி செய்ய தேவையான விஷயம்.

இப்படி இந்த நேர்மையாளர்களோடு சேர்ந்து பாஜகவின் முதல்வர் வேட்பாளர், ஆட்டுக்குட்டி மேய்ப்பாளர் அண்ணாமலைக்கு 40 ஆயிரத்து ஐநூறு ஓட்டுக்கள் விழுகின்றன என்று கொள்ளுவோம். 500 ஓட்டுக்கள் தானே அதிகம்? இதுவும் நம்பக்கூடியதாக மாறிவிடும் இல்லையா ? ஐபிஎஸ் அதிகாரி , ஊழலை ஒழிப்பவர் etc etc .

இவர்கள் எல்லோரும் சேர்ந்து அத்தொகுதியில் பல வருடங்களாக சேவை செய்து வரும் , வெற்றி பெறும் வாய்ப்புள்ள, பெரிய , மாநில (ஊழல்?) கட்சியின் வேட்பாளரின் ஓட்டுக்களை ஆளுக்கு 40 ஆயிரம் பிரித்துவிட்டார்கள் என்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் (EVM) சொல்லும். இப்படி ஓட்டுக்கள் பிரிந்த நிலையில் ஜெயிக்கப்போகும் மாநிலக் கட்சியின் வேட்பாளரை விட வெறும் 501 ஓட்டுக்கள் மட்டுமே கூடுதலாகப் பெற்று பாஜக வேட்பாளர் அண்ணாமலை வெற்றி பெற்று விடுவார்.

இதுதான் மக்கள் நம்பவைக்கப்படும் தேர்தல் முடிவு.

இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், EVM மூலம் தில்லுமுல்லுகள் செய்து வெற்றி பெற்றாலும் , மக்கள் அதை நம்பும்படியாக செய்யவேண்டும் என்பதே பாஜகவின் முக்கிய நோக்கம்.

ஏனெனில் EVM ஐ, அதாவது மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை, மக்கள் நம்பவில்லை என்றால் சகாயமோ , கமலோ , ரஜினியோ அரசியலுக்கு வந்து பாஜகவுக்கு பிரயோசனமே இல்லை. ஏனெனில் கடந்த காலங்களில் , இப்படித் தோன்றும் திடீர்த் தலைவர்கள் யாரும் மக்கள் நம்பிக்கையை உடனே ஓட்டுக்களோ , வெற்றியோ பெற்றதேயில்லை.

எனவே தேர்தல் நேரத்தில் தோன்றியிருக்கும் இந்தப் புதிய மின்மினிகள் நீங்கள் நினைப்பது போல விண்மீன்களல்ல. இவர்கள் ஆளும் பாஜக நடத்தப் போகும் EVM தில்லுமுல்லுகளை தேர்தல் முடிவுகளில், ஓட்டுக்களை பிரித்துப் போட்டு விளையாடப்படும் விளையாட்டை மறைத்து, தேர்தல் நேர்மையாக நடந்ததாக நம்பவைக்க பலியிடப்படும் ‘நேர்மையான’ வெள்ளாடுகள்.

இந்த வெள்ளாடுகள் தேர்தல் முடிந்தவுடன், அன்னா ஹாசாரே போல, காற்றில் கரைந்து மறைந்து போவார்கள்.

பாஜக நடத்தும் இந்த தேர்தல் ஆட்டத்தில் சகாயம் போன்ற நல்லவர்களுடன், இந்த நல்லவர்கள் மேல் நன்மதிப்பு கொண்ட பல லட்சம் அப்பாவி இளைஞர்களும், பாஜகவின் கருவேப்பிலையாக உபயோகப்பட்டு வீணாகப் போவார்கள். அடுத்த 5 வருடங்கள் பாஜகவின் கையில் சிக்குண்டு தமிழகம் சின்னாபின்னமாகும்.

இந்த தேர்தல் சதுரங்க வேட்டையை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டிய நேரம் இது.

இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

ஒருவேளை சீமான்,சகாயம் , கமல் , ரஜினி போனறோர் அடுத்த ஐந்தாண்டுகள் ஊழலை எதிர்த்து , பாஜகவையும் எதிர்த்து போராடி நிற்பார்கள் எனில் அப்போது போய் சகாயத்துடன் இணைந்து நில்லுங்கள்.

இப்போது தமிழகத்தின் மாநிலக் கட்சிகள் பெரும்பான்மை சீட்டுக்கள் வெற்றி பெறுவதைத் தடுக்கும் நோக்குடன், தேர்தல் வர இருக்கும் இந்த ஒரு வருடத்திற்குள் தோன்றியிருக்கும் இந்த திடீர் புரட்சியாளர்களை நம்பாதீர்கள். ஓட்டுப் போடாதீர்கள்.

அப்போதுதான் இவர்களை முன்னிறுத்தி செய்யப்படப் போகும் பாஜகவின் EVM மோசடிகளை நாம் தோற்கடிக்க முடியும்.

இன்றைய தேர்தல் தேவை பாஜகவை உள்ளே நுழையவிடாத ஒரு மாநில எதிர்க்கட்சியின் கையில் அதிகாரம் செல்வதே.

— அம்பேதன்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.